Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, December 11, 2009

♥ பேராண்மை ஜனநாதனின் அதிரடிப் பேட்டி...! ♥

நான் எடுக்கிற சினிமாவை ஒரு பத்துப் பேர் பார்த்தால் போதும் என்பதற்காக நான் சினிமா எடுக்க வரவில்லை. என்னுடைய நோக்கமும் அதுவல்ல. ஒரு படத்தை எடுத்தால் அதை உலகமே பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ....



 

நான் எந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டேனோ அதைத்தான் பேராண்மையில் சொல்லியிருக்கிறேன்

?ui=2&view=att&th=1257ded83ed7c1b6&attid=0.1&disp=attd&realattid=ii_1257ded83ed7c1b6&zwபேராண்மை


 பொதுவாக சினிமா என்பது மக்களுக்கானது என்றாலும் சீரியஸ் சினிமா, பாப்புலர் சினிமா என்ற பிரிவுகளிலேயே சினிமாக்காரர்கள் முடங்கிப் போய் விட்டனர் என்ற விவாதங்கள் உள்ளன. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சினிமாவை கற்று, சீரியஸான கருத்துகளை தம்முடைய படங்களில் சொல்லி வெகுஜன சினிமாவில் வெற்றிப் பெற்றவர். வெற்றிக்குப் பின்னால் எல்லோரும் செல்வார்கள் என்ற பேச்சுகள் இருந்தாலும் வெற்றியின் சூத்திரமும், சினிமா பற்றிய அறிதல்களும் இன்றும் மர்மங்களாகவே உள்ளன. இதைப் போல் பல சந்தேகங்களுடனும், கேள்விகளுடனும் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனை புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். அந்த சந்திப்பில் நடந்த நேர்காணலின் சில பகுதிகள்......
- முத்தையா வெள்ளையன்
கே: பேராண்மை படம் வந்த உடன் யார் இந்த ஜனநாதன் என்று பல பரிமாணங்களுடன் எல்லாரும் பேசிக் கொண்டனர். இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

எஸ்.பி.ஜனநாதன்
என்னுடைய அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் எழுத படிக்கத் தெரியாது. ஆனால் அப்பா சென்னையிலேதான் இருந்தார். அம்மாவை கிராமத்திலிருந்து திருமணம் செய்து அழைத்துக்கொண்டு வந்தார். எங்கப்பா கல்யாணம் செய்து கொள்வதற்கு ஊருக்குப் பொண்ணுப் பார்க்கப் போகிறபோது, அங்கு உறவு முறையில் மூன்று பெண்கள் இருந்தார்களாம். அப்போது யாரைத் திருமணம் செய்து கொள்வது என்கிற பிரச்சனை வரும்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுங்கள் என்று எங்கப்பா சொல்லியிருக்கிறார். அந்த சீட்ல எங்கம்மா பேரு இருந்ததால், கல்யாணம் பண்ணிக்கொண்டார். இந்தத் தகவல் எனக்கு போன மாதம்தான் தெரியும். ஒருநாள் நானும் என் தங்கை லெட்சுமியும் பேசிக் கொண்டிருக்கும்போது இந்தத் திடுக்கிடும் செய்தியைச் சொன்னார். நான் எடுத்த இயற்கை படத்திற்கு முன்பே எங்கம்மா இறந்துவிட்டார். ஆனால் இயற்கை படத்தில் இதே மாதிரி சீட்டுக்குலுக்கி பார்த்து பெண்ணை திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியும் வந்திருக்கிறது.
