Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, October 10, 2009

நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு பாகம் -3

பெரியாரிடம் ஜனநாயகத் தன்மை இல்லை: தியாகு
நேர்காணல்: மினர்வா & நந்தன்


இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி...

சிறையில் இருந்து வெளியே வந்ததும் சி.பி.எம்மில் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்?

Thiyagu நான் கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. சி.பி.எம். தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு, ஈ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்தது.

கேரளாவில் நெருக்கடி நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்பு போராட்டமே நடத்தியது. தலைவர்களைக் கைது செய்த இந்திராகாந்தி அரசு அவர்களை மிசாவில் அடைக்கவில்லை. வலதுசாரி பாசிசக் கட்சிகளை அடக்கத்தான் இந்த நெருக்கடி நிலை என உலகிற்கு இந்திராகாந்தி அறிவித்தார். இதற்கு சி.பி.ஐ. ஆதரவு தெரிவித்தது. சோவியத் அரசும் இதை நியாயப்படுத்தியது. நெருக்கடி நிலை, இடதுசாரிகளுக்கு எதிரானதல்ல என அறிவிக்கத்தான் தலைவர்களை அரசு கைது செய்யவில்லை.

ஆனால் அந்தத் தலைவர்களாலும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்கள் நடத்திய பத்திரிகைகளும் முன் தணிக்கை செய்யப்பட்டே வந்தது. இந்த நடவடிக்கைகளால் எங்களுக்கு சி.பி.எம் மேல் பெரிய மரியாதை இருந்தது. இந்திய ஆளும் வர்க்கம் பற்றிய பார்வை, இந்திய முதலாளிகளின் ஆதிக்கம், விவசாயம் பற்றிய தெளிவு போன்றவற்றில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அறிவியல் பூர்வமான பார்வை இருந்தது.

அதேபோல் சீனத்தின் பாதையே எங்கள் பாதை என்று சொல்லும் எம்.எல். கட்சிக்கும், சோவியத் என்ன செய்தாலும் சரி என்று சொல்லும் சி.பி.ஐ. கட்சிக்கும் இடையே சுதந்திரமான ஒரு கட்சியாக சி.பி.எம். தான் இருந்தது. இதனால் உலக கம்யூனிச இயக்கங்கள் எதுவும் சி.பி.எம். கட்சியை ஆதரிக்கவில்லை. பெய்ஜிங் வானொலியில் இவர்களை 'சர்வதேச அனாதைகள்' என்றே கூறினார்கள்.

சீனாவின் ஒரே தலைவர் மாசேதுங் தான் என அவர்கள் அறிவித்தபோது இங்குள்ள மார்க்சிஸ்டுகள் அதை விமர்சித்தார்கள். 'ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் தவறே செய்ய மாட்டார், எனவே அவரையே பின்பற்ற வேண்டும் என கத்தோலிக்கர்கள் கூறுவது போல் இருக்கிறது' என விமர்சித்தார்கள். ஏ.பாலசுப்பிரமணியமும் 'சோவியத்தோ, சீனாவோ எந்த ஒரு இடமும் குருபீடம் போல் செயல்பட முடியாது' என எழுதினார். இவ்வாறு அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபட்டது எங்களை ஈர்த்தது. இதனால் சிறையிலிருந்தபோதே சி.பி.எம்மில் சேர்ந்தோம்.

அமைப்பு கட்டுவது, பத்திரிகை நடத்துவது, போராடுவது என சிறைக்குள் வழக்கம் போல் எங்களது செயல்பாடுகள் தொடர்ந்தன. அந்த நேரத்தில் தான் ஈழப்போராட்டம் வலுப்பெறுகிறது. அதில் சி.பி.எம். எடுத்த நிலைப்பாட்டில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. அவர்கள் முற்றிலும் இந்திய அரசின் நிலையை ஆதரித்தார்கள். ஈழப்போராட்டம் நியாயமானது என்ற கருத்து எங்களுக்கு இருந்தது.

ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக சிறைக்குள்ளேயே பெரிய எழுச்சி ஏற்பட்டது. மதுரை சிறைச்சாலையில் ஜெயவர்த்தனேயின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. நான் அப்போது திருச்சி சிறையில் இருந்தேன். அங்கு 1500 கைதிகளையும் திரட்டி சிறைக்குள் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினோம். அதில் ஈழச்சிக்கல்களை விளக்கி நான் பேசினேன்.

83-ல் காலவரையற்ற சிறைப்போராட்டத்தை தொடங்கினோம். அதில் முதல் கோரிக்கையாக ஈழப்போராட்டத்தை நியாயப்படுத்தினோம். அதைத் தவிரவும் பத்தாண்டுகள் ஆன ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக அந்தப் போராட்டம் நடைபெற்றது. அதில் ஒருநாள் உண்ணாவிரதமிருந்து அந்தப் பணத்தை ஈழ அகதிகள் நிதிக்காக அரசுக்கு அனுப்பினோம். இதற்காக சிறையில் இருந்து பதினைந்து நாட்கள் விடுப்பில் வெளியே போய் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.

அதற்கு முன்னதாக 79ல் சிறைக்குள் ஒரு கைதியை போலீசார் அடித்துக் கொன்று விட்டு தற்கொலை செய்து விட்டதாகக் கூறினார்கள். இதை எதிர்த்து கைதிகள் சிறைக்குள் போராட்டம் நடத்தினார்கள். போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. தேவாரம் தான் அபோது டி.ஐ.ஜி.யாக இருந்தார். கைதிகள் மீது துப்பாக்கிச்சூடும், லத்தி சார்ஜும் நடைபெற்றது. அதன்பிறகு தான் சிறைக்கைதிகளுக்காக கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் உருவாவதற்கு வெளியிலிருந்த சி.பி.எம். தோழர்கள் தான் கடுமையாகப் போராடினார்கள்.

83 சிறைப்போராட்டத்திற்கு பிறகு எனக்கும் கட்சிக்கும் இடையே ஈழப்போராட்டத்தை முன்னிறுத்தி கருத்து வேறுபாடுகள் உருவானது. தேசிய இனச்சிக்கலை வலியுறுத்தி ஈழப்போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 85ல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். வெளியே வந்ததும் சி.பி.எம். கட்சியின் முழுநேர ஊழியராகச் சேர கட்சி அழைத்தது. மூலதனம் பதிப்பு வேலைகள் காரணமாக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில் கட்சியுடனான என்னுடைய முரண்பாடும் அப்படியே தான் இருந்தது. சிறையில் இருக்கும்போது, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.பரமேஸ்வரன், லெனின் கூறியதாக ஒரு கருத்தை வெளியிட, அதை நான் மறுத்தேன். இதனால் அவருக்கும் எனக்கும் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. அதனால் நான் சிறையில் இருந்து விடுப்பில் வெளியே வரும்போது எனக்கு எந்த உதவிகளும் செய்யக்கூடாது என தோழர்கள் சிலருக்கு அவர் கூறியிருந்தார்.

செம்மலர் பத்திரிகையில் பாரதிதாசன் குறித்து கட்டுரை ஒன்று வெளியானது. அதில் பாரதியின் வழித்தோன்றல் தான் பாரதிதாசன் எனவும், அவரைப்போலவே இவரும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தினார், இடையில் திராவிடம் என்று போனாலும் இறுதியில் மீண்டும் அவர் பாரதியின் கருத்துக்கு வந்துவிட்டார் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதை மறுத்து நான் எழுதினேன்.

'பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இருந்த தனிப்பட்ட உறவு என்பது வேறு. பாரதியார் அடிப்படையில் இந்திய தேசியக்கவி. பாரதிதாசன் தமிழ்த்தேசியக் கவி. பாரதிதாசன் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதில் இருந்து இறுதிக்காலம் வரை அந்த நிலைப்பாட்டில் தான் இருந்தார். இந்திய-சீன எல்லைப்போரின் போது, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும், நேரு தான் இந்தியாவின் தலைவராக இருக்க வேண்டும் என்ற கருத்து தான் பெரியாருக்கு இருந்தது. அதைத்தான் பாரதிதாசனும் பிரதிபலித்தார். அதை வைத்துக்கொண்டு தான் இவர்கள் அவரை இந்திய தேசியக்கவி என்று கூறுகிறார்கள்.

பின்னாட்களில் சம்பத்தின் தமிழ்த்தேசியக் கட்சியுடனும், சி.பா.ஆதித்தனாருடைய நாம் தமிழர் கட்சியுடனும் அவருக்கு நெருக்கம் அதிகமானது. அந்த நாட்களில் பெரியாரையே அவர் திட்டிக்கொண்டிருந்ததாக அவருடைய மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் கடைசிவரை தமிழ்த்தேசியம் பக்கம் தான் நின்றார். எனவே அவரை இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்தினார் என்று எழுதுவது சரியல்ல' என்று எழுதினேன்.

இந்தக் கட்டுரையை வெளியிட செம்மலர் பத்திரிகை மறுத்து விட்டது; கட்டுரை பாலம் இதழில் வெளிவந்தது. இப்படி தொடர்ச்சியாக கட்சியுடன் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டன. 87ல் இந்திய-இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதை சி.பி.எம். ஆதரித்தது. இதற்கு மேல் சகித்துக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலை அப்போதுதான் ஏற்பட்டது. இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள சந்துரு அப்போது வழக்கறிஞராக இருந்தார். அவர் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர். இந்தியா இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவதைக் கண்டித்து நடைபெற்ற மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டார்.

கட்சி அவரை அழைத்து 'ஏன் கலந்து கொண்டீர்கள்' என விளக்கம் கேட்டது. "நான் மனுஷன், அதனால் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டேன்" என அவர் விளக்கம் சொன்னார். அதனையடுத்து சந்துரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் இனி கட்சியில் நீடிக்க முடியாது என்பதை உணர்த்தின. நான் அப்போது மூலதன வேலைகள் காரணமாக அம்பத்தூரில் தங்கியிருந்தேன். அம்பத்தூரை விட்டு வெளியே சென்று நான் பேசக்கூடாது என்று கட்சி என்னை முடக்கியது.

தேசிய இனச்சிக்கல்கள், ஈழப்பிரச்சனை தொடர்பாக கட்சிக்குள் ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து நிராகரித்தார்கள். எம்.ஜி.ஆர் இறந்த தினத்தன்று கமிட்டி கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தடைபட்டிருந்ததால், திரும்பிச் செல்ல முடியாமல் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தோம்.

'பேசுவதற்கு ஒன்றுமில்லை, இன்றாவது ஈழப்பிரச்சனை குறித்துப் பேசுவோம்' என வலியுறுத்தி நான் பேச வைத்தேன். அன்று உறுப்பினர்களுக்குள் கடுமையான மனக்கசப்பு ஏற்பட்டது. ஜோதிபாசு பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒன்றாகவும், தீக்கதிரில் வேறாகவும் வெளிவந்திருந்தது. அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு தீக்கதிர் பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிடுகிறது என வாதிட்டேன்.

அந்த நேரத்தில் சி.பி.எம். மாவட்ட மாநாடு நடைபெற்றது. நான் கமிட்டி பதவியை விட்டு விலகினேன். இதற்குக் காரணமாக, 'என் கீழே இருக்கும் உறுப்பினர்களிடம் என்னால் அதிக நாட்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை விட்டு விலகுகிறேன்' என்று சொன்னேன். இதுதொடர்பாக உ.ரா.வரதராஜனுடன் கடுமையான விவாதம் நடைபெற்றது. 'கமிட்டி பதவியை விட்டு விலகினாலும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்' என்று அவர் கூறினார். 'நீங்கள் யார் என்னைக் கண்காணிப்பதற்கு, நாங்கள் கண்காணிக்க வேண்டிய நிலையில் தான் தலைவர்கள் இருக்கிறீர்கள்' என்று கூறினேன்.

மாநாட்டில் எனக்குப் பேசுவதற்கு எட்டு நிமிடம் ஒதுக்கப்பட்டது. நான் பேச ஆரம்பித்ததுமே குறுக்கிட்டு, 'தி.மு.க.வில் பேசுவது போல் பேசக்கூடாது' என்றார்கள். 'நீங்கள் சோ.ராமசாமி பேசுவது போல் பேசாதீர்கள்' என நான் பதில் கூறினேன். இனிமேல் கட்சிக்குள் போராடி ஜெயிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

நேருவின் மொழிக்கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்று நல்லசிவம் அறிக்கை கொடுத்தார். அது ஒரு ஏமாற்று மோசடி என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன். 'அனைத்து மொழிகளும் சமம் என்கிற லெனினின் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா, அல்லது இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் தேவை என்கிற நேருவின் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா?' எனக் கேட்டிருந்தேன். அவர் கட்சிக்குள் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. என்னை அழைத்து அதுகுறித்து விவாதித்தார். பேச்சு புலிகள் பக்கம் திரும்பியது. 'புலிகள் போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை, ஆனால் தொழிற்சங்கத்தில் கிடைப்பது போல இடைக்கால நிவாரணம் தற்போது கிடைப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் இல்லையா?' என்று கேட்டார்.

'இடைக்கால நிவாரணம் தொழிற்சங்கத்தை கலைப்பது போல இருக்கக்கூடாது' என்று நான் சொன்னேன். இதேபோல் பல வாக்குவாதங்கள் நடைபெற்றன. 89 செப்டம்பர் 11ம் நாள் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த நாள். நாங்கள் மூன்று தோழர்கள் இணைந்து 'திலீபன் அறிமுக மன்றம்' ஒன்றை ஆரம்பித்தோம். அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஈழச்சிக்கல் குறித்து நான் விரிவாகப் பேசினேன். கூட்டத்தில் சி.பி.எம்மை கடுமையாகத் தாக்கிப் பேசினேன்.

கூட்டம் நடைபெறப்போகிறது என்று அறிந்தவுடனே, நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என கட்சியில் இருந்து சொன்னார்கள். அதைமீறி நான் கலந்து கொண்டேன். மறுநாள் தீக்கதிர் பத்திரிகையில் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது. சி.பி.எம்முடன் உறவு முறிந்து போன பின்னணி இதுதான். அவர்கள் பேச்சளவில், எழுத்தளவில் இந்தியாவை பல்தேச இனமக்களை கொண்ட நாடாகக் கருதினாலும், அவர்களின் வேலைத்திட்டம் இந்தியாவை ஒரே நாடாகக் கருதுகிறது.

சாதி ஒழிப்பு குறித்து தனியான சிந்தனையோ, வேலைத்திட்டமோ அவர்களிடம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மிச்சசொச்சம் தான் சாதி. வர்க்கப் போராட்டம் நடந்து முடியும்போது சாதி தானாக ஒழிந்து விடும் என்பது தான் அவர்களது கருத்து. இதனால் தான் இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. இட ஒதுக்கீடு தொழிலாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, முதலாளித்துவ ஒழிப்பு ஐக்கியத்தை அழித்து விடும் என்பது அவர்கள் கருத்து.

கட்சியின் பார்ப்பனத் தலைமை மட்டுமே இதற்குக் காரணமல்ல. கட்சியின் அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது. கட்சிக்குள் முழுநேர ஊழியர்களாக வருபவர்கள் எல்.ஐ.சி. சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் போன்றவற்றில் இருந்து தான் கட்சிக்குள் வருகிறார்கள். மண்டல் குழு பரிந்துரை, இட ஒதுக்கீடு போன்றவை இந்த பார்ப்பன ஊழியர்களை நேரடியாக பாதிக்கும். எனவே இதனை அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். இதைத்தான் கட்சித்தலைமை பிரதிபலிக்கும். சமூகநீதிக் கொள்கையில் அவர்களுக்கு உண்மையான அக்கறை கிடையாது.

தேசிய இனச்சிக்கல், சாதிப் பிரச்சனைகள் போன்றவற்றில் ஆளும் வர்க்கத்தின் பார்வை தான் அவர்களின் பார்வை. இடது வண்ணம் பூசப்பட்ட ஆளும் வர்க்கப் பார்வை. அடிப்படையில் அவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பக்கம் நிற்கிறார்கள். நாம் தமிழ்த்தேசியம் சார்ந்தோ, சாதி ஒழிப்பு சார்ந்தோ பேசினால் அவர்களுக்கு அது எதிரானது. எனவே நான் அவர்களோடு மாறுபட்டேன்.

அப்போதிருந்த சி.பி.எம். நிலைக்கும், இப்போதிருக்கும் நிலைக்கும் ஏதாவது வித்தியாசத்தை காண்கிறீர்களா?

முன்னைவிட மோசமாக இருக்கிறது. 64ல் கட்சியின் முதல் வேலைத்திட்டம் குறித்த விவாதம். அதில் தேசிய இனச்சிக்கல் குறித்துப் பேசுகிறார்கள். கருத்து வேறுபாட்டால் கட்சி இரண்டு பிளவாக நின்றது. ஏ.பாலசுப்பிரமணியம், சுந்தரைய்யா போன்றவர்கள் 'தேசிய இனப்பிரச்சனை என்பது லெனினின் கொள்கை தான். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் பிரிந்து போகும் உரிமையோடு கூடிய, சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனங்களின் ஐக்கியமாக இருக்க வேண்டும்' என்றார்கள்.

1912லேயே ஸ்டாலின் "இந்தியாவில் தேசிய இனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வளர்ச்சி இந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பின்னாளில் தேசிய இனங்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்தும்" என்று எழுதினார். 20களிலேயே இந்தியாவில் மொழிவழி தேசிய இனங்கள் தங்களை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டார்கள். அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம். தமிழ்த்தேசியம் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் முயற்சி அது. பஞ்சாபில் 'அக்கார்டி' இயக்கம் ஒருபுறம் பிரிட்டனை எதிர்த்துக் கொண்டே 'பஞ்சாப் பஞ்சாபிகளுக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்தது.

இதற்கெல்லாம் முன்னோடியாக வங்காளம் திகழ்ந்தது. வந்தே மாதரம் பாடலை சட்டர்ஜி எழுதும்போதே ஏழுகோடி மக்கள் தொகை என்றுதான் எழுதினார். பாரதியார் அதை முப்பதுகோடி என்று மொழிபெயர்த்தார். ஏனெனில் சட்டர்ஜி எழுதியது வங்கதேசத்துக்கான பாடல்தான். பிற்காலத்தில் ஆந்திராவில் எழுந்த தெலுங்கானா போராட்டம் என்பது தெலுங்கு தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் தான்.

ஆனால் கம்யூனிஸ்டு கட்சி 41ல் பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையின் போது தான் தேசிய இனச்சிக்கலுக்கு முக்கியத்துவம் தருகிறது. அதற்காக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. இறுதியில் இந்தியா என்பது பிரிந்து போகும் உரிமையுடைய பல்வேறு தேசிய இனங்களை உடைய ஒரு பல்தேசிய நாடு என அறிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில் தான் பாகிஸ்தான் தனிநாடு கேட்கிறது. எனவே அதை ஆதரிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்கள்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரங்கள், 'நேரு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், எனவே அவரது கையை வலுப்படுத்த வேண்டும்' என சீனா, சோவியத் கருதியது போன்ற பல்வேறு பின்னணிகளில் கம்யூனிஸ்டு கட்சி தேசிய இனச்சிக்கலில் தங்களுக்கிருந்த கொள்கையை கை கழுவியது. ஈ.எம்.எஸ். போன்ற தலைவர்கள் 'சுயநிர்ணய உரிமையை ஆதரித்தால் இந்திய பாட்டாளி வர்க்கம் பிளவுபட்டு விடும். ஆனால் மார்க்சியக் கட்சி என்ற முறையில் தேசிய சுயநிர்ணய உரிமையை எதிர்க்க முடியாது, அதே நேரத்தில் அதை வலியுறுத்தவும் கூடாது' என்ற நிலையை எடுத்தார்கள்.

வெளிப்படையாக 'சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டும்' என்ற மற்றொரு கருத்தும் அங்கே வெளிப்பட்டது. எனவே இதை விவாதித்து முடிவெடுப்பதாக அறிவித்து 72 வரை எட்டு வருடங்கள் கட்சிக்குள் விவாதங்கள் நடைபெற்றன. மாநிலங்களில் இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக (பி.ராமமூர்த்தியை எதிர்த்து, ஏ.பாலசுப்பிரமணியத்திற்கு ஆதரவாக) அதிகம் பேர் வாக்களித்திருந்தார்கள். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இறுதியில் இந்தியா விருப்பம் சார்ந்து இணைந்த தேசிய ஒன்றியமாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இது கட்சியின் தீர்மானம்.

இந்தியாவுக்குச் சொன்ன இந்த கருத்தை, அளவுக்கு மீறி அவர்கள் இலங்கையில் திணித்து விட்டார்கள். சமீபத்தில் கொசோவாவுக்கும் விடுதலை கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் வங்கதேசப் பிரிவை ஆதரிக்கிறார்கள். ஏனெனில் வங்காளத்தில் கட்சி பெரிய கட்சி. அதனால் வங்க மக்களின் தேசிய உணர்வை எதிர்த்து நிற்க முடியவில்லை. இதற்கு வங்க தேசிய உணர்வு மட்டும் காரணமல்ல. இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கை இவர்களது கொள்கையாக இருப்பதும் ஒரு காரணம்.

வங்கதேசப்பிரிவினை பாகிஸ்தானை பலவீனப்படுத்தும் எனவே இந்திய ஆளும் வர்க்கம் அதை ஆதரிக்கிறது. கம்யூனிஸ்டுகளும் ஆதரிக்கிறார்கள். இந்தியப்படையை இலங்கைக்கு ஆளும் வர்க்கம் அனுப்பியபோது அதை வரவேற்றார்கள். இப்படித்தான் முன்னைக் காட்டிலும் சி.பி.எம்மின் நிலைமை பலமடங்கு மோசமாகி விட்டது.

சி.பி.எம்மில் இருந்து வெளியேறியதும் தமிழ்த் தேசிய செயல்பாட்டில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினீர்கள் அல்லவா?

இந்தியா இலங்கைக்கு ராணுவம் அனுப்புகிறது. ஈழத்தில் தமிழ்மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். சுப.வீரபாண்டியனுடன் இணைந்து 93ல் தமிழ்த் தமிழர் இயக்கம் ஆரம்பித்தோம். அவர் அப்போதே சொன்னார் "உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு தத்துவார்த்த சிந்தனை கிடையாது, தி.மு.க. நல்லதாக இருந்தால் அதில் போய் இணைஞ்சுக்கலாம். ஆனா இருக்கிற தி.மு.க. நல்ல தி.மு.க.வா இல்லை அதுதான் பிரச்சனை". அதன்பிறகு பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. விவாதங்களின் முடிவில்தான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆரம்பமானது.

நக்சலைட் வாழ்க்கையிலும் சரி, தமிழ்த்தேசியவாதியாகவும் சரி பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்திருக்கிறீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

நக்சலைட் வாழ்க்கையின் போராட்ட வடிவமே ஆயுதப்போராட்டம் தான். சிறையில் இருக்கும்போதும் ஆயுதப் போராட்டத்தை நடத்த விரும்பினோம். வாய்ப்பு கிடைத்தபோது அதைத்தான் செயல்படுத்தினோம். எனவே அதற்குப் பதிலான அவர்களின் அடக்குமுறையும் அந்த வடிவத்திலே தான் இருந்தது. எவ்வளவோ சித்திரவதைகள், அடி, உதை எல்லாவற்றையும் சந்தித்து விட்டோம். அதோடு ஒப்பிடும்போது தமிழ்த் தேசியவாதியாக அடக்குமுறையை சந்திக்கவே இல்லை. ஏதோ பேசுகிறோம், தடை செய்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்ற அளவில் தான் இருக்கிறது. மக்கள் போராட்டம் அந்த அளவுக்கு வளரவில்லை. வளர்ந்தால் அடக்குமுறை வரக்கூடும்.

தமிழ்த்தேசியவாதிகள் வைக்கும் முழக்கங்களில் ஒன்று 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்பது. நீங்கள் பெரியாரைப் படித்தவர். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து தொடங்கி பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் வரை தமிழ்த்தேசியம் தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு தமிழ்த்தேசியக் கட்சியும் தி.மு.க எட்டிய அந்த வெகுஜன எல்லையை எட்டவே இல்லை. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி, சம்பத் போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே தமிழ்நாட்டின் வெகுமக்களை, தமிழ்த்தேசிய இனத்தை தி.மு.க. அளவுக்கு சென்று சேரவில்லை.

65ல் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு முக்கியப் பங்கு உண்டு. 38ல் பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். எல்லைமீட்புப் போராட்டத்தில் பெரியார் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேவிகுளம், பீர்மேடு பறிபோவதைப் பற்றியோ, திருப்பதியை இழப்பதைப் பற்றியோ அவர் கவலைப்படவே இல்லை. அதே நேரத்தில் பொருளியல் ரீதியாக வடமாநிலத்தவர், மார்வாடிகள் இங்கு ஆதிக்கம் செய்வதைப் பற்றி பெரியாருக்கு ஒரு பார்வை இருந்தது.

திராவிடம் என்ற கருத்தியலினுடைய வரலாற்று உள்ளடக்கம் தமிழ்த்தேசியம் தான். தமிழ்த்தேசியத்தின் ஒரு உருத்திரிந்த வடிவம் தான் திராவிடம்.

அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தபோது பெரியார் "மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கு முன்னால் நாமும் திராவிட நாடு பற்றிப் பேசினோம். இப்போதுதான் மொழிவழி மாநிலங்கள் அமைந்து விட்டதே, இப்போது எந்த மலையாளியோ, தெலுங்கனோ தனிநாடு கேட்கிறானா? எனவே தனித்தமிழ்நாடு தான் நம் நோக்கமே தவிர, திராவிட நாடு அல்ல. இந்தச் சூழ்நிலையில் திராவிட நாடு கேட்பது ஒரு மோசடி" என்று கூறினார். இன்னொரு சமயத்தில் "நான் ஆதித்தனாருடன் இணைந்து தனித்தமிழ்நாடு கேட்டு போராடுவேன்" என்றே பெரியார் குறிப்பிட்டார்.

அண்ணாவிடம் பொதுக்குழு மாநாட்டில் கோவை செழியன் "கட்சியின் பெயரை மாற்ற வேண்டும். இங்கு திராவிட நாடு எங்கிருக்கிறது? நாம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறோம். எனவே தமிழர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும்" என்று கேட்கிறார். "அப்படி மாற்றினால் அதைச் சொல்லியே பெரியார் நம்மை ஒழித்துத் தள்ளிவிடுவார். அதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்று அண்ணா கூறினார்.

பின்னால் தி.மு.க.விலிருந்து வைகோ பிரிந்தபோது நான் அவரிடம் கூறினேன். "இதுதான் நல்ல சந்தர்ப்பம். இதைப் பயன்படுத்தி திராவிடம் என்ற சொல்லை ஒழித்து விட்டு தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ, மறுமலர்ச்சி தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ வையுங்கள்" என்று சொன்னேன். "அய்யோ இதை வைச்சே கலைஞர் ஒழிச்சுடுவார்" என்று பதறினார் வைகோ.

'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தியத் தேசியமும் ஒருகட்டம் வரைக்கும் முற்போக்கானது. இந்தியத் தேசியத்தை ஆதரித்த காங்கிரஸ்காரரான சோமசுந்தர பாரதியார் தமிழ்த்தேசியம் என்ற பேச்சு வந்தபோது அதை ஆதரித்து பெரியாரோடு ஒன்றுபட்டார். ராஜாஜியை ஆதரித்த ம.பொ.சியும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை ஆதரித்தார். எனவே திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்த்தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தவரை அது முற்போக்கானது தான்.

"திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்" என்பதுதான் சரியாக இருக்க முடியும். திராவிடம் என்பது முந்தைய காலத்துக்குரிய ஒரு கருத்து. 'அந்த சிறைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது' என்று சொன்னால் அது சிதைவாக மாறும்.

திராவிடம் என்ற வார்த்தை இந்தி எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தமிழ்மண் காப்பு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது போன்றவை தான். இதுதான் திராவிடம் என்றால் திராவிடத்தின் உள்ளடக்கம் தான் தமிழ்த்தேசியம். ஆனால் இந்த உள்ளடக்கத்தை இழந்து திராவிடம் என்ற சொல் வெறும் பதவிச்சண்டைக்கான சொல்லாக இன்று சிதைந்து சீரழிந்து கொண்டிருக்கிறது.

அதாவது நாற்காலி அரசியலில் கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்று சொல்கிறீர்களா?

ஒவ்வொரு புரட்சியும் ஒரு அரசியல் புரட்சியில் இருந்துதான் தொடங்குகிறது. அரசியல் புரட்சியின் முக்கியமான கேள்வி யாருக்கு அதிகாரம் என்பது தான். அதிகாரத்தைக் கைப்பற்றாமல் சமூகத்தை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பொருளியலை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பண்பாட்டை மாற்ற முடியாது. அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதில் தவறே இல்லை.

ஆனால் இவர்கள் தேடும் அதிகாரம் மேலே சொன்ன மாற்றங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் அல்ல. 52ல் தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த அதிகாரத்தின் மூலம் திராவிட நாடு சாத்தியமில்லை என்பதால் அவர்கள் போட்டியிடவில்லை. அதே தி.மு.க.தான் 57ல் போட்டியிடுகிறது. இப்போது வரை அது நீடிக்கிறது. இடையில் கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆசை காட்டினார்கள்; இவர்கள் பலியானார்கள்.

கட்சி தேர்தலில் நிற்காத போது தொழிற்சங்கப் போராட்டம், மொழிப்போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். நிறைய இளைஞர்களை ஈர்த்தார்கள். போராட்டங்களுக்காக மாதக்கணக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தார்கள். தேர்தலில் போட்டியிட்ட போது பதவிகளின் மீது மோகம் வந்தது. அந்தப் பதவிகள் தங்கள் நோக்கங்களுக்கு உதவுமா என்று பார்க்கத் தவறி விட்டார்கள். அப்படியே தங்களது குறிக்கோளையும் இழந்து விட்டார்கள். இலக்கை கைவிட்டு அமைப்பைப் பாதுகாத்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு 'இங்க கொஞ்சம், டெல்லியில் கொஞ்சம் கிடைச்சா போதும்' என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

உண்மையான அதிகாரமில்லாத அதிகாரத்தின் மீது கொண்ட மயக்கம் இது. இவர்கள் கையில் இருக்கிற அதிகாரத்தை வைத்துக்கொண்டு இலவசங்கள் தருவதைத் தவிர எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தேர்தலின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதால் தான் நாங்கள் (தமிழ்த் தேசியவாதிகள்) தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.

தமிழ்த்தேசியத்தில் கலாச்சாரம் என்பதை எதன் அடிப்படையில் வரையறுக்குறீர்கள்? ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரமா?

Jallikattu பண்பாடு என்பதே ஒரு சமூகத்தை ஒன்றுபடுத்தியிருக்கிற விழுமியங்களின் தொகுப்பு. ஆதிக்கத்துக்கும் அடிமைக்குமான போராட்டம் அல்லது நீதிக்கும் அநீதிக்குமான போராட்டம் எப்படி சமூகத்தில் வேரூன்றியிருக்கிறதோ, அதேபோல் இரு பண்பாடுகளுக்கிடையேயான ஒரு போராட்டம் தான் ஒரு தேசிய இனப்பண்பாடாக மாறுகிறது. பிறப்பினால் வேற்றுமை பாராட்டுவதையும், சாதியத்தையும் நியாயப்படுத்துகிற பண்பாடு ஒருபக்கம். மற்றொரு பக்கம் இதை எதிர்த்து பிறப்பினால் வேற்றுமை இல்லை என்று சொல்கிற பண்பாடு. இந்த இரண்டும் இன்றோ, நேற்றோ முளைத்து விடவில்லை. நம்முடைய வரலாறு நெடுகிலும் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஒருபக்கம் தான் திருவள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை நீடிக்கிறது. மற்றொரு பக்கம் பார்ப்பன கருத்தியல்கள்.

முற்போக்கான தமிழ்த்தேசிய பண்பாடு என்பதன் அடையாளமாக குறள் நெறியை முன்வைக்கிறோம். குறள்நெறி என்பது சமத்துவம், பகிர்வு, அன்புடைமை என்பதை அடிப்படையாகக் கொண்டது. நிலையாமை தான் அதன் மெய்யியல். இதைத்தான் நாம் தமிழ்த்தேசிய பண்பாடு என்கிறோம்.

இது சாதீயத்திற்கு, மதவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற ஒரு பண்பாட்டு நிலைப்பாடு. தமிழ்த்தேசிய பண்பாடு விரிவடைவதன் ஒரு பகுதிதான் சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது. எழுத்துக்களின் வடிவங்கள், உடைகள் என எல்லாவற்றிலும் காலத்திற்கு தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றங்கள் சமத்துவப் பண்பாட்டின் இழைகளாக இருக்க வேண்டும். சமத்துவப் பண்பாட்டின் மாற்றங்களுக்கு இணையாகத் தான் இந்தப் பண்பாடு வளர வேண்டும்.

பல்வேறு பண்பாடுகளும் ஒரு தமிழ்த்தேசிய பண்பாட்டோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இணைவுகளை அங்கீகரிக்கிற ஒரு பண்பாட்டைத் தான் நாம் தமிழ்த்தேசிய பண்பாடு என்கிறோம். தமிழ் நாட்காட்டி வைத்திருப்பதால் அதையே தான் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. உலகம் முழுவதும் பயன்படுத்தும் நாட்காட்டியை நாமும் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் நம்முடைய மாதங்கள், வருடங்கள் போன்றவற்றையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை, விளையாட்டுகள் சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையில் இருந்துதான் வருகின்றது. விலங்குகளோடு இரண்டு கால் விலங்குகளாக மனிதன் இருந்த நிலை மாறி கால்நடைகளை உழவுக்குப் பயன்படுத்துவது, தன்னுடைய பயணத்திற்குப் பழக்கப்படுத்துவது என மாற்றத் தொடங்கிய காலத்தில் தான் ஜல்லிக்கட்டு தொடங்கியிருக்கும். பிரபுத்துவ, சாதீய சமூகத்திற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு இங்கே இருந்து வந்திருக்கிறது.

நிலப்புரபுத்துவ சமூகத்தின் ஒரு கூறாகத் தான் ஜல்லிக்கட்டு இருந்திருக்கிறது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. அதாவது தன்னிடமிருந்த அடிமைகளையும், மாடுகளையும் நிலப்பிரபுக்கள் மோதவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் ஜல்லிக்கட்டு என்ற ஒரு கூற்றும் உள்ளதல்லவா?

ஒவ்வொரு பழக்கமும் அந்தந்த காலத்தின் நிகழ்வை உள்வாங்கித்தான் மாறும். ஆடு, கோழி பலியிடுவது என்பது நீண்டகாலமாக நம் மக்களின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இடையில் நிலப்புரபுத்துவ காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது அடிமைகள் ஆடு, கோழிகளை நிலச்சுவான்தார்கள் வீட்டில் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தது. தஞ்சை, திருவாரூரின் ஒரு சில பகுதிகளில் இந்தப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. பொங்கல் பண்டிகையிலும் நிலப்பிரபுத்துவம் வந்து விட்டது. அதற்காக பொங்கலை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?

சமூகத்தின் உற்பத்திப் பெருக்கமும், ஆதிக்க சக்திகளும், அதன் கருத்தியலும் தேசியப் பண்பாட்டில் கலப்பதை நாம் அடியோடு தடுத்து விட முடியாது. இதன் அடிப்படையில் தான் ஜல்லிக்கட்டையும் பார்க்க வேண்டும். இதிலிருக்கிற பிரபுத்துவத்தை ஒழிக்க வேண்டும். எல்லோரும் கலந்து கொள்ளும்படியும் பாதுகாப்பானதாகவும் அதை மாற்ற வேண்டும். நம்முடைய இயக்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கனவே இருக்கிற பழக்கம் அது, அப்படியே தொடரட்டும், காலப்போக்கில் அது மறையட்டும் என்று தான் சொல்கிறேன். அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்த் தேசியவாதிகள் கற்பு என்ற பெயரில் பெண்களை மறுபடியும் வீட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு 'குஷ்பு-கற்பு' பிரச்சினையின்போது பெண்ணியவாதிகளால் வைக்கப்பட்டது, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒவ்வொரு கருத்தும் சமூகத்தில் எப்படி வந்தது, யாரைப் பாதுகாக்க வந்தது என்று பார்க்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அவளைப் பாதுகாக்க கற்பை வைத்தார்கள்.

எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய விழுமியங்களோ, கருத்துக்களோ கிடையாது. ஒவ்வொரு கருத்தும் ஒரு காலத்திற்குப் பொருந்தும்; இன்னொரு காலத்திற்குப் பொருந்தாது. கலையும் இலக்கியமும் கடவுளையும், அரசரையும் புகழ்ந்து பாடுவதற்கே என்ற நிலையில் இருந்தபோது 'கலை கலைக்காகவே, இலக்கியம் இலக்கியத்துக்காகவே' என்ற முழக்கம் வந்தது. அப்போது அது மிகவும் முற்போக்காகக் கருதப்பட்டது. பின்னர் அதுவும் பின்னால் தள்ளப்பட்டு 'கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே' என்ற கருத்து முற்போக்குக் கருத்தாக இப்போது இருக்கிறது.

இப்படித்தான் கற்பும். பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு காலகட்டத்தில் பாதுகாப்புக்கு ஒருவன் தேவை என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட கருத்துதான் அது. ஆனால் இன்று அது பெண்ணை அடிமைப்படுத்துகிற கருத்தாக மாறிவிட்டது. எனவே அதை எதிர்ப்பதைப் பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது ஜனநாயகத்தின் பெயரில் சமூக உறவுகளில் அராஜகத்தை நுழைப்பதாக இருக்கக் கூடாது.

குஷ்பு முன்மொழிந்த கருத்து அராஜகம். அதனால் அதை எதிர்த்தோம். அதில் ஆணாதிக்க சிந்தனை எதுவும் கிடையாது. எங்கெல்ஸ் "குடும்பம் என்ற அமைப்பில் எனக்கு உடன்பாடு கிடையாது. குடும்பம் என்ற அமைப்பே ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான். ஆண், பெண் இருவருக்கும் பாலியல் சுதந்திரம் வேண்டும். அது குடும்பங்களில் இல்லை." என்று குறிப்பிடுவார். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தேசிய இனத்தின் சமூக கட்டமைப்பையே அது சீரழித்து விடும்.

ஒரு ஒழுங்கை எதிர்ப்பது என்பது இன்னொரு ஒழுங்கை கட்டமைப்பதற்காக; ஒழுங்கே இல்லாமல் எப்படியும் போகலாம் என்பதற்காக அல்ல.

தமிழ்த் தேசியவாதிகள் ஆரியமயமாகிவிட்ட சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிப்பது குறித்து?

ஒரு சமூகம் என்பது ஒரு தனிமனிதனோ, சில மனிதர்கள் இணைந்தோ, அரசனோ திட்டம் போட்டு உருவாக்குகிற செயல் அல்ல. ஒரு தேசியச் சமூகம் என்பது வரலாற்று வழியில் மலர்ந்து, நிலைத்து நிற்பது. இருக்கிற எதார்த்தங்களில் இருந்து தான் ஒரு இயக்கம் தோன்ற வேண்டியிருக்கிறது. சிறுதெய்வ வழிபாடு ஏன் தோன்றியது, எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.