அடுத்ததாக கல்யாணத்திற்கு பத்திரிகை அடிக்கும் போதுதான் எங்கம்மாவுக்குப் பெயரே இல்லை என்று தெரிந்தது. பொதுவாக, பள்ளிக்கூடத்துக்குப் போனாதான் பெயர் வைப்பார்கள். அதனால் வெள்ளையாக இருக்கிறவங்களை வெள்ளச்சி, குட்டையா இருக்கிறவங்களை குட்டச்சி, கருப்பா இருக்கிறவங்களை கருப்பி என்றுதான் கூப்பிடுவார்கள். இன்றைக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. ஊரிலிருந்து வருகிறவர்கள் எங்கம்மாவை குட்டச்சின்னுதான் கூப்பிடுவார்கள். வாய்க்கு வந்தப் பேரோடுதான் எங்கம்மா வளர்ந்திருக்கிறார். ஆனால் எங்க அம்மா உயரமாக இருப்பார். கல்யாணத்துக்காக பார்வதி அம்மாள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
எனக்கு கூடப்பிறந்தவங்க ஏழு பேர். அதில் ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள். நான்தான் கடைசி. என்னோட தங்கை பிறந்த இரண்டு வருடத்தில் எங்கப்பா இறந்து விட்டார். அப்போது சென்னை மயிலாப்பூர் பஜார் ரோட்டில் பட்டாணிக்கடை எங்களுக்கு இருந்தது. அதற்கு ஆழ்வார் பேட்டையில் இருந்து சரக்கை எடுத்து கொண்டு வரவேண்டும். எங்க குடும்பத்தில் அப்பா என்ற நினைவே இல்லாமதான் வளர்ந்தோம். எங்கம்மா ஏழு பேரையும் வளர்த்து விட்டார்கள். ஆனால் முறைப்படி படிப்புக்கு ஏற்பாடெல்லாம் செய்ய முடியவில்லை. ஏனெனில் தினமும் கடையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், பட்டாணி வாங்கணும், அதை வறுக்கணும், பிள்ளைகளை பார்த்துக்கணும் என்று இந்த வேலைகளைப் பார்ப்பதற்கே அவங்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இன்னொன்று குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டால் தொந்தரவு இல்லாமல் கடை வேலைகளைப் பார்க்கலாம் என்று நினைத்தார்.
என்னோட அண்ணன்கள் படித்தது எல்லாம் 4-வது, 6-வது, 7-வது தான். எங்க குடும்பத்தில் அதிகமாக படித்தது நான்தான். என்னுடைய படிப்பு பி.யூ.சி. வரைக்கும்தான். நான் பி.யூ.சி. படிக்கும்போது ஒரே பரபரப்பாக இருக்கும். ஏனெனில் எங்க அண்ணனின் நண்பர்களெல்லாம் 4-வது, 5-வது படித்தவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அதைப்பற்றி யோசித்துப் பாத்தால் சிரிப்புதான் வருகிறது. இந்தச் சூழல்தான் நகரத்தின் கடைசிக்கட்டம். இன்னமும் சென்னை இப்படித்தான் இருக்கிறது. இந்த வாழ்க்கை திரைப்படங்களில் சரியாகப் பதிவாகவில்லை என்று நினைக்கிறேன்.
கே: உங்களுக்கு அரசியல் எப்படி அறிமுகமானது?
எங்க அண்ணன் தி.மு.க. அதனால் எனக்கு தி.மு.க. வட்டாரம் பழக்கமானது. என்னுடைய அண்ணனுக்காக எங்கம்மாவுக்கும் தி.மு.க. மேல் ஓர் ஆதரவு இருந்தது. எங்க வீட்டில் நாங்கள் சாமிக் கும்பிட்டதே கிடையாது. அமாவாசை, கிருத்திகை, வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம் எல்லாம் எங்களுக்குக் கிடையாது. எல்லா நாட்களும் நாங்கள் கறி சாப்பிட்டு இருக்கிறோம். ஏனெனில் என்னுடைய அண்ணன் மார்க்கெட்டில் மீன் வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம் போன்ற விரத நாட்களில் விற்காமல் போன மீதம் இருக்கும் மீன், ஆடு, கோழி, கறி வகைகள் எல்லாம் எங்க வீட்டிற்கு வந்து விடும்.