முருக வழிபாடு எப்படித் தோன்றியது, குலத்தலைவர்கள் எப்படி தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குரியது. இப்போதைய சூழ்நிலையில் இன்றைய அரசியல் தலைவர்கள் நாளை கடவுளாக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று வேண்டுமானால் நாம் யோசிக்கலாம். இந்த வழிபாட்டு முறைகள், அதில் வெளிப்படுகிற மெய்யியல் சிந்தனைகள், அதில் வெளிப்படுகிற போராட்டப் பதிவுகள் இதையெல்லாம் ஒரு தேசிய இனத்தினுடைய வரலாற்று ஆழங்களிலிருந்து வளர்ந்து வருபவை.

மார்க்சியம், தத்துவம் என எல்லாவற்றிலும் மாவோ தேர்ச்சி பெற்றவராய் இருந்தாலும் அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் சீனாவின் வரலாற்றை மிகத்தெளிவாக அவர் புரிந்து வைத்திருந்தது தான். லெனினும் ரஷ்யாவின் வரலாற்றில் அதிக தேர்ச்சி பெற்றிருந்தார். இங்குள்ள தலைவர்களுக்கு அந்தப் புரிதல் இல்லை என்பது வருத்தமான செய்திதான்.

நம்முடைய வரலாறு என்பதை திருவள்ளுவரில் தொடங்கி முருகவழிபாடு, வள்ளலார் என எல்லாவற்றில் இருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக முருகனை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்று சொல்லவில்லை. சிறுதெய்வ வழிபாடு குறித்து விவாதிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம் ஆனால் அதுவே சமூக மாற்றத்திற்குக் காரணமாக இருந்து விடாது.

மாவோ குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. இங்குள்ள நக்சலைட்டுகள் நம் சமூக சூழ்நிலையை உள்வாங்காமல் செயல்படுவதாக ஏற்கனவே குறிப்பிட்டீர்கள். இப்போதைய நக்சலைட்டுகளின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

நம் இந்தியச் சமூகம் பற்றிய, தமிழ்ச்சமூகம் பற்றிய, ஆளும் வர்க்கம் பற்றிய பார்வைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறாக உள்ளது. எனவே நக்சலைட்டுகள் என்ற ஒரே வார்த்தையின் கீழ் எல்லாரையும் கொண்டு வர முடியாது. இப்போதைய நக்சலைட்டுகள் மரபுவழிக்கட்சியின் பார்வையில் இருந்து தங்களை முறித்துக்கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் ஒரு சிலர் அந்த பார்வையை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஆரம்பத்தில் சாரு மஜூம்தார் சீனாவை அப்படியே காப்பியடித்தார். மாவோ முதலாளிகளை தரகு முதலாளிகள் என்றார். இவரும் அதே வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் சீனா ஒரு அரைக்காலனிய நாடு என்றார், சாருவும் இந்தியாவை அரைக்காலனிய நாடு என்றார். மாவோ விவசாயப்புரட்சியை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார். இவரும் அதையே சொன்னார். சீனா அப்போது தொழிற்வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது அதனால் அங்கு தொழிற்சங்கங்கள் இல்லை. இங்கிருந்த தொழிற்சங்கங்களையும் சாரு மஜூம்தார் கலைக்கச் சொன்னார். அங்கு நாடாளுமன்றம் இல்லை, அதனால் மாவோ தேர்தலில் போட்டியிடவில்லை. இங்கு நாடாளுமன்றம் இருந்தும் இவர்கள் போட்டியிடவில்லை.

இந்தப் பார்வையில் இருந்து முழுமையாக இப்போதைய இயக்கவாதிகள் விடுபட்டு விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. நான் 'சுவருக்குள் சித்திரங்கள்' தொடர் எழுதும்போது எம்.எல். தோழர்கள் சிலர் 'நக்சலைட்டுகள் பற்றி எழுத வேண்டாம், அது எதிர்வினையை ஏற்படுத்தி விடும்' என்று கூறினார்கள். 'அப்படி எதிர்வினை ஏற்பட்டால் மகிழ்ச்சிதான், ஏனெனில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும்போது, பல்லாயிரம் பேர் ஓர் இயக்கத்தை நம்பி எல்லாவற்றையும் துறந்து அந்த இயக்கத்தில் சேரும்போது அதன் தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கக்கூடாது, பொறுப்புணர்வோடு அந்தப் போராட்டத்தை நடத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஓர் இயக்கத்தை தவறாக வழிநடத்துபவர்களை அவசரக் குடுக்கைகள் என்று சொல்வதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை' எனக் கூறினேன்.

நக்சலைட்டுகள் இப்போதும் யாரையாவது திட்டுவது, சொன்னதையே சொல்வது என்றுதான் இருக்கிறார்கள். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை எந்த ஆயுதப் போராட்டமும், புரட்சியும் நடந்து விடவில்லை. அதற்காக அவர்களை நான் குறைகூறவில்லை. நிஜ வாழ்க்கை அதை அங்கீகரிக்காதபோது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி.

சமூகத்தின் உணர்வுநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கும்போது, அந்த மாற்றத்தை செயல்படுத்த அரசு எந்திரம் தடையாக இருக்கும்போது ஆயுதம் உதவும். ஆனால் சமூகத்தின் உணர்வு நிலையையே மாற்றுவதற்கு ஆயுதம் உதவாது. இதுபோன்ற செயல்களை லெனின் 'செயலற்ற தீவிரவாதம்' என்று குறிப்பிடுவார். அந்த செயலற்ற நிலையைத்தான் இப்போதைய நக்சலைட்டுகளிடம் நான் பார்க்கிறேன்.

சமீபத்தில் தமிழ்த் தேசியவாதிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு விருது வழங்கி கவுரவித்தது. அதே மேடையில் மகாலிங்கம் சமஸ்கிருதத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து...

Nedumaran மகாலிங்கத்திற்கு விருது கொடுத்தது மிகப்பெரிய தவறு. அதில் என் பங்கு எதுவும் இல்லை. நெடுமாறனுடைய முடிவு அது. எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டால் நான் அங்கு சென்றிருக்கவே கூடாது அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். சென்றபிறகு அந்த மேடையில் அழைத்தவர்களையே தாக்கிப் பேசுவது நாகரீகமாக இருக்காது. சமஸ்கிருதத்தின் முதன்மை பற்றி பொள்ளாச்சி மகாலிங்கம் பேசியதை வைகோ அந்த மேடையிலேயே மறுத்துப் பேசினார்.

மொழிக்கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. ஒரு மொழிக்கொள்கை தான் சரி என்றும், இருமொழிக் கொள்கையால் ஆபத்து இல்லை என்றும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

தேசிய இனம் என்பதே ஒருமொழி அடிப்படையிலானது. எனவே தம்மொழி முதன்மை பெற வேண்டும் என்கிற போதே ஒருமொழிக்கொள்கை தான் சரி. ஆங்கிலத்தை தேவை கருதி பயன்படுத்துவதில் தவறே இல்லை. ஆனால் அதற்கு இருமொழிக் கொள்கை என்ற பெயர் எங்கிருந்து வந்தது? இருமொழிக்கொள்கை என்று வரும்போதே தமிழையும் ஆங்கிலத்தையும் சம இடத்தில் வைக்கிறோம் என்றுதானே அர்த்தம்.

காங்கிரஸ்காரர்கள் சொல்லும் மும்மொழிக்கொள்கை என்பது இந்தி ஆதிக்கம் தான். அதேபோல் இருமொழிக்கொள்கை என்பது ஆங்கில ஆதிக்கக் கொள்கைதான். அதாவது மும்மொழிக்கொள்கை என்பது இந்தி என்கிற ஒருமொழிக் கொள்கை. இருமொழிக்கொள்கை என்பது ஆங்கிலம் என்கிற ஒருமொழிக் கொள்கை.

எல்லா பாடத்திட்டங்களும் தமிழில் இல்லாத நிலையில் நாம் ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டால் தமிழ் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறதே?

ஆங்கிலத்தில் இருக்கும்போது அதை அப்படியே படிப்பதில் தவறில்லை. அதை தமிழில் மாற்றுவதற்கு இங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பொறியியல், மருத்துவ படிப்புகள் இப்போது ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. அதை தமிழில் கொண்டு வரும்வரை அந்தக் கல்லூரிகளை மூடி விடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அதைத் தமிழில் கொண்டு வருவதற்கு என்ன தடை என்று தான் கேட்கிறோம்.

தமிழ்த் தேசியமே இறுதி இலக்கு என்று இருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது ஏன்?

அமைப்புக்கள் என்பதே கருத்துக்களின் வெளிப்பாடு தான். சுபவீயின் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் முதலில் எழுந்த கேள்வியே அமைப்புகளின் குறிக்கோள் என்ன என்பது தான். நாங்கள் தேசிய விடுதலை என்றோம், பெ.மணியரசன் தன்னுரிமை என்றார். சுபவீயோ, 'தன்னுரிமையோ, தேசிய விடுதலையோ, அல்லது வேறொன்றோ எதை வேண்டுமானாலும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நெடுமாறன் தலைமையில் ஒன்றிணைந்து ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும்' என்று கூறினார்.

விவாதம் நீண்டுகொண்டே போய் இறுதியில் பொதுமுழக்கமாக 'தமிழ்த்தேசிய இறையாண்மை' என்பதை வைத்துக் கொள்ளலாம் என முடிவானது. முதலில் எல்லா அமைப்புகளும் இணைந்து இயங்குவது, பின்னர் அதை கூட்டமைப்பாக மாற்றி, காலப்போக்கில் ஒரே அமைப்பாக கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்தோம். நெடுமாறன், 'நாம் மூன்று அமைப்புகள் மட்டும் இணைந்தால் போதாது, தமிழ்நாட்டில் நம்மைப்போல் எண்பது அமைப்புகள் உள்ளன. அனைவரும் இணைந்து இயங்கலாம்' என்றார்.

இந்தக் கருத்தில் எனக்கு மாறுபாடு இருந்தது. 'இந்த மூன்று அமைப்புகள் மட்டும்தான் தீவிரமாக வேலை செய்யும். மற்றவர்களிடம் அந்தத் தீவிரம் இருக்காது. எனவே தெருமுனையில் மன்றம் வைத்திருப்பவர்களை எல்லாம் நம்முடன் இணைத்துக் கொண்டால் அது அரசியல் இயக்கமாக இருக்காது' என்று கூறினேன்.

என்னுடைய முக்கியமான கோரிக்கையாக தேர்தல் புறக்கணிப்பு இருந்தது, பெ.மணியரசனுக்கு அதில் உடன்பாடு இருந்தது. அதை நெடுமாறன் ஒத்துக்கொள்ளவில்லை. 'நமக்கு ஆதரவான சக்திகள் போட்டியிடும்போது அதை ஆதரிக்க வேண்டும். பிற்காலத்தில் நாமே போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். இப்படி ஒரு கருத்தை வைத்திருப்பவரோடு எப்படி ஒன்றுசேர முடியும்? பார்க்கிறவர்களுக்கு அவர் தமிழ்த்தேசிய பெருந்தலைவராக இருக்கலாம்; பத்திரிகைகள் அவருக்கு முக்கியத்துவம் தரலாம். அதற்காகவே எல்லோரையும் ஒன்று சேர்த்து விட முடியாதே!

அதே நேரத்தில் தனித்தனி கொள்கைகள் இருப்பதாலேயே இந்தி எதிர்ப்பு, தமிழ்மொழிப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைளுக்காக நாங்கள் ஒன்று சேர்ந்து போராடாமலும் இல்லை.

புதுவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசிய ஒரு தோழர், 'எல்லாக் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்' என்று குறிப்பிட்டார். நான் பேசும்போது, 'எதற்காக எல்லாக் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். எல்லாக் கம்யூனிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து அது ஒரு சிறு குழுவாக மக்கள் மத்தியில் இருப்பதற்குப் பதிலாக, ஒரு கம்யூனிஸ்டு கட்சி வெகுமக்களைத் திரட்டி புரட்சி செய்தால் போதுமானது. அப்படித்தான் உலக வரலாற்றில் மாற்றங்கள் சாத்தியமாகியிருக்கிறது' என்று குறிப்பிட்டேன்.

அதுபோல தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் நூறுபேர் கொண்ட ஒரு குழுவாக இருப்பதற்குப் பதிலாக, தமிழ்த் தேசியவாதிகளில் ஒழுங்காகச் செயல்படுகிற பத்துபேர் தமிழ்த்தேசிய சிக்கலை சரியாகப் புரிந்து கொண்டு மக்களைத் திரட்டி மாற்றம் கொண்டு வர முடியுமானால் அதுதான் முக்கியமானது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட இந்த சேர்க்கை முரண்பாடாகத் தான் இருக்கும்.

இதில் எனக்கு சுபவீயோடும் முரண்பாடு இருக்கிறது. சமூகநீதி மாநாட்டில் பேசும்போது, 'மண்டல் குழுவை நாம் ஆதரிக்கிறோம், வடநாட்டில் எதிர்க்கிறார்கள். அதை எல்லோரும் இணைந்து தான் அமல்படுத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. நமக்கு உடன்பாடு இருந்தாலும் அதை நாம் நிறைவேற்றிக் கொள்வதற்கு அனைவருக்கும் ஒரே அரசியல் அமைப்புச் சட்டம் என்ற அமைப்பு தான் தடையாக இருக்கிறது. எனவே சமூகநீதியுடன் கூடிய தனி அரசு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று பேசினேன்.

'விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தீர்மானம் தேவையற்றது, தீர்மானத்தை உடனடியாக கைவிடவும்' என்று சுபவீ கோரினார். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம், தமிழ்வழிக்கல்வி, இட ஒதுக்கீடு இந்த மூன்று கோரிக்கைகளும் போதுமானது என்பது அவரது கருத்து. இப்படி கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் என்ற பெயர் இருப்பதாலேயே நாங்கள் அனைவரும் எப்படி இணைந்து இயங்க முடியும்? தமிழ்த்தேசியம் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அறிவியல் கண்ணோட்டம். சமூக மாற்றம் பற்றிய ஓர் அறிவியல் பார்வை. அந்த அறிவியலை எந்த ஒற்றுமைக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.

தமிழ்மொழி பாதுகாப்பு, ஈழப் பிரச்சனை போன்றவற்றின் வழியாக பி.ஜே.பி. போன்ற மதவாத இயக்கங்கள் தமிழ்த் தேசியவாதிகளோடு இணைந்து செயல்பட முயற்சிக்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை? சமீபத்தில் கூட ஈழப்பிரச்சனைக்காக நெடுமாறனும் இல.கணேசனும் இணைந்து பணியாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டு கூட எழுந்தது..

நாங்கள் பி.ஜே.பி.யோடு எந்தக் காலத்திலும் இணைந்தது கிடையாது. நெடுமாறன் இல.கணேசனோடு சேர்ந்து ஜெயலலிதாவுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் கொடுத்த விழாவில் போய் பேசினார். 'ராஜாஜியைப் போல் திறமையானவர் ஜெயலலிதா' என்று பாராட்டிப் பேசினார். அது அவருடைய கருத்து. அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. பி.ஜே.பி. என்பது இந்திய தேசியத்தின் படுபிற்போக்கான ஒரு வடிவம். இந்துத்துவ, பார்ப்பனீய, சாதி ஆதிக்கத்தை கட்டி நிறுவுகிற ஒரு அமைப்பு. அவர்களோடு நமக்கு எந்தவிதமான அரசியல் உறவோ, அமைப்பு உறவோ இருக்க முடியாது. ஈழ விடுதலையை பி.ஜே.பி.யால் ஒருபோதும் ஆதரிக்கவே முடியாது.

அதே நேரத்தில் பி.ஜே.பி.யின் பின்னால் இருக்கிற தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், தமிழர்களுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை என்றும் சொல்ல முடியாது. ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் வந்தபோது பி.ஜே.பி.யும், கம்யூனிஸ்டுகளும் இணைந்து போராடினார்கள். தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். பி.ஜே.பி.யின் எந்த கொள்கையையும் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் நியாயமான கோரிக்கைக்காக நம்முடன் இணைந்து போராட வரும்போது புறக்கணிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. அதற்கு நாம் பொறுப்பேற்கவும் முடியாது. பி.ஜே.பி.யோடும் சரி, காங்கிரசோடும் சரி எங்களுக்கு எந்த உறவும் கிடையாது.

திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப்போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65ல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின் மொழிக்கொள்கைகளோடு நாங்கள் வேறுபடுகிறோம். அவர்களுக்கு அது தெரிந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தமிழ்வழிக்கல்வி, இடஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் அவர்கள் தீவிரமாகவே இயங்கி வருகிறார்கள்.

திராவிடர் கழகத்தோடு எங்களுக்குப் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் தொண்டர்களோடு நாங்கள் பேசக்கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

ஈழத்தில் போராட்டம் மூலமே விடுதலை சாத்தியம் என்பது உங்களைப் போன்றவர்களின் கருத்து. அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலரும், ஒருங்கிணைந்த இலங்கைதான் சரி என்று சிலரும் பேசி வருகின்றனர். இதற்கான அடிப்படை எது?

குறிப்பிட்ட மக்கள் இனத்தினுடைய பிரச்சனை அந்த மக்கள் இனத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான ஜனநாயகம். தங்கள் கொள்கை என்ன, இந்தியாவுக்கு எது பொருந்தும் என்பதை வைத்துக்கொண்டு ஈழப்பிரச்சனையை பார்க்கக்கூடாது. தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட இலங்கையைத் தான் விரும்புகிறார்கள் என்று இவர்களால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்கு ஆதரவாகப் போராடலாம்.

ஈழ மக்களின் வரலாறு, அவர்களின் சிக்கல்கள், நடத்திய போராட்டங்கள் எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இங்கு போனஸ் 12 சதவீதமா, 13 சதவீதமா என்று போராட்டம் நடத்தி விட்டு தங்கள் உயிருக்காகவும், உரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்து 'பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வது எப்படி சரியாக முடியும்?

புலிகளுக்கு சரியான அரசியல் சித்தாந்தமோ, அமையப் போகிற ஈழம் குறித்த தெளிவான பார்வையோ இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. 'புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதிகளில் சாதி ஆதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த பார்வை அவர்களிடம் இல்லை' என்ற கருத்தும் ஈழ எழுத்தாளர்கள் ஷோபாசக்தி போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து?

புலிகள் வெளியிட்டிருக்கிற ஆவணங்கள், அறிக்கைகள் எதையும் படிக்காமல் மேம்போக்காக கூறும் குற்றச்சாட்டு இது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், வர்க்கப் போராட்டத்தில் உண்மையான ஆர்வத்தோடு இயங்குபவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தில் தான் இருக்கிறார்கள். சாதி குறித்து தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பை தீவிரமாக கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் திருமணம் செய்வதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள்.

அகநிலையில் திட்டமிட்டு அந்த அமைப்பு சாதி ஒழிப்புக்கு போராடுவது ஒருவகை, புறநிலையில் அவர்கள் நடத்தும் போராட்டமே சாதி ஒழிப்புக்கு வகை செய்வது இன்னொரு வகை. புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுக்குள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது என்று மாவோ குறிப்பிடுவார்.

ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து போராடுபவன் பதுங்கு குழிக்குள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இந்தியப் படை இலங்கைக்குள் நுழைவது வரை பெண்கள் படை என்ற ஒன்று அங்கு இல்லை. காயத்திற்கு மருந்து போடுவது, சமைப்பது, உதவி செய்வது போன்றவற்றைத்தான் பெண்கள் செய்து வந்தார்கள். இந்தியப் படையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குத் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எல்லைத்திறப்புப் போரை பெண்கள் தான் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதற்கு மரியாதை தரும் விதத்தில் கிளிநொச்சியில் வெற்றிக்கொடியை விதூஷா தான் ஏற்றினார். பெண்ணை அடிமையாக நடத்துகிற இயக்கத்தினால் இதை சாதிக்க முடியுமா? ஒரு பெரிய மாற்றம் ஈழச்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் உடைந்து நொறுங்கி இருக்கிறது.

போர்த் தாக்குதலால் வீடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறிய உயர்ஜாதி மக்களின் வீடுகளை புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்த பொருட்களை குறிப்பெடுத்து, அவர்கள் என்றாவது வந்தால் திருப்பிக் கொடுப்பதற்காக பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடுகளை வசிக்க இடமில்லாதவர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள்.

ஈழப்படையில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களும், இலங்கை உளவுத்துறையும் அந்த மக்களிடம் பரப்புகிற முக்கியமான செய்தியே இதுதான், 'உங்கள் வீடுகளில் கீழ்ச்சாதியினரை கொண்டு வந்து குடியமர்த்தியுள்ளார்கள்'. எனவே விடுதலைப்புலிகள் சாதியைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அவதூறு தான்.

என்னைப் பொறுத்தவரை ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள். அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. புலிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் அரசின் கைக்கூலிகளாக கூட இருக்கலாம்.

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. சாதி, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர் பெரியார். அவரை உங்கள் அமைப்புக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவராகப் பார்க்கிறீர்கள்?

Periyar அவரை தமிழ்த் தேசியத்தின் தந்தை என்ற இடத்தில் தான் வைத்திருக்கிறோம். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்பது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தான். ஒரு இனம் தன்னைத்தானே அடையாளம் காண்கிற போராட்டத்தின் தொடக்கமாக அது இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேசிய இனத்தின் பார்வையாக மட்டும் இல்லாமல் அதற்குள் இருக்கிற சாதியத்தையும் அது எதிர்த்தது.

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் தான். கடைசிவரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் ஜனநாயகத்தன்மையை கட்டமைக்காதது ஒரு மிகப்பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் வீரமணி போன்றவர்கள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ பெரியாரிடம் இல்லாததால் தான், அவர் பெயரைச் சொல்லி ஜெயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்தக் குறைகளை வரலாற்று, சமூகப் பின்னணியோடு நாம் புரிந்து கொள்கிறோம். அவரோடு நாம் நிறுத்திக்கொள்ளப் போவதும் இல்லை. பெரியார் தந்த புத்தி போதும், சொந்தப் புத்தி வேண்டாம் என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரிடம் பக்தி எதுவும் நமக்குக் கிடையாது. அவரையும் நாம் கூர்மையாக விமர்சிக்கிறோம்.

ஆனால் நாம் விரும்பக்கூடிய சமூகநீதி தமிழ்த்தேசத்தை முன்வைத்தவர் அவர்தான். அவரிடமிருந்து தான் நாம் அதை விரிவாக்குகிறோம், உள்ளடக்கத்தை சுருக்குகிறோம், அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். அந்த அர்த்தத்தில் தான் அவரை தந்தை என்கிறோம்.

அதே நேரத்தில் தந்தை, அண்ணா போன்ற பட்டப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரும் எதிர்த்து விடக்கூடாது என்பதற்காக திராவிட இயக்கம் வைத்துக்கொண்ட சூழ்ச்சி என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அண்ணா சொல்றேன், அப்பா சொல்றேன் என்றால் யாரும் எதிர்த்துப் பேசிவிட மாட்டார்கள். ஜனநாயக மறுப்புக்காக தரப்பட்ட பட்டங்கள் தான் தந்தையும், அண்ணாவும். நான் அந்தக் கோணத்தில் அவரை தந்தையாகப் பார்க்கவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த்தேசியம் எந்த அளவுக்கு சாத்தியம்? அதன் செயல்திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன?

சாத்தியம், சாத்தியமில்லை என்ற கோணங்களில் அதை அணுகுவது தவறு. பழக்கத்தில் ஊறியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுகிற வர்க்கங்கள், அரசுகள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத்தான் பிரிட்டிஷ் அரசும் செய்தது. 'உங்களுக்கு ஆளுகிற தகுதி வரவில்லை, இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உங்களை ஆளும் பொறுப்பை சரியாக செய்யும், இதுதான் நிரந்தரம்' என்று கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.

இந்தியா தான் இறுதி என்ற கருத்து இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் கருத்து. ஆனால் இந்தக் கருத்தை புரட்சியாளர்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இல்லாமல் போவதை அவர்களால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதனால் தான் அன்புக்குரிய இந்தியா, பெருமைக்குரிய பாரததேசம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆளும் வர்க்கத்தின் வெற்றி.

தமிழ்த் தேசியம் சாத்தியமா, இல்லையா என்பதை விட தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாத்தியமற்றதாகத் தோன்றுகிற ஒன்று தேவையென்றால் அதை சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்கு போராடுவது தான் நம்முடைய வேலை. தமிழ்த்தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? அடிமைப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு விடுதலை வேண்டும். விடுதலை தேவை என்றால் சாத்தியமில்லாமல் இருக்கிற அதை சாத்தியமுள்ளதாக்குவதற்கு தேவையான உழைப்பை நாம் செலுத்த வேண்டும்.

தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருளியல் ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.

*******
http://www.keetru.com/literature/interview/thiyagu_2.php

நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு பாகம் -2

இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்சலைட்கள் செயல்படுகிறார்கள்: தியாகு
நேர்காணல்: மினர்வா & நந்தன்


முதல் பகுதியின் தொடர்ச்சி...

அழித்தொழிப்புக்காக ஓரிடத்திற்குச் செல்லும்போது முன்பின் தெரியாதவர்களை எப்படி அணி திரட்டினீர்கள்? அவர்கள் எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர்களாகத் தானே இருந்திருப்பார்கள்?

Thiyagu அது ஒரு கடினமான வேலை தான். எந்த அறிமுகமும் இல்லாமல் ஒரு கிராமத்திற்குச் சென்று தங்கிவிட முடியாது. ஊரில் ஏற்கனவே அறிமுகமான ஒருவர் எங்களை வேறு ஒரு பெயரில் அறிமுகப்படுத்தித் தான் ஊருக்குள் தங்க வைப்பார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் தான் எங்களை அவர்களது ஊருக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார்கள். அங்கு சென்று ஏதாவது வேலை செய்வது போல் தங்கிக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களுடன் பழகி, அதில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அழித்தொழிப்புக்குத் தயார்படுத்துவோம்.

நீங்கள் அழித்தொழிப்புக்குத் தேர்வு செய்யும் இடங்களில் ஏற்கனவே இருக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்களின் தோழர்களோடு உங்களது உறவு எப்படி இருந்தது?

எங்கள் பார்வை இதில் மோசமானதாக இருந்தது. அவர்களை விரோதிகளாக கருதிக்கொண்டு தான் நாங்கள் அந்த ஊருக்குள் நுழைவோம். தஞ்சைப்பகுதியில் பொதுவுடைமை இயக்க நிர்வாகிகளாக இருப்பவர்கள் அனைவருமே நேர்மையான, கட்சிக்காக நன்கு உழைக்கக்கூடிய தோழர்கள். ஆனால் எங்களது பார்வையில் அவர்கள் அனைவருமே விரோதிகள். எனவே அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அந்தக் கட்சிகளே நுழையாத புதிய கிராமங்கள் தான் எங்களது முதல் தேர்வாக இருந்தது.

உங்களது முதல் அழித்தொழிப்பு பற்றிக் கூற முடியுமா?

அழித்தொழிப்பு என்பது ஒரு கொள்கை வடிவம். அதுதான் சரியானது என்பது சாரு மஜூம்தாரின் கருத்து. அந்த வகையில் நான் முதலில் வேலை செய்த கிராமம் திருவாரூர் அருகில் உள்ள பெரும்பண்ணையூர். அங்கிருந்து கொண்டு, முதல் அழித்தொழிப்புக்கு நாங்கள் தேர்வு செய்தது குடவாசல் அருகிலுள்ள பெருமங்கலம் ஊரைச் சேர்ந்த, முனுசாமிசோளகர் என்கிற நிலச்சுவான்தார். அவர்தான் அந்த ஊர் மணியக்காரர். சுற்றியுள்ள எல்லா கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்மீது விரோதம் இருந்தது.

அந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் நாகப்பனின் சகோதரியை சோளகரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ய, அதைத் தட்டிக் கேட்கப் போன நாகப்பனை சோளகரின் மகன் கத்தியால் குத்தி விட்டான். இதுதொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகார் செய்யப் போகும்போது, அங்கு அதிகாரியின் நாற்காலியில் சோளகர் உட்கார்ந்திருந்தார். வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் பல நிகழ்வுகள் அவர்களுக்குள் முரண்பாடு வருவதற்குக் காரணமாக இருந்தது.

இந்த நேரத்தில் தான் நாங்கள் சோளகரை அழித்தொழிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். தோழர் ஏ.எம்.கே.தான் இதற்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் தலைமையில் அந்த ஊரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பகுதி மக்கள் சோளகர் மீது கோபமாக இருந்தபோதும் திட்டமிட்டு அவர்மீது தாக்குதல் நடத்த அவர்கள் தயாராக இல்லை. கூட்டத்தின் முடிவில் ஏ.எம்.கே. எங்களிடம், 'இந்த ஊரில் யாரும் உங்களுடன் வராவிட்டாலும் பரவாயில்லை, வேறு ஊரிலுள்ள யாரையாவது சேர்த்துக் கொண்டாவது சோளகரை அழித்து விடுங்கள்' என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

ஏற்கனவே நான் குடவாசல் அருகிலுள்ள தண்டியூர் என்ற கிராமத்தில் வேலை செய்து அங்குள்ள இளைஞர்களை அழித்தொழிப்புக்குத் தயார் செய்து வைத்திருந்தேன். நான், தோழர் மாணிக்கத்தின் மகன் பாலு, இன்னும் இரண்டு இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அழித்தொழிப்புக்குத் தயாரானோம். உண்மையில் நானும், பாலுவும்தான் தாக்குதலில் ஈடுபட்டோம். சோளகர் திருப்பித் தாக்கியதும் மற்ற இருவரும் பயந்து ஓடிவிட்டார்கள். பல இடங்களில் மிக ஆழமான கத்துக்குத்துக்கள் விழுந்தும் சோளகர் பிழைத்து விட்டார். அதுதான் எங்களது முதல் அழித்தொழிப்பு நிகழ்ச்சி.

ஆனால் இதில் எங்கள் மீது வழக்குப் பதிவு எதுவும் இல்லாமல் தப்பித்து விட்டோம். சோளகரிடம் மருத்துவமனையில் வாக்குமூலம் கேட்கும்போது தனக்குப் பகையாக அந்த ஊரில் உள்ள அனைவரது பெயரையும் அவர் குறிப்பிட்டார். காவல்துறையினரும் அவர்களைக் கைது செய்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கொடி, துண்டறிக்கை எல்லாவற்றையும் விட்டு வந்திருந்தும் யாரும் எங்கள் மீது சந்தேகப்படவில்லை. இது எங்களுக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.

தமிழகச் சூழலில் அழித்தொழிப்பு என்பது எந்தளவுக்கு செயல்பாட்டுக்கு உகந்ததாக இருந்தது?

அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம் தான் சரி என்கிற சாரு மஜூம்தாரின் அணுகுமுறையே மிக செயற்கையானதாகும். இதை என்னுடைய சிறை வாழ்க்கையின்போதுதான் உணர முடிந்தது. தமிழகத்திற்கு வரும்போது, எங்களைப் பார்த்ததும் சாரு கேட்கும் முதல் கேள்வியே, 'அனிலேஷனுக்குத் தயாராக எத்தனை பேர் இருக்கிறார்கள்' என்பது தான். 'அடுத்து யாரைக் கொலை செய்யப்போகிறீர்கள், எத்தனை நாட்கள் தேவைப்படும், சரி உடனடியாக தயாராகி விடுங்கள். தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் முன் எனக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும்' என்று கூறிவிட்டுப் போய்விடுவார். இதுதான் அவரது உரையாடல் பாணி.

அந்தப் பகுதியின் நிலைமை என்ன, அந்தப் பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையே கிடையாது. அவரது வழியில் தான் அழித்தொழிப்புக்கு நாங்கள் ஆட்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது. கல்லூரியில் இருந்து நான் வரும்போது என்னைப் போல் வந்த தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். 'அழித்தொழிப்பின் விளைவாக புரட்சி வரும், சமூகம் மாற்றம் பெறும்' என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள், அது நடக்காமல் போனதால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள்; வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு எங்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். எத்தனை தோழர்கள் வந்தாலும் அவர்களைக் கல்லூரி விடுதியில் தங்கவைப்பது, அவரது ஊருக்கு வரும் தோழர்களைத் தங்க வைப்பது என பல உதவிகள் செய்வார். அவரை இயக்கத் தலைமை 'படிப்பை விட்டு விட்டு முழுநேர வேலைக்கு வா' என்றழைத்தது. அவரும் வந்தவுடனே 'அழித்தொழிப்பு செய்து விடலாம்' என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார். மிக ஏழ்மையான குடும்பம் அவருடையது, பால் வியாபாரம் செய்து தான் அவரது தந்தை அவரைப் படிக்க வைத்தார்.

அந்தத் தோழரை ஏதாவது கிராமத்திற்கு அனுப்பினால் போன நான்காவது நாள் திரும்பி விடுவார். அவரால் அங்கு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. அழித்தொழிப்புக்குப் போகும் தோழர்களுக்கு கருத்துக்கள், வழிமுறைகள் சொல்வதைத் தவிர இயக்கம் வேறு எந்த உதவியும் செய்வதில்லை. செலவுக்குப் பணமும் கொடுப்பதில்லை. நாங்களாகவே அங்கு சென்று வேலை செய்து எங்களது தேவைகளை கவனித்துக் கொண்டு, அழித்தொழிப்புக்கு அங்குள்ள ஆட்களை தயார் செய்து வேலையை முடிக்க வேண்டும்.

Charu Mazumdar இது எல்லோராலும் முடிவதில்லை. நடைமுறைக்கு சாத்தியமில்லாத இந்த நடவடிக்கைகளால் பொறியியல் தோழருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னால் எங்களிடம், 'ஒவ்வொருவரையாக அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலைக்குள் ஒரு பகுதி நிலச்சுவான்தார்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும்' என்பார். கபிஸ்தலம் மூப்பனாரில் தொடங்கி பூண்டி வாண்டையார் வரை இருபதுக்கும் மேற்பட்ட நிலச்சுவான்தார்கள் பெயரையும் ஒரே இரவில் அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதற்கான திட்டத்தையும் சொல்வார் அவர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பின்பு எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு தீக்குச்சியாகக் கிழித்து, 'பூண்டி வாண்டையார் அவுட், மூப்பனார் அவுட். எல்லோரையும் குளோஸ் பண்ணிட்டேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரை திரும்பவும் வீட்டிற்கே கொண்டுபோய் விட்டுவிட்டோம். நன்றாகப் படிக்கும் மாணவர் என்பதால் கல்லூரி நிர்வாகமும் அவரை சேர்த்துக் கொண்டது. அவர் படிப்பு முடிந்ததும் அவரது குடும்பம் அவரை வேறு மாநிலத்திற்கு அனுப்பி விட்டது. உண்மை நிலைக்குப் பொருத்தமில்லாத, புறச்சூழலை உள்வாங்காத கொள்கைகளால் இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இதுபோன்ற நிலையை நீங்கள் இயக்கத் தலைமையிடம் எடுத்துச் சொல்லவில்லையா?

இயக்கத் தலைமையெல்லாம் எதுவும் கிடையாது. சீனாவில் எப்படி மாசேதுங் தலைமையை யாரும் கேள்வி கேட்காமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டதோ, அதேபோல் சாரு மஜூம்தாரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருகட்டத்தில் முழக்கம் கூட எழுப்பப்பட்டது. சாரு மஜூம்தார் ஒரு சர்வாதிகாரியாகத் தான் செயல்பட்டார். மிகச் சாதாரண காரணங்களுக்காக இயக்கத்தில் பலரை அவர் வெளியேற்றினார். தொழிற்சங்கமே கூடாது என்றார். 'வர்க்க எதிரியின் இரத்தத்தில் கை நனைப்பவனே உண்மையான கம்யூனிஸ்டு', 'பத்து அழித்தொழிப்புக்களை மேற்கொண்டவன் இந்த உலகத்தில் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை' என எந்நேரமும் அழித்தொழிப்பு பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார் அவர்.

உங்கள் கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு பற்றி கூற முடியுமா?

சோளகர் கொலை முயற்சிக்குப் பிறகு, சிலநாட்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டோம். பிறகு இரண்டாவது அழித்தொழிப்புக்குத் திட்டமிட்டோம். அப்போது தோழர் ஏ.எம்.கே.வும் இன்னும் சில தோழர்களும் தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் அழித்தொழிப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம். எனக்கு அப்போது பத்தொன்பது வயது. என்னுடன் வேலை செய்தவர்கள் இருபத்தெட்டு, முப்பது வயதுடையவர்களாக இருந்தார்கள்.

அடுத்த அழித்தொழிப்பாக திருவாரூர் முத்து தங்கப்பாவைத் தேர்வு செய்தோம். அவர் யூனியன் சேர்மேனாக இருந்து அந்தத் தேர்தலில் தோற்றுப் போயிருந்தார். ஜாதி ஆதிக்கம் உடையவர். சொந்த சாதி ஆட்களைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்தார். காவல்நிலையத்தில் கூட அவர் சொல்வதைத் தான் கேட்கும் நிலை இருந்தது.

அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அருகில் நெருங்க முடியாத அளவுக்கு சுற்றிலும் ஆட்களுடனே வலம் வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து கண்காணித்தபோது விடியற்காலையில் குளக்கரைக்கு தனியாக வருவார் என்பதை அறிந்தோம்.

தோழர் லெனின் தலைமையில் நாங்கள் அங்கே அவருக்காக காத்திருந்தோம். வெகுநேரம் கழித்து வந்த அவர் எங்களைப் பார்த்ததும், 'யாருடா, திருட்டுப் பயல்களா?' என்று கேட்டவாறே எங்களை நெருங்கினார். நாங்கள் மெதுவாக நகர ஆரம்பித்ததும், ஓடப்போகிறோம் என நினைத்த அவர் சுற்றி வயல்களில் வேலை செய்தவர்களை சத்தம்போட்டு அழைத்தார். தூரத்தில் ஆட்கள் ஓடிவர, அவரும் கீழே கிடந்த கற்களை எடுத்து எங்களை நோக்கி வீச ஆரம்பித்தார். உடனடியாக கையில் இருந்த அரிவாளால் தோழர் லெனின் அவரை வெட்ட, மீதமுள்ள நான்கு பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினோம்.

ஓடிவந்த அந்த கிராமத்து ஆட்களில் ஒருவர் எங்களில் ஒருவரைப் பிடித்துவிட, தோழரை மீட்பதற்காக அவரது கழுத்திலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினோம். அந்த ஊரின் அமைப்பு தெரிந்தவர்கள் தப்பித்து விட, நான் மாட்டிக் கொண்டேன். அந்த ஊர் மக்களுக்கு நான் நக்சலைட் என்றோ, நடந்தது அழித்தொழிப்பு என்றோ சொன்னால் எதுவும் புரியாது, நம்பவும் மாட்டார்கள். அந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் அப்பு செட்டியார் தான் ஆள்வைத்து கொலை செய்து விட்டதாக அவர்கள் நம்பினார்கள்.