நான் 6-வது, 7-வது படிக்கும்போது தினமும் எங்க வீட்டிற்கு முரசொலி பத்திரிகை வரும். அப்போது எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்ற ரிக்ஷா ஓட்டுகிறவங்க, கைவண்டி இழுக்குறவங்க, தச்சுவேலை செய்யுறவங்க எல்லாரும் முரசொலி பேப்பரோடு கூடுவாங்க. அந்தப் பேப்பரைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். இன்றைக்கு அதை யோசித்துப் பார்த்தால் அப்போது எனக்குப் படிக்கத் தெரிந்திருக்கிறது; ஆனால் பேப்பரில் என்ன விஷயம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்களுக்குப் படிக்கத் தெரியவில்லை; ஆனால் பேப்பரில் என்ன விஷயம் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. நான் படித்துக்கொண்டு இருக்கும்போதே அதை இடை மறித்து விவாதத்தில் ஈடுபடுவார்கள். இப்படிப் போய்க்கொண்டு இருக்கும்போதுதான் எனக்கு அரசியல் அறிமுகமானது. இதன் ஊடாக பெரியாரைப் பற்றி படித்தப்போது பெரியார் இன்னும் ஆழமாக சொல்கிறார் என்று புரிந்தது. எங்கம்மா கடையெல்லாம் முடித்துவிட்டு இரவு வந்தால் அவங்களுக்கும் முரசொலி படித்துக்காட்ட வேண்டும். இதுதான் எனக்குத் தெரிந்த முதல் அரசியல். அதுவும் தி.மு.க. அரசியலாகத்தான் இருந்தது.
அப்போது எங்க தெருவிற்கு பக்கத்தில் இருக்கின்ற சில தோழர்களை சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது 1க்கு 16சைஸில் Youths Views என்று ஒரு பத்திரிகை வந்தது. அந்தப் பத்திரிகையில் சங்கராச்சாரி யார் என்ற ஒரு கட்டுரை இருந்தது. சில தோழர்கள் மூலமாக எனக்குக் கிடைத்தது. அடிப்படையில் நான் பெரியாரிஸ்டாக இருந்ததால் அந்தப் புத்தகத்தை உடனேப் படித்தேன். பிறகு அவர்களை சந்தித்தபோது இடதுசாரி சிந்தனைகள் உள்ளவர்களாக சங்கர், டி.எஸ்.எஸ். மணி, பாஸ்கர் ராய், பழனி, நாகராஜ் ஆகியோர் இருந்தனர். அவர்கள் பேசுவது இதுவரை எனக்குத் தெரிந்த அரசியலை விட வேறுமாதிரியான அரசியலாகவும், ஆழமாகவும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இருந்தது. முறைப்படியான படிப்பு என்ற சிந்தனையே இல்லாமல் இவர்களோடு விவாதிப்பது, கூட்டங்களுக்கு செல்வது என்று வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் இலங்கையில் குட்டிமணி, தங்கதுரை கொலை தமிழகத்தையே உலுக்கியது. அதுவும் என்னை மிகவும் பாதித்தது. அப்போது Youths Views என்ற பத்திரிகையின் ஆசிரியர் பாவெல். அவரிடம் தமிழ் ஈழத்துக்காக ஓர் இதழ் கொண்டு வரவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தேன். அவர்களும் நாங்களும் அதை யோசித்துக்கொண்டுதான் இருந்தோம் என்றார்கள். அதுவரைக்கும்1க்கு 16 சைஸில் வந்துகொண்டு இருந்த பத்திரிகையை 1க்கு 4 சைஸில் பெரிதாக கொண்டு வரவேண்டும் என்று அந்தப் பத்திரிகை ஆசிரியர் பாவெல் பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்தார்.
அந்த இதழில் என்னையும் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். என்னுடைய முதல் கட்டுரையும் அந்த இதழில்தான் பிரசுரம் ஆனது. அந்த இதழை சைக்கிளில் கொண்டுபோய் விற்றபோது ஈழத்திற்காக இருந்த எழுச்சியை உணரக்கூடியதாக இருந்தது. அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அதை இந்த நேர்காணலில் பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். குட்டிமணி, தங்கதுரை போன்றவர்களுடைய கோரிக்கையும் தமிழ் ஈழம்தான். ஆனால் என்னைச் சுற்றி சிலோன் பேக்கரி, சிங்கப்பூர் ஒயின்ஸ், மலேசியா வாட்ச் ரிப்பேர் கடை என்ற பெயர் கொண்ட கடைகள் இருந்தன. அதனால் என் வீட்டின் ஒரு பகுதியை இடித்து, தமிழ் ஈழம் தேநீர் விடுதி என்று பெயர் வைத்து டீ போட்டு விற்றேன். தமிழ் ஈழம் என்பதை முதன் முதலில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. இது அரசு ஆவண காப்பகங்களில் இருக்கிறது. ஏனெனில், டீக்கடையை பதிவு செய்து, லைசென்ஸ் வாங்கும்போது கடைக்கு பெயர் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் பதிவு செய்யப்பட்டது.