என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டும் நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். என்னை முத்துதங்கப்பா இறந்து கிடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று அவர் தலைமீது என் தலையை வைத்து வெட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அங்கு யாதவராஜ் என்ற விசாரணை அதிகாரியிடம், நான் யார் என்பதையும் எங்கள் நோக்கத்தையும் கூறினேன்.

கொலை நடந்த இடத்தில் 'உனக்கு ஏன் மரணதண்டனை' என்று கொலைக்கான காரணத்தை சுவரில் எழுதியிருந்தோம். கூடவே கொடி, மாவோ சிலை ஆகியவற்றை விட்டு வைத்திருந்தோம். கொலையை முடித்த பிறகு அங்கு நின்று முழக்கங்கள் எழுப்பி விட்டுத்தான் தப்பி ஓடினோம். இதையெல்லாம் அதிகாரியிடம் கூறினேன். அவர் அதையெல்லாம் கைப்பற்றி வந்தார். அவருக்கு இந்தக் கொலைக்கான காரணங்கள் புரிந்து விட்டது. அவர் நக்சலைட் பிரிவு போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அழித்தொழிப்பில் ஈடுபட்ட இன்னும் இரண்டு தோழர்களை இரண்டு நாட்களில் கைது செய்தார்கள். கீழ்க்கோர்ட்டில் ஆயுள்தண்டனையும், மறுவிசாரணையின்போது நாகை நீதிமன்றத்தில் எனக்கு மரண தண்டனையும் கொடுக்கப்பட்டது.

எங்களது அழித்தொழிப்பின் நோக்கம் 'ஒரு பகுதியில் அழித்தொழிப்பு நடைபெற்றால் அங்கு மக்களிடையே மனமாற்றம் ஏற்படும், நிலச்சுவான்தார்கள் பயந்து ஓடிவிடுவார்கள், அங்கு நிலச்சீர்திருத்தம் நடைபெறும், அந்த இடத்தை புரட்சிக்கான அடித்தளமாக மாற்றிவிடலாம்' என்பது தான். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. முத்து தங்கப்பா கொலையைப் பொறுத்தவரை அந்தப் பகுதியில் அது கடுமையான சாதிப்பிரச்சனையாகத் தான் பார்க்கப்பட்டது.

அவர் கொலை நடந்த அன்று தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். எங்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது அவரது சாதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதில் இந்த சம்பவம் கொஞ்சம் தைரியத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் அது மட்டுமே எங்கள் நோக்கமாக இருக்கவில்லை.

சிறை வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது?

இந்திய நாட்டின் சட்டப்படி அரசியல் கைதி என்ற வகைப்பிரிவே கிடையாது. தாக்குதல் என்றல்ல, அரசியல் காரணங்களுக்காக ஓர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் கூட அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு தான் பதிவு செய்யப்படும். மறியல் செய்தால் 'அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தார்' என்று தான் வழக்குப் பதிவு செய்யப்படும்.

எங்களை நக்சலைட் விசாரணைக் கைதி என்று சொல்லி தனியாக அடைத்து வைத்து விட்டார்கள். சாதாரண கைதிகளாக இருந்தால் அவர்களுக்கு சில சுதந்திரங்கள் இருக்கும். அரசியல் கைதி என்றால் படிக்க, எழுத, நண்பர்களைச் சந்திக்க என்று சில வசதிகள் இருக்க வேண்டும். அதனால் எங்களை அரசியல் கைதியாக நடத்த வேண்டும் என்று போராடினோம். 'புத்தகங்கள் படிக்க, வெளியிலிருந்து வரும் புத்தகங்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இருபத்து நான்கு மணிநேரமும் கொட்டடியில் பூட்டியே வைக்கக்கூடாது. நாங்கள் இருந்த சிறையில் கழிப்பறை வெளியே கிடையாது. கொட்டடிக்குள் ஒரு மண்சட்டியை கொடுப்பார்கள். உள்ளேயே துணி துவைத்து, குளித்து உள்ளேயே இருக்க வேண்டும். எனவே வெளியே கழிப்பறை கட்டித்தர வேண்டும்' என்ற கோரிக்கைகளை வைத்துப் போராடினோம்.

Trotsky போராட்டம் என்றால் உண்ணாவிரதம் தான். இந்தப் போராட்டங்கள் சிறையில் எங்களுக்கு ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. சென்னை சிறையில் நாங்கள் இருக்கும்போது அங்கே மிசா கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறை அடக்குமுறைகளை மிசா கைதிகளால் தாங்கவும் முடியவில்லை, எங்கள் அளவுக்கு அதை எதிர்த்துப் போராடவும் முடியவில்லை.

மிசா காலத்தில் அரசியல் தலைவர், எம்.பி, எம்.எல்.ஏ. யாருக்கும் ஒரு மரியாதையும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் நக்சலைட் என்றால் சிறையில் தனி மரியாதை இருந்தது. அவர்கள் தான் 'அடித்தால் திருப்பி அடி' என்ற முழக்கத்தை சிறைக்குள்ளேயே எழுப்பியவர்கள். கொண்ட கொள்கைக்காக கைதாகி, சிறைக்கு வந்திருந்ததால் நக்சலைட் கைதிகள் சிறைக்குள்ளும் தங்களது கொள்கை எதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தோம். மிசா கைதிகளிடம் அந்தளவுக்கு கொள்கையும் கிடையாது; அதனால் போராட்டக் குணமும் கிடையாது.

சென்னை சிறை மிசா கைதிகளில் ஆற்காடு வீராசாமியும் ஒருவர். அவர் ஏற்கனவே நிறைய அடிகளை வாங்கியிருந்தார். அதேநேரத்தில் அவர் அடிக்குப் பயந்தவர். உபயத்துல்லா என்ற காவல்துறை அதிகாரி மேசையில் உட்கார்ந்திருப்பார். இவர் அவரது காலுக்குக் கீழே சென்று அமர்ந்து தன்னை அடிக்கக்கூடாது என்று கெஞ்சிக் கொண்டிருப்பார். அதற்குப் பதிலாக தனது வீட்டில் சென்று பணம் வாங்கிக்கொள்ளச் சொல்வார்.

அதே நேரத்தில் சிட்டிபாபு, முரசொலி மாறன், சி.பி.எம்.கட்சியைச் சேர்ந்த சிவாஜி போன்றோர் சிறை நிர்வாகத்தை எதிர்த்து தைரியமாகப் போராடினார்கள். இவர்களால் தான் சிறையில் பல மாற்றங்கள் வந்தது. ஸ்டாலினை முதலில் கடுமையாக அடித்ததோடு திருச்சி சிறைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி விட்டார்கள்.

சிறையில் நக்சலைட்களின் போராட்டம் எப்படி இருந்தது?

முதலில் எங்களது கோரிக்கைகளுக்காகப் போராடினோம். அடுத்தகட்டமாக சிறைக்குள் இருப்பவர்களோடு கலந்து அவர்களை இணைத்துக் கொண்டு ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.

அப்போது சிபிஎம் கட்சித் தோழர் ஏ.ஜி.கே. எங்களுடன் இருந்தார். அவர் எங்களுக்குப் பெரிய உந்துதலாக இருந்தார். அவர் சிறைக்குள் இருந்து கொண்டே காவலர்கள் இருபத்தைந்து பேரைத் திரட்டி அவர்களது கோரிக்கைகள் நிறைவேற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். சிறைப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு, விண்ணப்பங்களை அவர்தான் எழுதிக் கொடுப்பார். 'எங்களை நாகை கிளைச் சிறைக்கு மாற்றும்போது அங்கிருந்து தப்பித்து விடுவது' என்று நாங்கள் திட்டம் தீட்டியபோது, ஏ.ஜி.கே. தான் உள்ளேயிருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். ஆனால் திட்டம் தோல்வியில் தான் முடிந்தது.

'சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமை சங்கம்' என்ற சங்கத்தையும் தோழர் ஏ.ஜி.கே.தான் ஏற்படுத்தினார். உரிமைக்குரல் என்ற பத்திரிகை நடத்தினார். நானும் அதில் எழுதினேன். அவரது உந்துதலின் பேரில் எழுத்தறிவு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினோம். எழுதப் படிக்கத் தெரியாத தூக்குத்தண்டனை கைதிகளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தோம். அதே நேரத்தில் அரசியல் ரீதியாக அழித்தொழிப்பு, ஆயுதப் போராட்டம் என்கிற எங்களுடைய பழைய கருத்திலிருந்து விடுபட்டோம். எல்லாப் போராட்ட வடிவங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தது.

நீங்கள் ஒரு கொள்கையை நம்பி வீட்டைவிட்டு வெளியேறுகிறீர்கள். பல இழப்புகளுக்குப் பின் கைதாகி, தூக்குத் தண்டனையும் கிடைக்கிறது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கை தவறு என்று பட்டபோது எப்படி இருந்தது?

புரட்சி மற்றும் அதன் மீதான நம்பிக்கை என்பது புனிதமானது. அந்த நம்பிக்கையை என்றுமே மாற்றிக்கொள்ள முடியாது. அதில் உறுதியாக பிடிப்பு வைத்து விட்டேன். அந்தப் புரட்சிக்கு இதுதான் சரியான அமைப்பு என்பதிலும் அதே அளவு நம்பிக்கை வைத்தாகி விட்டது. இதில் ஏதோ தவறு என்கிறபோது சில வழிமுறைகளில் ஏற்பட்ட தவறு என்றுதான் இயல்பாகவே முதலில் தோன்றும்.

சிறையில் இருக்கும்போது வழக்கம்போல் மே நாள் கொண்டாடுவது, ஆகஸ்டு புரட்சி கொண்டாடுவது, அன்று எங்களுக்குள் கூட்டங்கள் நடத்துவது என்று ஏதாவது நடக்கும். அந்த நேரத்தில் அழித்தொழிப்பு மீதான நம்பிக்கை முழுவதுமாகப் போய்விட்டது. முதன்முதலில் ஏ.எம்.கே.வை சந்தித்தபோதே 'அவர் அழித்தொழிப்பு தனிமனித பயங்கரவாதமாக மாறிவிடுமோ' என்ற தன்னுடைய அச்சத்தைத் தெரிவித்திருந்தார்.

'அழித்தொழிப்பில் மக்களுக்கு என்ன பங்கு' என்பதுதான் எங்கள் முன் இருந்த பெரிய கேள்வியாக இருந்தது. மக்களின் பங்கு இல்லாத எந்தப் போராட்டமும் மக்களைத் திரட்ட உதவாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். "சீனத்தின் பாதை நமது பாதை, சீனத்தின் தலைவர் நமது தலைவர்" என்பது தான் அப்போது நாங்கள் நீதிமன்றத்தில் எழுப்பிய முழக்கம். சீனத்தின் பாதை எது என்பதை ஆராய்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வெகுஜனப் போராட்டம் தான் சரி என்பது சீனத்தின் கொள்கை. 'நாங்கள் பார்லிமெண்டில் பங்கேற்கவில்லை என்று யாரும் எங்கள் மீது குறைசொல்ல முடியாது. ஏனெனில் இங்கு பார்லிமெண்டே கிடையாது' என்று மாவோ சொல்கிறார். 'நாங்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு தேர்தலே நடைபெறவில்லை' என்றும் அவர் சொல்கிறார். தொடர்ந்து சீன வரலாற்றைப் படிக்கும்போது வெகுஜனப் போராட்டத்திற்கு எப்படி அவர்கள் தயாராகிறார்கள், அமைதிப் போராட்டத்திற்கு வாய்ப்பிருந்தால் அதையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.

அன்று ஜூலை 1 சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவன நாள். அன்று சிறைக்குள் எங்களுக்கிடையே பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்தது. சீனப்புரட்சிக்கும் இந்தியப் புரட்சிக்குமான வேறுபாட்டை நான் அறிக்கையாக முன்வைத்தேன். அதில் முக்கியமான வேறுபாடாக நான் குறிப்பிட்டது 'சீனா ஒரே மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடு. இந்தியா பலமொழிகளைப் பேசக்கூடிய ஒரு நாடு. அங்கு மொழி, புரட்சிக்கு ஒரு தடையாக இல்லை, இங்கு மொழி புரட்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது. இதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்' என்று பேசினேன்.

72ம் ஆண்டு என்று நினைக்கிறேன். சாரு மஜூம்தார் கைதாவதற்கு முன்பு பீகாரில் தலைமறைவாக இருந்து கொண்டு ஒரு பேட்டி கொடுத்தார். கேள்வியில், 'சீனப்பாதைதான் உங்கள் பாதை என்றால் அங்கு நடந்தது போல் ஒரு நீண்ட பயணம் நடக்குமா?' என்று கேட்கப்படுகிறது. சாரு பதிலில், "நிச்சயம் நடக்கும். ஆந்திராவில் இருந்து வங்கத்தின் முடிவு வரை இந்த நீண்ட பயணம் நடக்கும்" என்று சொல்கிறார். அப்போது ஆந்திராவிலும், வங்கத்திலும் பெரிய அளவில் அழித்தொழிப்பு நடந்து கொண்டு இருந்தது.

சிறை நண்பர்கள் இதுகுறித்து என்னிடம் கேட்டனர். 'சீனாவின் நீண்ட பயணம் கேண்டண் தொடங்கி ஏனான் வரை நடைபெற்றது. அங்கு அனைவரும் சீனமொழி பேசுபவர்கள். இங்கு ஆந்திராவில் தெலுங்கு பேசும் மக்களோடு புறப்படும் நாம் ஆந்திர எல்லையைக் கடந்து மத்தியப்பிரதேசம் அல்லது ஒரிசாவிற்குள் நுழைந்ததுமே வேறு மொழி பேசும் மக்களை எதிர்கொள்ள வேண்டும். எனவே இங்கு நீண்ட பயணம் சாத்தியமில்லை' என்று சொன்னேன்.

அப்போதிருந்த மனநிலைப்படி 'இந்தியப் புரட்சி என்பது சாத்தியம். ஆனால் அதற்கு மொழி தடையாக இருக்கிறது. அதைக் கடப்பதற்கு இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்ற கருத்தே இருந்தது. இதேபோல் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கு எங்களுக்குள் கடுமையான விவாதம் நடைபெற்றது.

உங்களுடன் கைதான மற்ற தோழர்கள் இந்த விவாதத்தை எப்படி எதிர்கொண்டார்கள்?

அப்போது நக்சலைட் கைதிகள் பலருக்கு 'இன்னும் சில ஆண்டுகளில் புரட்சி வெற்றிபெற்று விடும்' என்ற தீர்க்கமான நம்பிக்கை இருந்தது.

'எழுபதுகளை புரட்சிகளின் பத்தாண்டுகளாக்குவோம்' என்று சாரு மஜூம்தார் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதாவது எண்பதுக்குள் புரட்சி வெற்றி பெற்று விடும் என்பதுதான் அதன் சாரம். அதை நாங்களும் நம்பினோம். 70ம் ஆண்டு இறுதியில் கைதாகி நான் சிறைக்கு வந்தேன். 71ல் புலவர் கலியபெருமாள் கைதாகி சிறைக்கு வந்தார். நீதிமன்றம் செல்வதைப் புறக்கணிப்பது, சிறையில் இருந்து தப்பிக்க முயல்வது போன்ற வேலைகளில் நாங்கள் ஈடுபடுவதை அவர் மிகவும் பாராட்டினார்.

அவர் சொல்வார், 'இதுதான் சரி. ஏன்னா புரட்சி ரொம்ப சீக்கிரமா வந்துட்டிருக்கு. 80 எல்லாம் ஆகாது, 75ம் ஆண்டிற்குள் புரட்சி நடந்து முடிந்து விடும், அதான் சாரு சொல்லிட்டார்ல' என்று சொல்வார்.

புலவரின் மனைவி அவரை சந்திக்க வருவார். அவர் சொல்வார், 'நீங்க ஒரு நாலுபேர் இங்க, புள்ளைங்க நாலு பேர் வேலூர் ஜெயில்லே. இவ்வளவுபேருதான் சொல்லிட்டிருக்கீங்க. நாட்டுலே ஒரு புரட்சியும் காணோம்' என்பார். புலவர் 'அதெல்லாம் உனக்கு விளங்காது' என்று சொல்லிவிடுவார். அந்தளவுக்கு, புரட்சி மீதான தவறான நம்பிக்கை எங்களிடம் இருந்தது.

அந்த நேரத்தில் தான் லெனினின் "புரட்சிகர வாய்ச்சொல்" என்ற புத்தகத்தைப் படித்தேன். அது என்னுள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற வெற்று நம்பிக்கைகளைத் தாக்கி எழுதப்பட்ட புத்தகம் அது. ரஷ்யாவில் ஏற்பட்ட போருக்குப் பின், மக்கள் அமைதியை விரும்பினார்கள். ஆனால் கெரன்ஸ்கி அரசு போரை தொடர்ந்து நடத்தியது. 'உடனடியாக போரை நிறுத்த வேண்டும்' என்று லெனின் விரும்பினார். அப்போது ரஷ்யாவின் சில பகுதிகளை ஜெர்மனி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதை போரின் மூலம் மீட்கும் வல்லமை ரஷ்யாவிடம் இல்லை.

அந்த நேரத்தில் ஜெர்மனி ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ட்ராட்ஸ்கி தான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர். அவரிடம் 'போரின் மூலம் ரஷ்யாவை இழந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து போரை நடத்த வேண்டும்' என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கட்சிக்குள் மூன்று பிரிவுகள் உருவானது. லெனினின் கருத்து கட்சிக்குள் சிறுபான்மையாகி விட்டது. சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ஜெர்மனி என்ன மோசமான நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு போரை நிறுத்த வேண்டும் என்பதே லெனினின் கருத்தாக இருந்தது.

'நம்முடைய நாட்டின் சில பகுதிகளை ஜெர்மனி தன்னோடு இணைத்துக் கொள்ளப் போகிறது, எனவே தொடர்ந்து போரிடுவோம். தோற்றாலும் பரவாயில்லை, அது புரட்சிக்கு உதவும். மேலும் ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடைபெறப் போகிறது. அந்தப் புரட்சி வெற்றி பெற்றால் ஜெர்மனி ரஷ்யாவின் பகுதிகளை தன்னோடு இணைத்துக் கொள்ளாது. அதன்பிறகு நமக்கும் அவர்களுக்கும் பகை இருக்காது. அந்தப் புரட்சி வெற்றி பெறும்வரை நாம் தொடர்ந்து போரிடுவது தான் சரி' என்பது ட்ராட்ஸ்கியின் கருத்தாக இருந்தது.

மூன்றாவது தரப்பு, 'இப்போது போரும் வேண்டாம், சமாதானப் பேச்சுவார்த்தையும் வேண்டாம், ஜெர்மனி புரட்சி விரைவில் வெற்றி பெறும், அதன்பின் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்' என்றது. ஆனால் லெனின் இவை எல்லாவற்றையும் மறுத்தார். 'போரினால் நிறைய இழந்து விட்டோம். எனவே எவ்வளவு அவமானம் வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு உடனடியாக போரை நிறுத்த வேண்டும்' என்றார். அதில் முக்கியமான கருத்தாக, 'ஜெர்மானியப் புரட்சி எப்போது வெற்றி பெறும்?' என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்குப் பதிலாக அவரே, 'ஜெர்மனியில் மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதிகளிலும் புரட்சி நடைபெறப் போகிறது, அது வெற்றிபெறப் போகிறது என்பதை நம்புவது வேறு. இந்த கோடைக்காலத்திற்குள் முடிந்து விடும், இந்த குளிர்காலத்திற்குள் நடந்து விடும் என்ற நம்புவது வேறு. இது வெறும் வாய்ச்சொல்' என்று சொன்னார். அதன்பிறகு லெனினுக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகியது. அமைதி தான் சரி என்று பெரும்பாலானோர் ஒத்துக்கொண்டனர்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ட்ராட்ஸ்கி சென்றார். பேச்சுவார்த்தைக்கான உடை அணிந்து வரவில்லை என்று கூறி அவர் அங்கே அனுமதிக்கப்படவில்லை. லெனினும், ட்ராட்ஸ்கியும் புரட்சியாளர்கள். மேடை நாகரிகமோ, உடை நாகரிகமோ, சரியான அலங்காரமோ அறியாதவர்கள். அதனால் அங்கிருந்து அவர் லெனினுக்கு தந்தி கொடுத்தார். 'குறிப்பிட்ட உடையில் தான் வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். நான் என்ன செய்வது?' என்று கேட்டிருந்தார். பதிலுக்கு லெனின், 'ஒருவேளை கவுனில் வரச்சொன்னால் கவுன் அணிந்து கொண்டு போ. நமக்கு அமைதிதான் முக்கியம்' என்று பதில் அனுப்பினார். நாட்டின் அமைதிக்காக அவமானகரமான அந்த ஒப்பந்தம் நஷ்ட ஈட்டோடு நிறைவேறியது.