இந்த நேரத்தில் இடதுசாரி தோழர்களின் அறிமுகம், அவர்கள் கொடுத்த புத்தகங்கள், நானாக தேடி வாசித்த புத்தகங்கள் என்று இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி நான் பயணம் செய்தேன். நான் இடதுசாரி ஆதரவாளனாக மாறினேன்.
இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்த நீங்கள் சினிமா சரியாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?
என்னிடம் ஏதோ ஒரு கலைத்தன்மை இருக்கிறதாக தோழர் பாவெல் நினைத்துக்கொண்டு இருந்தார். இந்தக் கலையில் நான் சரியாக செயல்படுவேன் என்று அவர் நம்பினார். இன்று வரைக்கும் நான் ஒரு சிறந்த, நுட்பமான கலைஞனாக உணரவில்லை. என்னிடம் கலைத்தன்மை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து என்னுடைய உதவியாளர் ரோகாந்த் உடன் அடிக்கடி உரையாடவும் செய்கிறேன். பாவெல் என்னிடம் இருக்கும் திறமையைக் கண்டுபிடித்து சினிமாத்துறைக்கு போவது நல்லது என்று சொல்லி ஒரு சுலபமான வழியையும் கண்டுபிடித்தார். அதுவரைக்கும் கூட நான் சினிமாவுக்குப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை.
அப்போது தமிழ்மணி தயாரித்த மலையூர் மம்முட்டியான் படம் வெளிவந்தது. பாவெல் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று சொல்லி தமிழ்மணி உனக்கு உறவினர், அவரைப் போய் பார் என்று சொன்னார். ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பில் நீ சினிமாவிற்குப் போ என்று என்னை உசுப்பேற்றாமல், சரியான நடைமுறை சாத்தியங்களோடு ஆலோசனையும் கூறினார். சில சமயம் நமக்கு வாழ்க்கையில் சரியான ஆலோசகர்களும் தேவைப்படுகிறார்கள்.
அடுத்ததாக தமிழ்மணி தயாரித்த சோலைக்குயில் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அப்போது எதையும் சரியாக படிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இந்த விஷயம் இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்களுக்கும் தேவை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நான் இதை உணர்ந்ததால் சொல்கிறேன். நான் உதவி இயக்குனராக சேர்ந்தபோதே அதன் உள்ளே விழுந்துவிட்டேன். என்னுடைய முதல் படத்திலேயே நெகட்டிவ் என்றால் என்ன? பாசிட்டிவ் என்றால் என்ன? டெவலப்பிங் எப்படி இருக்கும் என்கின்ற விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற உதவி இயக்குனர்கள் எல்லாம் இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும். இவர்கள் காட்சி அமைப்பு, படப்பிடிப்பு, நடிப்பு, வசனங்கள் என்று அதற்கு மேல் போகாமல் நின்றுவிடுகிறார்கள்.
நான் கேமிரா மற்றும் அதன் வகைகள், லென்சுகளுடைய வேலை, நெகட்டிவின் வகைகள் மற்றும் எக்ஸ்போஸிங் முறைகள், டெவலப்பிங், புதுப்புது லைட்டிங் போன்றவற்றை இதை கையாளுகிறவர்களிடம் இன்றைக்கும் பேசிக்
கொண்டு இருக்கிறேன்.
ஏதோ ஒரு கருத்துச் சொன்னால் போர் அடிக்கும். தோல்வி அடைந்துவிடும் என்கிற எண்ணத்தைப் பேராண்மை படம் உடைத்திருக்கிறது என்றால் இந்த மாதிரி சினிமா தொழில்நுட்பத்தைக் கையாண்டதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
கே: நீங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக நுழைந்தபோது உங்களுடைய இருப்பை சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்ததா?