'புரட்சிக்கு நாள் குறிப்பது வெறும் வாய்ச்சொல்' என்பதைப் படித்தவுடன் இந்தியாவில் புரட்சி 80க்குள் வரப்போகிறது என்ற வார்த்தைகளின் மீதே நம்பிக்கை போய்விட்டது. ருஷ்யப் புரட்சியை மற்ற தோழர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் ஆங்கிலத்தில் இருந்த புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தேன். புரட்சி குறித்த லெனினின் கருத்துக்கள் மிகப் புதியதாக இருந்தன. அதைப் படிக்கப் படிக்க நம் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பெரிய தவறு நடந்து விட்டது புரிந்தது. 'சீனத்தின் பாதை நமது பாதை' என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்பது புரிந்தது.

லெனின் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்துவார், 'எது புறநிலை உண்மைகளோ அதிலிருந்து தான் முடிவுகளுக்குச் செல்ல வேண்டும். ஏற்கனவே முடிவு செய்த கருத்தை வைத்துக் கொண்டு பேசக்கூடாது' என்று. என்னுடன் இருக்கும் தோழர்கள் ஏற்கனவே பல முடிவுகளை வைத்துக் கொண்டு நடக்கும் சம்பவங்களை அதில் பொருத்திப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். 'இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் மீதே எனக்கு சந்தேகம் இருப்பதாக' நான் கூறியபோது அவர்களுக்குக் கடுமையான கோபம் உண்டானது. எனவே நான் அவர்களுடன் விவாதிப்பதை நிறுத்தி விட்டு படிக்க ஆரம்பித்தேன்.

1973 அக்டோபர் 1 சீனப்புரட்சி நாளன்று 'கட்சிக்கு மறுப்பு' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதில், கட்சியின் அடிப்படையை ஆராய வேண்டும் என்று விவாதித்திருந்தேன். 'இப்போது எம்.எல். கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை ஆராய்கிறபோது அஸ்திவாரம் இல்லாத கட்டிடமாக அது எழுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பு எவ்வளவு அழகாக, ஈர்ப்புடையதாக, தியாகங்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருந்தாலும் அது உடைந்து சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது' என்று எழுதியிருந்தேன்.

Mao தோழர்கள் கொதித்துப் போனார்கள். அவர்களிடம் மீண்டும் நான் தெளிவாக 'நீங்கள் கோபப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை. இது சுக்குநூறாக உடையத்தான் போகிறது. ஒரு அமைப்பாகக் கூட இது நீடிக்காது. ஏனெனில் இதன் அடிப்படையே தவறு' என்று கூறினேன். இதைக் கேட்டதும் அடுத்த செல்லில் இருந்த தோழர் குருமூர்த்தி கதறி அழுதார். இன்னுமொரு தோழர், சுவரில் இருந்த இரத்தக்கறைகளைப் பார்த்து, 'போன வருடம் இதே இடத்தில் தானே போராட்டம் நடத்தி, இரத்தம் வருமளவுக்கு போலிசிடம் அடிபட்டு துன்பப்பட்டோம். எதற்காக இத்தனை துயரங்களையும் தாங்கினோமோ அதுவே தவறா?' என்று திக்கித்திணறி பேசினவர் கலங்கி நின்று விட்டார். அவரால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவருக்கு நான் அலெக்ஸாண்டரை பற்றிக் கூறினேன். லெனினின் சகோதரர் அலெக்ஸாண்டர் ஜார் மன்னரைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார். இது லெனினை மிகவும் பாதித்தது. இந்த நிகழ்ச்சி லெனினின் வாழ்க்கை வரலாறு நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. லெனின் வீட்டிற்கு வருகிறார். பக்கத்து வீட்டில் அவரிடம் ஒரு செய்தித்தாளை காண்பிக்கிறார்கள். அதில் 'Alexander Hanged' என்று இருக்கிறது. அடுத்த நொடி லெனின் சொல்வார், 'இதற்கான விலையை அவர்கள் எனக்கு செலுத்தியே ஆகவேண்டும்' என்று.

அலெக்ஸாண்டர் தான் லெனினுக்கு புரட்சிப் பாதையை காண்பித்தவர். ஆனாலும் அண்ணனின் பாதையை லெனின் நிராகரித்தார். விலை பெறுவதற்காக ஜார் மன்னரையோ, நீதிபதியையோ, அதிகாரிகளையோ தேடிச்சென்று கொலை செய்யவில்லை. மாறாக மன்னராட்சியை ஒழிப்பதற்காக ரஷ்ய மக்களைத் தான் திரட்டினார். எது நடைமுறைக்கு சரியான தத்துவமோ அதை எடுத்துக்கொண்டார்.

அதே போல் மாவோவின் மேற்கோளையும் உதாரணமாகக் காட்டினேன். 'தனிமனிதனா அமைப்பா என்று வரும்போது அமைப்பு தான் முக்கியம். அமைப்பா, அரசியலா என்று வரும்போது அரசியல் தான் சரி. கடந்த காலத்தில் தனிமனிதனா அமைப்பா என்ற கேள்வி வந்தபோது அமைப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறையில் இருக்கிறோம். இப்போது அமைப்பா, அரசியலா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அமைப்பு என்பதே அரசியலுக்காகத்தான். அரசியல் தவறாகப் போனபிறகு அமைப்பை தூக்கிப் பிடிக்க முடியாது' என்று சொன்னேன்.

'ஒரு சரியான விஷயத்திற்காக தூக்கில் தொங்கப்போகிறோம் என்ற திருப்தியில் தூக்குக்கயிற்றின் அடியில் நிற்கும்போது தான் செய்தது தவறு என்று தெரிந்தால் எப்படி தாங்கிக் கொள்வது' என்று கேட்டார் தோழர். உண்மையில் அவருக்கு மட்டுமல்ல அந்தக் கணம் எனக்கும் ஜீரணிக்க முடியாததாகவே இருந்தது. 'தூக்கில் போனாலும் பரவாயில்லை, இனியுள்ள தலைமுறைக்கு நாம் வந்த பாதை தவறு என்பதை சொல்லிவிட்டுத் தான் சாக வேண்டும்' என்று கூறினேன்.

சிறையில் இருக்கும்போது நீங்கள் செய்த மிக முக்கியமான பணி மூலதனத்தை மொழிபெயர்த்தது. அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சிறைக்குச் செல்லும் வரை மார்க்ஸ், லெனினின் எழுத்துக்களை அதிகம் படித்தது இல்லை. படித்திருந்தால் சாரு மஜூம்தாரின் எழுத்துக்கள் என்னை ஈர்த்திருக்காது. சிறைக்குள் நான் முதலில் படித்தது லெனினின் புத்தகங்கள். அதுதான் எல்லா புத்தகங்களையும் தேடிப்படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மார்க்சின் கூலி, உழைப்பு போன்ற சிறுசிறு புத்தகங்களைப் படிக்கும்போது தான் இதற்கெல்லாம் அடிப்படை மார்க்சின் 'மூலதனம்' என்பது தெரிந்தது. என்னுடைய மாமா தான் மூலதனம் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.

சிறையில் இருந்த தோழர் லெனினும், ஏ.ஜி.கே.வும் நான் மூலதனத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அதன்படி 75ல் அந்த வேலையை ஆரம்பித்தேன். 76 நடுவில் மூலதனத்தின் முதல் பகுதியை மொழிபெயர்த்து முடித்து விட்டேன். 77ல் என்னை மதுரை சிறைக்கு மாற்றினார்கள். அங்கிருந்து மொழிபெயர்த்த பகுதிகளை தோழர் பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பினேன். அவர் என்.சி.பி.ஹெச்சிடம் ஒப்படைத்தார். அவர்கள் கிருஷ்ணையாவிடம் கொடுத்து கருத்து கேட்டார்கள். அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். சோவியத்தில் 12 வருடங்கள் தங்கி இருந்து பல புத்தகங்களை மொழிபெயர்த்தவர். பல மூலதன மொழிபெயர்ப்புகளை நிராகரித்தவர். ஆனால் அவர் என்னுடைய புத்தகத்தை வெளியிடலாம் என கருத்து தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பை மாஸ்கோவிற்கு அனுப்பினார்கள். அவர்கள் மூன்று பகுதிகளையும் சேர்த்து வெளியிடலாம் என கருத்து தெரிவித்தார்கள். 79 கடைசியில் மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் மொழிபெயர்த்துத் தருமாறு தோழர் பாலசுப்பிரமணியம் என்னிடம் கேட்டார். அப்போது நான் சென்னை சிறையில் இருந்தேன். 80 ஜனவரி இறுதியில் தொடங்கி ஏப்ரல் 22 ம் தேதி இரண்டாம் பகுதியை மொழிபெயர்த்தேன். தினமும் இவ்வளவு நேரம் என திட்டமிட்டு இந்த வேலையைச் செய்தேன். ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் இரவு இரண்டு மணிவரை கூட எழுதியிருக்கிறேன்.

மே 1ம் தேதி மூன்றாம் தொகுதியை ஆரம்பித்து நவம்பர் 7ம் தேதி மொழிபெயர்த்து முடித்தேன். என்னுடைய புத்தகங்களோடு கலந்து அதை வெளியே அனுப்பினேன். அதன்பிறகு அடுத்தடுத்த வருடங்களில் திருச்சி, கடலூர் என பலச் சிறைகளுக்கு மாற்றப்பட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய மொழிபெயர்ப்பு மாஸ்கோவில் அச்சாகிக் கொண்டிருந்தது. அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்குத் தமிழ் தெரியாததால் ஒவ்வொரு எழுத்தையும் பெரிதாக வடிவமைத்து வைத்துக்கொண்டு உருவத்தைப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக அச்சேற்றிக் கொண்டிருந்தார்களாம்.

அந்த நேரத்தில் சோவியத் வீழ்ந்தது. இதில் என்னுடைய மொழிபெயர்ப்பும் காணாமல் போனது. ஆனால் என்.சி.பி.ஹெச்சிடம் அதனுடைய தட்டச்சு வடிவம் இருந்தது. அதை அவர்கள் ஒரு காப்பி ரைட்டரிடம் கொடுக்க அவர் அதை தப்பும் தவறுமாக திருத்தி வைத்திருந்தார். அதை மீண்டும் திருத்தி வடிவமைப்பதற்காக, 'மூன்று வருடங்கள் தொடர்ந்து மாஸ்கோவில் தங்கியிருக்க மொழிபெயர்ப்பாளரை அனுப்ப முடியுமா' என்று மாஸ்கோவில் இருந்து கேட்டார்கள். நான் அப்போது சிறையில் இருக்கிறேன். விடுமுறையில் இரண்டு மூன்று நாட்கள் தான் வெளியில் வந்து போக முடியும். இதற்கு முன்னரே என்னுடைய தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டதைக் குறிப்பிட வேண்டும்.

எனவே புத்தக வடிவமைப்பை சென்னையிலே செய்யலாம் என முடிவெடுத்து நான் சென்னை சிறைக்கு மாற்றல் வாங்கி வந்தேன். சிறையில் இருந்து கொண்டே அதன் திருத்த வேலைகளில் ஈடுபட்டேன். 85 நவம்பர் கடைசியில் விடுதலையானேன். மொழிபெயர்ப்புக்குத் தேவைப்பட்டது இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் அதை திருத்தி அமைப்பதற்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டது. அத்தனை உழைப்பையும் கொடுத்து எல்லா வேலைகளையும் முடித்த பிறகு புத்தகம் வெளிவர வேண்டாம் என என்.சி.பி.ஹெச்சில் முடிவெடுத்து விட்டார்கள்.

கலைஞர் ஆட்சிக்கு வந்ததைப் பயன்படுத்திக்கொண்டு நாகநாதன், ஜெமதக்னியின் மூலதன மொழிபெயர்ப்பைக் கொண்டு வர முயற்சி செய்தார். கலைஞரின் முன்னுரையோடு ஐந்து லட்ச ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டோடும் அது வெளிவந்தது. மிக அபத்தமான புத்தகம் அது.

அப்போதும் 'செலவு அதிகமாகும்' எனக் கூறி என்னுடைய புத்தகத்தை வெளியிட என்.சி.பி.ஹெச் யோசித்தது. 'முன்வெளியீட்டு திட்ட அறிவிப்பு வெளியிடலாம்' என்ற யோசனையைக் கூறினேன். அதன்படி பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்கள். நல்ல வரவேற்பு இருந்தது. புத்தகமும் வெளிவந்தது. எங்கள் புத்தக அளவிற்கு ஜெமதக்னியின் புத்தகம் விற்கவில்லை.

என்னுடைய மொழிபெயர்ப்பிலும் முதல் புத்தகம் மட்டும்தான் சரியாக வந்திருப்பதாகக் கருதுகிறேன். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் புரிந்து கொள்ள கடினமானவை. மார்க்ஸ் முதல் தொகுதிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். இரண்டாம் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளும், மூன்றாம் தொகுதிக்கு 9 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டார். முதல் தொகுதி ஒரு இலக்கியத் தரத்தோடு இருக்கும். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் வெறும் ஆய்வுக்குறிப்புகளாக இருக்கும். இன்னமும் யாராவது தமிழில் அதை எளிமையாக மொழிபெயர்க்க முன்வந்தால் அவர்களுக்கு குறிப்புகள் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இன்னொரு முறை மூலதனத்தை எளிமையாக மொழிபெயர்ப்பது சாத்தியமா என்று தெரியவில்லை.

சிறையில் இருந்து வெளி வந்தபிறகு சிபிஎம் கட்சியில் சேர்ந்தீர்கள். அதற்கு என்ன காரணம்?

நான் காங்கிரசில் இருந்தபோதே சி.பி.எம். செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியம் என்ற தோழருடன் நல்ல பழக்கம் இருந்தது. சிறையில் இருந்தபோது மீண்டும் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. எமர்ஜென்சி காலகட்டத்தின்போது சி.பி.எம்., "நாடு ஒரு சர்வாதிகார அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திராகாந்தியின் நடவடிக்கைகள் பாசிசத் தன்மையுடையது" என்ற கருத்தை வெளியிட்டது. இது எங்களை ஈர்த்தது. சி.பி.ஐ. அடக்குமுறைக்கு ஆதரவாக இருந்தது. சி.பி.எம். தான் அதை உறுதியோடு எதிர்த்தது.

'சீனா போன்று ஒரே மொழி பேசக்கூடிய நாடாக இந்தியா இருந்தால், சிறந்த நிர்வாகத்தை கொடுக்கக்கூடிய அரசாக சி.பி.எம்.தான் இருக்க முடியும்' என்ற நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. ஆனால் இந்தியா பலமொழிகளைப் பேசுகின்ற, பல சாதிகளைக் கொண்ட நாடாக இருப்பதால் தான் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. சாதி, மொழி இரண்டு பிரச்சனைகளும் இல்லாத இந்தியாவிற்கு அறிவியல் பூர்வமான வேலைத்திட்டம் என்பது சி.பி.எம்முடையது தான். ஆனால் அவை இரண்டும் இந்தியாவில் பிரச்சினைகளாக இருப்பதும், அவை குறித்து சி.பி.எம். கவனம் கொள்ளாமல் இருப்பதும்தான் இன்றளவுக்கும் அந்தக் கட்சிக்கு இருக்கும் பெரிய பலவீனம். நக்சலைட்களும் அப்படித்தான் இருந்தார்கள். சாதியை ஓர் உணர்ச்சி அடிப்படையில் தான் அணுகினோம்.

தேசிய இன சுயநிர்ணய உரிமையையும் தோழர்கள் பாலசுப்பிரமணியம், சுந்தரய்யா போன்றவர்கள் ஆதரித்தார்கள். ராமமூர்த்தி, ஈ.எம்.எஸ்.போன்றவர்கள் எதிர்த்தார்கள். இந்த ஒரு நிலைப்பாட்டைத் தவிர மற்ற கொள்கைகளில் எங்களுக்கு சி.பி.எம்.முடன் வேறுபாடு இருக்கவில்லை. எனவே சி.பி.எம்.மில் சேருவது என முடிவெடுத்தோம். 75ல் இதுகுறித்து பாலசுப்பிரமணியத்துக்கு கடிதம் எழுதினோம். அவர் எங்களை சிறையில் வந்து சந்தித்தார். அதிலிருந்து நாங்கள் சி.பி.எம். உறுப்பினர்கள் தான். சிறையிலிருந்து விடுதலையாகி, பின்பு கட்சியிலிருந்து நான் நீக்கப்படும் வரை சி.பி.எம். உறுப்பினராக இருந்தேன்.

(சி.பி.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள், தமிழ்த் தேசியத்திற்கான சாத்தியங்கள், தமிழ்த் தேசியவாதிகள் தனித்தனியாக செயல்படுவது, பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கியது, ஜல்லிக்கட்டு தமிழரின் அடையாளமா உள்ளிட்ட கேள்விகளுக்கு தியாகுவின் பதில்கள் நிறைவுப் பகுதியாக - அடுத்த வாரம்)

http://www.keetru.com/literature/interview/thiyagu_1.php

நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு பாகம் -1

http://4.bp.blogspot.com/_DdTSyQrsgJU/Sqe-yZ3lrZI/AAAAAAAAAJw/WmP05DHH2fc/s400/kamaraja.jpg
"அன்று மாலை காமராஜர் பேசினார். அவர் என்ன தப்பா சொல்லிட்டாருன்னேன், ஆயுதப்போராட்டம் வேணுங்கிறாருன்னேன், வேற வழியில்லாட்டி அதுதான் சரின்னேன், வச்சிருக்கவன் குடுக்க மாட்டான்னேன், ஆயுதப் போராட்டம் நடத்தினா நான் முதல்ல ஆயுதம் எடுப்பேனேன்' என்று பேசினார். அங்கு கரவொலி அடங்குவதற்கு வெகுநேரம் ஆனது."




நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு
நேர்காணல்: மினர்வா & நந்தன்


நக்சலைட் வாழ்க்கை, தமிழ்த் தேசிய செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் என பொது வாழ்க்கையில் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர் தோழர் தியாகு. 'மூலதனம்' மொழிபெயர்ப்பு தமிழ் அறிவுலக்குக்கு இவர் அளித்த மிகப் பெரிய கொடை. தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நிறுவி, மிகுந்த சிரமத்திற்கிடையில் விடாது தொடர்ந்து நடத்தி வருகிறார். 'சமூகநீதி தமிழ் தேசம்' இதழின் ஆசிரியர். மூன்று அமர்வுகளாக அவருடன் நடத்திய நேர்காணலிருந்து...