சினிமாவுக்குள் நுழைந்ததும் எனக்கு மிகுந்த ஆர்வமாக இருந்தது. இரவு, பகல் பார்க்காமல் வேலை செய்தேன். லேபை சுற்றிச் சுற்றி வருவேன். அங்கேயே தூங்குவேன். நான் சினிமாவுக்கு கிளாமருக்காவோ, கிரேஸ்காகவோ வரவில்லை. ஆனால் சினிமா என்னை ஈர்த்தது. சோலைக்குயில் படம் முடிந்தபோது ஒரு சிறந்த உதவி இயக்குனராக நான் அடையாளப்படுத்தப் பட்டேன்.
இந்தப் படத்தின் பைனான்சியர் ஏ. கோதண்டராமன். இவரை எல்லாரும் கே.ஆர். என்றுதான் கூப்பிடுவார்கள். இவரும் அந்தப் படத்தின் இயக்குனரும், கேமிராமேன் நம்பியாத்திரி, இயக்குநர் ராஜன் ஆகியோர் பிலிம் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள். அடுத்தப் படத்தை கே.ஆர். தயாரித்து டைரக்ட் செய்தார். அவருக்கு சிறந்த உதவி இயக்குனர் தேவைப்பட்டது. கே.ஆரும் அந்தக் கேமிராமேனும் என்னை விரும்பினார்கள். அதனால் ஈரமான ரோஜா என்னுடைய இரண்டாவது படமாக அமைந்தது. மேலும் கடுமையாக வேலை செய்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். உழைப்பும், கற்றலும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றாக இருந்தால் கற்றுக் கொள்வது சுலபம்.
ஈரமான ரோஜா படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸை பயன்படுத்தினோம். இந்தியாவில் முதன் முதலாக உதவி இயக்குனர் ஒருவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தியதும் இந்தப் படத்தில்தான். இந்தப் படத்தின் எடிட்டர் லெனின். அவர் இருப்பிடம் சினிமாவில் உள்ள பல ஜாம்பவான்கள் சந்திக்கிற இடமாக இருந்தது. லெனின் சாருடைய எடிட்டிங் ரூம் எனக்கு மிகப் பெரிய பட்டறையாக இருந்தது. பல சினிமா வரலாறுகளை கேட்பதற்கும், பல பிரமுகர்களை சந்திப்பதற்கும், பல தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கும் அந்தப் பட்டறை எனக்கு வாய்ப்புக் கொடுத்தது.
கே: சினிமாவில் எடிட்டரின் பாத்திரம் மிக முக்கியமானதுதானே?
சினிமா என்பது பெரிய கடல். அதில் நீச்சல் அடிக்க முடியாது என்கிற மனநிலையில்தான் சோலைக்குயில் படத்துக்குள் சென்றேன். இதில் ஒரு காட்சியை டூ ஷாட், கட் ஷாட், குளோசப் ஷாட் என்று பிரித்து எடுத்தார்கள். இப்படி அந்தப் படத்தின் சூட்டிங் முடிந்ததும் சினிமா என்பது இவ்வளவுதான், பெரிதாக ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து ஈரமான ரோஜாவில் வேலை செய்யும்போது ஒரு படத்தை எடுப்பது, மக்களைப் பார்க்க வைப்பது என்று எல்லா விஷயங்களிலும் நுழைய வேண்டி இருந்தது. ஈரமான ரோஜா படம் முடிந்த போது சினிமா மீண்டும் எனக்குக் கடலாகி விட்டது. சினிமாவுக்குள் நுழைந்ததற்குப் பிறகுதான் சினிமா எடுப்பது கடலாகத் தோன்றி, குளமாக மாறி, அதற்குப் பிறகு மீண்டும் கடலாக மாறியதை உணர்ந்தேன். இன்றைக்கு வரைக்கும் எனக்கு சினிமா ஒரு மாபெரும் கடலாகவே இருக்கிறது. அந்தக் கடலில் ஏதோ ஒரு பகுதியை சரியான நீச்சல் தெரிந்தால் மட்டுமே கடக்க முடியும்.