உங்களுடைய குடும்ப பின்னணி பற்றி கூறுங்கள்

Thiyaguஎன்னுடைய பூர்வீகம் சந்திரசேகரபுரம் அருகில் உள்ள நல்லம்பூர் என்கிற சிறிய கிராமம். என்னுடைய தாத்தா காலத்திலேயே அங்கிருந்து பிழைப்பு தேடி திருவாரூர் வந்து விட்டார்கள். அதனால் நான் பிறந்தது படித்தது எல்லாமே திருவாரூரில் தான். என்னுடைய அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்ததும் என்னுடைய அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வீட்டில் மொத்தம் எட்டு பிள்ளைகள்.

என்னுடைய அப்பா திருவாரூரில் ஆசிரியராக பணியாற்றினார். அதே பள்ளியில் தான் நானும் படித்தேன். கல்லூரிப் படிப்பு கும்பகோணத்தில் தொடர்ந்தது.

இதில் அரசியல் ஈடுபாடு எப்போது, எப்படி ஏற்பட்டது?

அப்போது திருவாரூர் கீழே வீதியிலே நிறைய பொதுக்கூட்டங்கள் நடக்கும். பத்து வயதிலேயே அதை மிக ஆர்வமாக கேட்பேன். என் அப்பா தான் அழைத்துச் செல்வார். பெரியார், அண்ணா, காமராஜர், ஜீவானந்தம், கலைஞர் போன்ற எல்லாத் தலைவர்களும் அங்கு பேசுவார்கள். ஒப்பீட்டளவில் அங்கு கம்யூனிஸ்டு கூட்டங்கள் குறைவாகத் தான் நடக்கும். 62 தேர்தல் நடைபெறும் போது என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அரசியல் அறிவு அப்போது இருந்தது.

62 இந்திய-சீன எல்லைப் போரின்போது சிறையில் இருந்து வெளியே வந்த அண்ணாத்துரை அதுகுறித்து திருவாரூர் தேரடி பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்தப் பேச்சு எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாமும் இதேபோல் பேச வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் மீது எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் 'படிக்காத மேதை', 'கல்வித்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்' என்ற வகையில் காமராஜரின் மீது எனக்கு தனி மரியாதை இருந்தது.

திருவாரூரில் அப்போது ஏராளமான படிப்பகங்கள் இருந்தன. தி.மு.க. ஒரு படிப்பகம் ஆரம்பித்தால் மறுநாளே அதன் பக்கத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு படிப்பகம் ஆரம்பிக்கும் அளவுக்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. தி.மு.க. சார்பில் முரசொலி, நம்நாடு, திராவிடநாடு, காஞ்சி என ஏராளமான பத்திரிகைகள் கிடைக்கும். கண்ணதாசன் தென்றல், திரை நடத்திக் கொண்டிருந்தார். காங்கிரசில் நவசக்தி வெளிவந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு என்ற பத்திரிகை, மா.பொ.சி.நடத்திய செங்கோல் பத்திரிகை என ஏராளமான பத்திரிகைகள் படிப்பகங்களில் படிக்கக் கிடைக்கும். இவற்றை விடாமல் வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது.

என்னுடைய பள்ளிப்படிப்பு முடியும்போது என்னுடைய வயது மிகக் குறைவாக இருந்தது. 14 வயதில் பதினோராம் வகுப்பு முடித்திருந்தேன். அதனால் உடனடியாக கல்லூரியில் சேர முடியவில்லை. எனவே 65 ம் வருடம் முழுவதும் படிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுவாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஆண்டு அது. திருவாரூரில் அப்போது கல்லூரி எதுவும் இல்லாததாலும், வேறு சில காரணங்களாலும் அப்பா தன்னுடைய வேலையை வலங்கைமானுக்கு மாற்றினார். நாங்கள் வலங்கைமானுக்கு குடிபெயர்ந்தோம். அந்த ஓராண்டில் தான் என் வாழ்க்கையின் பாதை திசைமாறியது.

கடவுள் எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என பல்வேறு விஷயங்களில் எனக்குத் தெளிவு கிடைத்தது. அதே நேரத்தில் நிறைய கேள்விகளும் எழுந்தன. இதனால் நான் ஏதாவது கட்சியில் சேர்ந்து விடுவேனோ என்று பயந்து போன என் அப்பா இந்தியாவில் இருக்கிற எல்லாக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் எனக்காக விண்ணப்பித்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. அதனால் என்னை தட்டச்சுப் பயிற்சியில் சேர்த்து விட்டார். என்னுடைய பாதை திசைமாறி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக தட்டச்சுப் பள்ளியில் இரண்டு மடங்கு காசு கொடுத்து அதிக நேரம் நான் அங்கு இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

அந்த தட்டச்சுப் பயிற்சி பள்ளியை நடத்தி வந்த அமீர்ஜான் என்பவரோடு நட்பு ஏற்பட்டது. அவர் ஒரு உறுதியான சாதி, சமய மறுப்பாளர். என்னுடைய கேள்விகளை அவரோடு விவாதிக்க ஆரம்பித்தேன். அவர்தான் என்னை நாத்திகனாக மாற்றினார். வீட்டின் வெளியே ஒரு பந்தல் போட்டு அதில் பத்திரிகைகள் வாங்கிப் போடுவார். அதற்கு 'நம்பிக்கை படிப்பகம்' என்று பெயர் வைத்திருந்தார். இன்றைக்கும் இந்தப் பணியை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். தட்டச்சு நிலையம் தவிர கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்தார். பலவித மருத்துவ முறைகளையும் கற்று ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ உதவிகளை செய்து வந்தார். சமகாலப் பிரச்சனைகள் குறித்து நிறைய துண்டறிக்கைகள் வெளியிடுவார். அவர் எனக்குள் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தினார். அதன் விளைவாக நடை, உடை, உணவு என எல்லா விஷயங்களிலும் அவரைப் போலவே மாறினேன்.

குத்தூசி குருசாமி போன்றவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தார்கள். அதன் முதல் மாநாட்டில் விஜயவாடா கோரே போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். அமீர்ஜானோடு நானும் அதில் கலந்து கொண்டேன். அதில் லெனின், மார்க்ஸ் போன்றோரின் புத்தகங்கள் இருபத்தைந்து பைசாவிற்கு விற்கப்பட்டது. மார்க்சியத்தோடான முதல் அனுபவம் அப்படித்தான் ஏற்பட்டது. இந்தப் புத்தகங்கள் குறித்து பல இரவுகள் நானும், அமீர்ஜானும் விவாதித்திருக்கிறோம்.

அப்போதுதான் நமக்கான அரசியல் எது என்கிற கேள்வி ஏற்பட்டது. அமீர்ஜான் கம்யூனிசம் தான் சரி என்றார். முழுவதும் அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுவது அவர்கள் மட்டும் தான் என்பார். ஆனாலும் சி.பி.ஐ. மீது அவருக்கு வெறுப்பு இருந்தது. காங்கிரசின் வால்போல் அவர்கள் செயல்படுவதாகக் குறைகூறுவார்.

ஆனால் நீங்கள் காங்கிரசில் இணைந்து நீங்கள் பணியாற்றினீர்கள் அல்லவா?

67 தேர்தல் நெருங்கும் நேரம். அமீர்ஜான் பணிமாற்றம் காரணமாக வேறு ஊருக்கு சென்று விட்டார். வேறு பல காங்கிரஸ் நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரசாரை விட, காங்கிரசை பெரியார் அதிகமாக ஆதரித்து பேசிக் கொண்டிருந்தார். என்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் முதலில் காங்கிரசை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினேன். தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களில் பேச அழைப்பு வந்தது. 67 தேர்தல் தோல்விக்குப் பிறகு தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு என்ற அமைப்பை காமராஜர் ஆரம்பித்தார். தஞ்சை ராமமூர்த்தி தலைவராகவும், வாழப்பாடி ராமமூர்த்தி பொருளாளராகவும் இருந்தனர்.

அதன் முதல் மாநாட்டில் பேசுவதற்காகத் தான் நான் முதன்முதலாக சென்னை வந்தேன். தமிழ்வாணன், கண்ணதாசன், ஜெயகாந்தன், காமராஜர் போன்ற பலர் அதில் கலந்து கொண்டனர். அப்போது எனக்கென்று தனியாக மொழிக்கொள்கை எதுவும் கிடையாது. 'இந்தியாவிற்கு இந்தி, தமிழ்நாட்டிற்கு தமிழ், உலகத்திற்கு ஆங்கிலம் என்கிற மும்மொழிக்கொள்கை தான் சரி. அதைத்தாண்டி மொழிப்பற்று என்பது போலியானது' என்கிற அமீர்ஜானின் கருத்தை நான் அந்த மாநாட்டில் பேசினேன்.

மொழியின் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் தோற்று விட்டதாக கருதப்பட்ட நேரமது. எங்களுக்கு மொழிப்பற்று இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில், 'மொழி என்பது விழி அல்ல, காலில் கிடக்கும் செருப்பு போன்றது. வீட்டிற்குப் போனதும் கழட்டி விடலாம். தேவைப்பட்ட இடத்தில் தேவைப்பட்ட நேரத்தில் மாட்டிக் கொள்ளலாம்' என நான் பேச, மேடையில் இருந்த காமராஜர் உட்பட அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்.

65 மொழிப்போர் காரணமாகத் தான் காங்கிரஸ் தோற்றுவிட்டது என்று கருதி, நாங்களும் மொழிப்பக்கம் தான் எனக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட மாநாடு அது. மாநாட்டில் என் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் என்னுடைய பேச்சு ரசிக்கப்பட்டது. அதன்பிறகு எங்கு மாநாடு நடந்தாலும் காமராஜர் முதலில் என்னைத்தான் பேசச் சொல்வார். அந்த அளவுக்கு அவர் என்னுடைய பேச்சுக்கு ரசிகராக இருந்தார்.

அதே போல் தான் மூப்பானாரும். என்னை பிரசங்கி என்றுதான் அழைப்பார். நான் அவரிடம் வேடிக்கையாக பலமுறை கேட்டதுண்டு, 'நாங்க தான் தலைவரா இருப்போம். நீங்க பிரசங்கியா இருங்கன்னு சொல்றீங்க, அப்படித்தானே?'. எனக்கு அப்போதே காங்கிரஸ் மீது விமர்சனம் இருந்தது. இது ஒரு பணக்காரக்கட்சி, பெயருக்கு காமராஜரை பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றியது. ஆனாலும் வாழப்பாடி ராமமூர்த்தி மீது பெரிய மரியாதை இருந்தது.

காங்கிரசில் அவர் ஒருவர் தான் இடதுசாரி சிந்தனையோடு செயல்படுபவர். 67 தேர்தலில் பெரியார் காமராஜரை தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். விருதுநகரில் காமராஜர் தோற்றபோது காங்கிரசாரை விட அதிகம் அதிர்ச்சி அடைந்தது திராவிடர் கழகத்தினர் தான். தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பெரியாரை திருச்சியில் சந்தித்த அண்ணா, 'இந்த ஆட்சி உங்களுக்கு சமர்ப்பணம்' என்று சொன்னவுடன் 'இப்போது தான் திராவிட ஆட்சி மலர்ந்திருக்கிறது' என்று அண்ணாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் பெரியார்.

பெரியாரின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்து திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டவர் தான் வாழப்பாடி ராமமூர்த்தி. அப்போது மாணவர்கள் அதிகம் காங்கிரசில் இணைந்து கொண்டிருந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக மேடைகளிலும் பேச வைக்கப்பட்டனர். தமிழ்வழிப் படிப்பு குறித்து நான் அதிகம் மேடைகளில் பேசிய காலகட்டம் அது. என்னுடைய இந்தப் பேச்சுக்களை காமராஜர் விரும்பிக் கேட்பார்.

காங்கிரசின் முக்கிய பிரமுகர் சீனிவாச சாஸ்திரியின் ஊர் வலங்கைமான் தான். நானும் வலங்கைமானைச் சார்ந்தவன் என்பதால் காமராஜர் என்னை சாஸ்திரி என்றுதான் அழைப்பார். காமராஜருக்கு தமிழகத்தில் உள்ள கிராமங்கள் குறித்து அவ்வளவு விவரங்கள் தெரியும். எந்த வழியில் போனால் சீக்கிரம் போக முடியும், எந்தெந்த கிராமத்தில் எந்த பேருந்து நிற்கும், எங்கு ரயில் போகும் போன்ற அனைத்து விவரங்களும் அவருக்குத் தெரியும். அவருடன் கடைசியாக கொள்ளிடக் கரையில் உள்ள நாயகனைப் பிரியாள் என்ற கிராமத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

என்னுடன் கல்லூரி மாணவர் சம்பத்தும் வந்திருந்தார். அன்று காமராஜர் வேறு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் முதலில் பேசிவிட்டு கிளம்புவதாகத் திட்டம். அவர் பேசி முடித்ததும் கூட்டத்தைப் பார்த்து, 'எனக்குப் பிறகு கல்லூரி மாணவர்கள் பேசுவார்கள், அவர்கள் பேச்சைக் கேட்டபிறகு தான் நீங்கள் போக வேண்டும்' என்று கூறிவிட்டு காரை நோக்கி சென்றார். அவருக்குப் பின்னாலேயே மொத்தக் கூட்டமும் கலைய ஆரம்பித்தது.
காமராஜருக்கு கோபம் வந்து விட்டது. வேகமாகத் திரும்பி மேடையேறி மைக்கை வாங்கியதும் கூட்டம் திரும்பி வந்தது. 'போகக் கூடாதுன்னேன், எல்லாரும் போயிட்டீங்கன்னேன், இப்ப நான் பேச்சை கேட்கப் போறேன்னேன், நீங்க யாரும் கேட்கக் கூடாதுன்னேன்' என்றபடி மேடையில் அமர்ந்து விட்டார். கூட்டமும் மௌனமாக அமர்ந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும்போதே காமராஜர் எழுந்து போனார். கூட்டம் கலையாமல் அப்படியே அமைதியாக கடைசிவரைக்கும் இருந்தது. அதுதான் நான் அவரை சந்தித்த கடைசிக் கூட்டம்.

நீங்கள் கம்யூனிச பாதைக்குத் திரும்பியது எப்படி?

அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் பல அணிகளாக மோதல் உருவானது. நான், வாழப்பாடி ராமமூர்த்தி, பசுபதி போன்றோர் சோஷலிஸ்ட் அணி. இதேபோல் பல அணிகள் உருவானது. எனக்கு அப்போதே கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களுடன் தொடர்பு இருந்தது. தஞ்சையில் ஒரு பகுதியில் குடிசைகள் தொடர்ச்சியாக எரிவது ஒரு பிரச்சனையாக இருந்தது. மதுரையில் இருந்து லட்சுமிகாந்தன் என்பவர் அந்தப் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசினார். பொதுக்கூட்ட மேடைக்கு அருகில் சி.பி.எம். கட்சியினரால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஹோசிமின் வாழ்க என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த லட்சுமிகாந்தன் எங்கோ பிறந்த லெனினுக்கு இங்கென்ன வேலை, குடிசைகளை கொளுத்துவது சி.பி.எம்மின் வேலை என்று பேசினார்.

அந்தக் கூட்டத்தில் நான் கடைசியாகப் பேசினேன். 'எங்கோ பிறந்த லட்சுமிகாந்தன் இங்கு வந்து பேசுகிறார். இங்கு பிறந்த நேரு ஸ்பெயின் உள்விவகாரத்தில் தலையிடுகிறார் போன்ற பல செய்திகளை கூறிவிட்டு இதுபோன்ற விஷயங்களில் சர்வதேச பார்வை வேண்டும். இப்படி குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களை வைத்து விட்டு சோஷலிசத்தை காண முடியாது. கம்யூனிஸ்டுகள் ஏழைகளின் குடிசைகளை கொளுத்துவதாக லட்சுமிகாந்தன் பேசினார்.

கம்யூனிஸ்டுகள் கொளுத்துவார்கள், பங்களாக்களை கொளுத்துவார்கள், தானியப்போர்களை கொளுத்துவார்கள். ஒருபோதும் ஏழைகளின் குடிசைகளை கொளுத்த மாட்டார்கள்' என்று பேசினேன். கூட்டத்தில் என்னுடைய பேச்சுக்கு நல்ல கரவொலி. கட்சிக் கூட்டத்தை கம்யூனிஸ்டு கூட்டம் போல் நடத்துவதாக மூப்பனார் என்னிடம் குறிப்பிட்டார். மாணவர் காங்கிரஸ் சார்பில் மார்க்ஸ் பிறந்த நாள் கூட்டம் நடத்தினோம். இப்படி கட்சிக்குள் எனக்கு வேறு ஒரு முத்திரை சுலபத்தில் விழுந்தது.
அந்த நேரத்தில் தஞ்சையில் மூப்பனாரின் மாந்தோப்பில் ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. அதில் சி.சுப்பிரமணியம் பேசினார். உற்பத்திப் பெருக்கம் தான் சோஷலிசத்திற்கான வழி என்பதுதான் அதன் சாரம். நிலச்சீர்திருத்தம் தான் முதலில் செய்ய வேண்டியது என நான் அவரிடம் வாதிட்டேன். அவர் சோவியத் ரஷ்யாவை ஒப்பிட்டுப் பேசினார். சோவியத் ரஷ்யாவில் எல்லா சீர்திருத்தத்திற்கு முன்பும் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றதாக நான் குறிப்பிட்டேன். நம் ஊரிலும் நிலச்சீர்திருத்தம் இருக்கிறதே என சி.சுப்பிரமணியம் பேசினார். இப்படியாக விவாதம் நீண்டுகொண்டே போனது.

'நில உச்சவரம்பு 30 ஏக்கர் தான் ஆனால் ஆயிரம் ஏக்கர் வைத்துள்ளவர்கள் நம் ஊரிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள் நீங்களெல்லாம் சட்டத்தை ஏய்ப்பவர்கள்' என்று கடுமையாக வாதிட்டேன். நான்கு காரும், இரண்டு பங்களாவும் வைத்திருப்பவர்களும் நில உச்சவரம்பு சட்டத்தை மீறாதவர்கள் தானா என நான் கேட்டேன். (நான் குறிப்பிட்டது மூப்பனாரை, அவரும் அங்குதான் இருந்தார்.) கோபத்தில் சி.சுப்பிரமணியம் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

மறுநாள் அந்த பயிலரங்கமே இரண்டுபட்டது. 'ஆயுதப் போராட்டமா, உற்பத்திப் பெருக்கமா எது சோஷலிசத்திற்கான வழி' என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடைபெற்றது. அந்த முகாமில் தான் காங்கிரசின் பத்து அம்சத்திட்டம் குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டேன். என்னுடைய முதல் புத்தகம் அது.

அன்று மாலை காமராஜர் பேசினார்.

'கூட்டத்திலிருந்து சி.எஸ். அவமானப்பட்டு வெளியேறியிருக்கிறார். காலையில் இருந்து காங்கிரஸா, நக்சலைட்டா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. நக்சலைட் என்று சொல்பவரை ஆதரிப்பதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர் என்ன தப்பா சொல்லிட்டாருன்னேன், ஆயுதப்போராட்டம் வேணுங்கிறாருன்னேன், வேற வழியில்லாட்டி அதுதான் சரின்னேன், வச்சிருக்கவன் குடுக்க மாட்டான்னேன், ஆயுதப் போராட்டம் நடத்தினா நான் முதல்ல ஆயுதம் எடுப்பேனேன்' என்று பேசினார். அங்கு கரவொலி அடங்குவதற்கு வெகுநேரம் ஆனது.

காமராஜரிடம் உங்களைக் கவர்ந்த விஷயம் எது?

அவருடைய ஆளுமை தான். யாரையும் அடக்கி விடும் அவரைக் கண்டு கட்சியில் அனைவருக்குமே ஒரு பயம் உண்டு. ஒருமுறை காங்கிரஸ் கூட்டத்தில் கண்ணதாசன் பேசினார், '47-67 இந்த இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்து விட்டது என்று அண்ணா கேட்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. அண்ணா ராணியம்மையை மணந்தும் இருபது ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை என்பதற்காக கணவரை மாற்றிவிடலாமா' என்று பேசினார்.

Kamaraj மேடையில் இருந்த காமராஜருக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. கண்ணதாசனிடம் இருந்து மைக்கை வாங்கி, 'இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னேன். பேசினதுக்கு உடனடியாக மன்னிப்புக் கேள், இல்லைன்னா இந்த இடத்தை விட்டு போயிடுன்னேன்' எனக் கடுமையாக கோபித்துக் கொண்டார். கண்ணதாசன் அந்த இடத்திலேயே மன்னிப்பு கேட்டார்.

ஜெயகாந்தனுடைய பேச்சும் காங்கிரஸ்காரர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. குடித்து விட்டுத்தான் அவர் மேடையேறுவார். ஏறியதும் தாறுமாறாக பேசத் தொடங்குவார். ஒரு பொதுக்கூட்டத்தில் சம்பத் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சை மேடையில் இருந்து காமராஜர் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கூட்டத்திற்கு தாமதமாக ஜெயகாந்தனும், கண்ணதாசனும் வருகிறார்கள்.

வந்தவர்கள் மேடையின் பின்வழியாக மேடையில் ஏறினார்கள். கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பெரிய கூட்டம் அது. அவர்களைப் பார்த்ததும் கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது. காமராஜர் திரும்பிப் பார்த்தார். பயத்தில் கண்ணதாசனும், ஜெயகாந்தனும் ஒரே தாவில் மேடையில் இருந்து கீழே குதித்து விட்டனர். காமராஜர் கண்ணதாசனை அழைத்து, 'ஏன் லேட்டு' என்று கேட்டார்.

'ரயில்வே கேட் பூட்டியிருந்தது, அதான்' என்றார் அவர். 'ரயில்வே கேட் பூட்ட முன்னாடி வந்திருக்கணும்னேன், இந்தக் கூட்டத்தில் நீங்க இரண்டு பேரும் பேச முடியாது திரும்பிப் போகலாம்னேன்' என்றார். இதைக் கேட்ட கூட்டத்தினர் 'கண்ணதாசனும், ஜெயகாந்தனும் பேச வேண்டும்' என்று கூச்சலிட்டனர். மேடையில் இருந்து எழுந்த காமராஜர் சம்பத்திடம் இருந்து மைக்கை வாங்கி, 'அவங்க இரண்டு பேரும் பேச மாட்டாங்கன்னேன், நான் பேசப்போறேன்னேன், கேட்கிறவங்க கேட்கலாம், மத்தவங்க எந்திரிச்சி போகலாம்னேன்' என்று கர்ஜிக்க கூட்டம் அப்படியே அமைதியானது. ஜெயகாந்தன் பயத்தில் மேடைப்பக்கமே வரவில்லை.

காங்கிரசில் நான் கலந்து கொண்ட கடைசிக் கூட்டம் எடமேடையில் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சோஷலிசக் கருத்தரங்கம் அது. பூண்டி வாண்டையார் தான் தலைமை வகித்தார். நான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சோஷலிசக் கருத்தரங்கிற்கு பூண்டி வாண்டையார் வேண்டாம் என கோரிக்கை வைத்தேன். அது நிராகரிக்கப்பட்டது. ஊரில் பாதிக்கு மேல் நிலங்களை வைத்துக் கொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வந்த நிலச்சுவான்தார் அவர்.

பேசுவதற்கான என்முறை வந்ததும் நான் எழுந்து, 'சில பேர் வீட்டில் ஒரு பக்கம் காந்தி படமும், மறுபக்கம் நேரு படமும் வைத்து நடுவிலே இரட்டைச் சவுக்கை வைத்திருக்கிறார்கள். (பூண்டி வாண்டையார் வீட்டில் தான் அது வைக்கப்பட்டிருக்கும். இரட்டைச் சவுக்கு என்பது பண்ணையடிமை முறையின் அடையாளம்) அந்த சவுக்குகள் யாருக்காக? இங்கே ஒரு பக்கம் பள்ளமாக இருக்கிறது. மறுபக்கம் மேடாக இருக்கிறது. பள்ளங்களை நிரப்ப வேண்டுமானால் மேடுகளை சரிக்க வேண்டும்' என்று பூண்டி வாண்டையாரை குறிவைத்துத் தாக்கினேன். என்னுடைய அந்தப் பேச்சு அங்கிருந்த மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தோடு நான் மனதளவில் முழுமையாக காங்கிரசில் இருந்து வெளியேறி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து என்ன சி.பி.எம்மா, எம்.எல்லா என்பதில் தான் எனக்குக் குழப்பம் இருந்தது. நண்பர்களோடு தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது. எம்.எல்லின் ஆயுதப் போராட்டங்களின் மீது எங்களுக்கு ஈர்ப்பு இருந்தது. சி.பி.எம். மக்களை திரட்டாமல் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்ற கருத்தை வைத்திருந்தது.

மனதளவில் இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர் காங்கிரஸ் தேர்தல் வந்தது. என்னை நிற்கச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தினார்கள். சி.பி.எம். தோழர்களும், 'நீங்க தேர்தல்ல நின்னு கலகம் பண்ணுங்க' என்று கூறினார்கள். போட்டியின்றி தேர்ந்தெடுக்க நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்திற்கு மூப்பனார் தலைமை வகித்தார்.

பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மூர்த்தி, நான் என மூன்று பேர் போட்டியிடுவதாக இருந்தோம். மூப்பனார் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். என்னிடம் பேசும்போது, 'போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக பட்டுக்கோட்டை ராஜேந்திரன் தெரிவித்து விட்டார். கட்சியில் பெரும்பாலானவர்கள் மூர்த்தி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே நீங்கள் விலகிக் கொண்டு நீங்களாகவே அவர் பெயரை முன்மொழிந்து விடுங்கள்' என்று கூறினார். நானும் அப்படியே செய்தேன்.

நான் நக்சலைட் ஆதரவாளன் என்பதால் என்னை விலக வைப்பதற்காக மூப்பனார் நிறைய வேலை செய்திருக்கிறார் என்பது பின்னால் தான் தெரிந்தது. அத்தோடு காங்கிரசில் இருந்து முற்றிலுமாக விலகி வெளியே வந்து விட்டேன். அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வருடம் மொத்தமே நான் ஏழு நாட்கள் தான் வகுப்புக்கு சென்றிருந்தேன். எனவே என்னால் தேர்வு எழுத முடியவில்லை. அடுத்த ஆண்டு தேர்வு எழுதுவதற்காக தினமும் கல்லூரிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறிவிட்டது.

இந்த நேரத்தில் நான் வலங்கைமானில் இருப்பது தி.மு.க. கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போன்ற பல திட்டங்களை அவர்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அவை தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படவில்லை. 'அண்ணாத்துரை அண்ணாச்சி மூணு படி என்னாச்சி!' போன்ற வாசகங்களை தட்டியில் எழுதி ஊர்ப்பொதுவிடத்தில் வைத்து விடுவேன். இது தி.மு.க. கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக அப்பாவை மன்னார்குடி தாண்டி ஒரு கிராமத்திற்கு மாற்றி விட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் குடும்பம் இடம்பெயரவில்லை. அப்பா மன்னார்குடியில் தங்கி வேலை பார்த்து வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இது எனக்கு நல்வாய்ப்பாய் அமைந்தது. அப்பாவிற்குப் பயந்து தினமும் வீட்டிற்கு வரவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா திங்கட்கிழமை காலை கிளம்பியதும் வெளியே புறப்படும் நான் அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதற்கு ஒரு மணிநேரம் முன்னாதாகத் தான் வீடு திரும்புவேன். அப்பாவிடமிருந்து அம்மா தொடர்ந்து என்னை காப்பாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது ராதா என்ற நண்பரின் அறிமுகம் ஏற்பட்டது. என்னுடைய பெரும்பாலான நேரங்கள் அவர் வீட்டில் தான் கழிந்தது. மாவோவின் அறிக்கைகளை மொழிபெயர்த்து துண்டறிக்கைகள் வெளியிடும் வேலையை அப்போது செய்தேன். Liberation பத்திரிகையில் சாரு மஜூம்தாரின் பேட்டி வந்தது. அதில் அவர், 'மாணவர்கள் படிப்பை விட்டு குடும்பத்தைத் துறந்து கிராமங்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்பு தான் நம்முடைய ஒரே முழக்கம்' என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியை படித்ததும் இதுதான் என்னுடைய வழி என்று நான் தீர்மானித்துக் கொண்டேன்.

அந்த நேரத்தில் உங்களுக்கு சி.பி.எம். கட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததல்லவா?

67 தேர்தலில் தி.மு.க., சுதந்திரா கட்சிகளோடு சி.பி.எம். கூட்டணி வைத்திருந்தது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி மீது எனக்கு கடுமையான வெறுப்பு இருந்தது. அவர்களோடு கூட்டணி வைத்ததால் சி.பி.எம். மீதும் கடுமையான கோபம் இருந்தது. சி.பி.ஐ., இன்னொரு காங்கிரஸ் என்ற கருத்துதான் எனக்கு அப்போது இருந்தது. 'உடனடியாக ஆயுதம் எடுத்து புரட்சிக்குத் தயாராக இருக்கும் எம்.எல்.தான் சரி' என்று முடிவு செய்திருந்தேன்.

கீழவெண்மணி கொடுமை எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குக் காரணமான ஆதிக்க கும்பலை உடனடியாக கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அதற்கு அழித்தொழிப்பு தான் சரி என்று அந்தப் பாதையை தேர்ந்தெடுத்தேன்.

எம்.எல். கட்சியில் எப்படி இணைந்தீர்கள்?

எனக்கோ, ராதாவுக்கோ எம்.எல். கட்சியுடன் நேரடியாக தொடர்பு இல்லை. முதலில் புதிய உலகம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பது என முடிவெடுத்தோம். என்னை ஆசிரியராகக் கொண்டு பத்திரிகை தொடங்கலாம் என முடிவெடுத்து விண்ணப்பம் அனுப்பினோம். அதே நேரத்தில் 'எனக்கு இயக்கத்தோடு நேரடியாக தொடர்பு வேண்டும்' என்று திருச்சியிலுள்ள அனந்தரங்கன் என்ற தோழரிடம் பேசினோம்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் நள்ளிரவில் தோழர்கள் அனந்தரங்கனும், ஏ.எம்.கேவும் எங்களை சந்திக்க வந்தனர். வந்தவுடனேயே ஏ.எம்.கே. அழித்தொழிப்பு குறித்து வகுப்பெடுக்க ஆரம்பித்தார். மறுநாளும் எங்களுடனே தங்கினார். எங்களின் அடுத்த வேலை பற்றி கேட்டபோது, பத்திரிகை ஆரம்பிக்கவிருப்பதாகக் கூறினோம். ஏ.எம்.கே. உடனே கோபமாகி, 'நாடே பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. புரட்சி வந்து கதவைத் தட்டும் நேரத்தில் பத்திரிகை நடத்தப் போகிறீர்களா, அப்படியானால் புரட்சிக்கான தயாரிப்பையே இனி தான் தொடங்கப் போகிறீர்களா?' என்று கேட்டார்.

'அதெல்லாம் சரிப்படாது. உடனடியாக கிராமத்திற்கு செல்லுங்கள்' என்று கூறி ஒரு முகவரியையும் கொடுத்தார். நான் உடனடியாக கிளம்பியாக வேண்டும். 'கடைசியாக ஒருமுறை வீட்டிற்குப் போய்விட்டு வந்து விடுகிறேன்' எனக் கூறினேன். ராதாவும் அவரது மனைவியும் என்னை கிண்டலாகப் பார்த்தார்கள். காரணம் அன்று வெள்ளிக்கிழமை. அப்பா ஊரிலிருந்து வந்திருப்பார். ராதாவின் மனைவி அவரிடம், 'இவரை நம்பி அழித்தொழிப்பு பண்ணப் போறீங்க, இப்ப இவர் வீட்டுக்குப் போவார் அப்பாவை பார்த்ததும் கசாப்புக்கடை ஆடு மாதிரி நிப்பார், புரட்சியெல்லாம் மறந்து போயிடும்' என்று கிண்டலாகக் கூறினார்.

'இல்லை நான் உடனடியாக வந்துவிடுவேன். அழித்தொழிப்பு தான் சரி' என்று உறுதியாகக் கூறினேன். 'அப்பா வந்ததும் தேடுவார் அதனால தான் வீட்டுக்குப் போகத் துடிக்கிறீங்க, உண்மையிலேயே அப்பா மேல பயம் இல்லைன்னா இன்னிக்கு வீட்டுக்குப் போகாதீங்க' என்று ராதா கூற அன்றும் மறுநாள் சனிக்கிழமையும் நான் வீட்டுக்குச் செல்லவில்லை. அப்போது கல்லூரியில் தேர்வு வேறு நடந்து கொண்டிருந்தது. நான் ஒரே ஒரு தேர்வு எழுதியிருந்தேன். அதிலும் பேப்பரை வாங்கி முழுவதும் மாவோவின் மேற்கோள்களை எழுதிக் கொடுத்து விட்டு வந்துவிட்டேன்.

Lenin சனி, ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை காலையில் வீட்டிற்குக் கிளம்பினேன். அம்மா பதட்டமாக இருந்தார். 'நீ ஏதோ மாவோ கட்சியில் இருக்கிறியாமே, அப்பாவுக்குத் தெரிஞ்சுப் போச்சு, உன்னுடைய பீரோவை உடைச்சிப் பார்த்துட்டார்' என்று கூறினார். நான் உடனடியாக வீட்டிலிருந்து கிளம்பி பக்கத்து ஊரிலுள்ள என் அக்கா வீட்டிற்குப் போய் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தேன். அப்பாவிடம் மாட்டிக்கொள்ளாமல் கிளம்பி விட வேண்டும் என்று சொல்லி என்னுடைய பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும் அப்பா வந்து விட்டார்.

என்னுடைய கையை உறுதியாகப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு போனார். 'உன்னுடையது எந்தக் கட்சி, உன்னுடைய தலைவர் யார்' எனக் கேட்டார். 'இருப்பது காங்கிரஸ் கட்சி, தலைவர் காமராஜர்' என்றேன். 'பொய் சொல்லாதே, உன்னுடைய தலைவர் மாசேதுங். மதுரை முத்து உள்ளூர் ரவுடி, மாசேதுங் வெளியூர் ரவுடி. உன் கட்சியோட பெயரென்ன' என்று கேட்டார். 'மார்க்சிய லெனினிய கட்சி' என்றேன்.

'முதல்ல மார்க்சிஸ்ட் கட்சி, அப்புறம் மார்க்சிய லெலினிய கட்சி, அடுத்து என்ன மார்க்சிய லெனினிய மாவோயிஸ்டா' என்று கேட்டு விட்டு என்னுடைய தேர்வைப் பற்றி விசாரித்தார். எழுதியிருப்பதாகக் கூறினேன். அதை கல்லூரியில் வந்து விசாரிக்க வேண்டும் என்று கூறிவிட்டு என்னுடைய கையை இறுக்கமாகப் பிடித்து கல்லூரியை நோக்கி இழுத்துக் கொண்டு போனார். பேருந்திலும் என்னுடைய பிடியை விடவேயில்லை. இவரிடம் இருந்து எப்படியாவது தப்பி ஓடிவிடுவது என்று முடிவு செய்தேன்.

பேருந்தில் இருந்து இறங்கியதும் இரண்டு சைக்கிள்களை வாடகைக்கு எடுத்தோம். நான் அப்பாவிடம், 'என்னுடைய ரிக்கார்டு நோட் நண்பனிடம் இருக்கிறது, அதை வாங்கிட்டு வர்றேன், நீங்க பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருங்கள்' என்று கூறிவிட்டு தப்பினேன். சைக்கிளில் நேரே ராதா வீட்டுக்கு போய், 'ராதா வந்துட்டேன் பாருங்க' என்றேன். அதன்பிறகு அப்பாவை பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் தான் பார்க்க முடிந்தது.

நக்சலைட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் எப்படி இருந்தது?

ராதா வீட்டிலிருந்து பெருமண்ணையூர் கிராமத்திற்குச் சென்று தோழர் மாணிக்கத்தை சந்தித்தேன். உடனடியாக வெண்மணி செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. ஊரிலுள்ள ஐந்தாறு இளைஞர்களைத் தயார் செய்து வெண்மணிக்கு அழைத்துச் சென்றேன். அதற்குள் நான் வயல்வேலைகளை கற்றுக் கொண்டேன். கிராம மக்களுடன் பழகுவதற்கு அது மிகவும் முக்கியமானது. வெண்மணி கொலைக்குக் காரணமான கோபாலகிருஷ்ண நாயுடுவின் வயலில் வேலை செய்தேன்.

ராமைய்யாவின் குடும்பத்தினரையும் சந்தித்தேன். இயக்கத் தலைமையும் எனக்கு ஆதரவாக இருந்தது. உங்களால் முடிந்தால் கோபாலகிருஷ்ணனை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள். கீழ வெண்மணியில் இருந்து திரும்பி மாணிக்கத்தைச் சந்தித்து அவரிடம் நான் கீழவெண்மணிக்கு சென்று வந்த விவரத்தைக் கூறினேன். அவர் சுவாரசியமில்லாமல் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசியதில், அவர் அழித்தொழிப்பு தயாராக இல்லை என்பது புரிந்தது.

அதோடு, மாணிக்கம் ஊரிலுள்ள பெண்களிடம் 'இவன் உங்கள் வீட்டு ஆண்களையெல்லாம் ஜெயிலுக்கு அனுப்ப திட்டம் தீட்டுகிறான்' என்று செய்தி பரப்பி விட்டார். என்னைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டவர்கள் என்னைக் கண்டதும் ஒதுங்கிப்போக ஆரம்பித்து விட்டார்கள். இவரை மீறி யாரும் வரப்போவதில்லை என்பது தெரிந்ததும் அவரது மகனை அழித்தொழிப்புக்குத் தயார் செய்தேன். இதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. கோபாலகிருஷ்ணனன வேறொரு குழு அழித்தொழித்தது.

கீழவெண்மணி கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது யார்? திராவிடர் கழகத்தினர் என்ற பேச்சும் இருக்கிறதே?

இல்லை. எம்.எல்.கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதைச் செய்தவர்கள். அவர்கள் ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளில் இருந்தவர்களாக இருக்கலாம். கீழத்தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில் ஒருபக்கம் இருப்பவர்கள் கம்யூனிஸ்டு கட்சிகளாகவும், எதிர்பக்கம் இருப்பவர்கள் திராவிடர் கழகத்தினராகவும்தான் பெரும்பாலும் இருப்பார்கள். இரண்டு அமைப்புகளுக்குமே அங்கு பெயர் பறையன் கட்சி என்பது தான்.

திராவிடர் கழகத்தினரும் இதே போன்று அழித்தொழிப்பு வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். திராவிட விவசாயத் தொழிலாளர் அமைப்பும் அந்த நேரத்தில் உதயமானது. அப்போது நாகைக்கு வந்த பெரியாரிடம் இதைப் பற்றி செய்தி சொல்லப்பட்டது. அதற்கு அவர் இதுபோன்ற காலித்தனங்களை நான் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனால் திராவிடர் கழகத்தில் இருந்து பல தோழர்கள் வெளியேறி எம்.எல்.கட்சியில் இணைந்தார்கள். தோழர் ஏ.ஜி.கேவும் 67 வரை திராவிடக் கட்சியில் இருந்தவர் தான்.

(தோழர் தியாகுவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள், சிறை வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பான உரையாடல் அடுத்த பகுதியில்)


http://www.keetru.com/literature/interview/thiyagu.php
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!