நான் இன்னும் முழுமையான படம் எடுக்கவில்லை. சரியான படம் எடுப்பதற்கு அபரிமிதமான திறனும் நுட்பமும் தேவை என்ற உணர்வோடுதான் இந்தப் பேட்டியை கொடுக்கிறேன்.
எடிட்டரின் மேசையை விட இயக்குனரின் மேசைதான் முக்கியம் என்று நினைக்கிறேன். இதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே நேரம் எடிட்டரின் மேசை என்பது இயக்குனரின் மேசைதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல்பிரேம், இதுதான் கடைசிபிரேம் என்று சொல்லும்போதே இயக்குனர் எடிட்டராகி விடுகிறார். எடிட்டர் என்பவர் வெறுமனே வெட்டி, ஒட்டுபவர் இல்லை.
சினிமாவில் எல்லாவிதமான கலைகளும் இருக்கிறது. சினிமா என்பது என்ன என்பதில் குழப்பம் இருக்கிறது. சினிமா யாருடைய கலை என்ற கேள்வியும் இருக்கிறது. உங்கள் கேள்வியில் இயக்குனருக்கு சமமாக எடிட்டராக இருப்பதால் இதை நான் பேச வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி நான் தோழர் வேட்டைக்கார கண்ணனிடம் பேசும்போது ஓவியம் என்பது ஓவியனுடைய கலை. இசை என்பது இசைக்கலைஞனின் கலை என்பது மாதிரி, சினிமா என்பது இயக்குனரின் கலை என்று சொன்னார். சினிமா என்பதை இயக்குனர்தான் தீர்மானிப்பார்.
உதாரணத்திற்கு பிதாமகன். அந்தப் படத்தில் அப்போது உள்ள கலைஞர்கள் எல்லோரும் இருந்து, இயக்குனர் பாலா இல்லை என்றால் அது பிதாமகன் இல்லை. அதே நேரம் பங்கு பெற்றிருந்த எல்லா கலைஞர்களும் இல்லாமல் பாலா மட்டும் இருந்தால் அது பிதாமகன்தான்.
ஒரு படத்தை முழுமையாப் பார்ப்பதும், தீர்மானிப்பதும் இயக்குனர்தான். நடிகை ஊர்வசி மேடம் பேராண்மை படம் சூட்டிங் வந்தபோது இதை வேற மாதிரியாக சொன்னார். அதாவது ஒரு படத்தை முழுமையாகப் பார்ப்பது இயக்குனர்தான். ஆனாலும் அந்த இயக்குனர்களுக்குக்கூட மக்களுடைய பார்வையில் பார்க்க முடியாது. மேலும் நீ ஒரு பார்வையில் எடுத்து முடிப்பாய். ஆனால் மக்கள் அதை வேற பார்வையில்தான் பார்ப்பார்கள். மக்களுடைய பார்வை எந்த முன் தீர்மானமும் இல்லாமல் இருக்கும். அடுத்தக் காட்சி என்ன என்று கூடத் தெரியாமல்தான் பார்ப்பார்கள். நீ ஒன்றுமில்லாத காட்சிதானே என்று நினைக்கும்போது மக்கள் அதை எமோசனலாக பார்ப்பார்கள். இதே மாதிரி கலையைப் பற்றிய கருத்தை இ.எம்.எஸ். எழுதிய மார்க்சியமும் கலையும் என்ற புத்தகத்தில் காண முடியும்.
ஒரு பிற்போக்கான கலைஞனுடைய படைப்பு முற்போக்கான விளைவுகளை கூட சமூகத்தில் ஏற்படுத்தும். அதே நேரம் ஒரு முற்போக்கு கலைஞனுடைய படைப்பு சமூகத்தில் பிற்போக்கான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். உதாரணமாக படம் எடுக்கிறபோது துண்டு துண்டாகத்தானே எடுக்கிறோம். அதுவும் ஒரு வருஷமா எடுக்கிறபோது சில வசனங்களை எழுதுவோம். பிறகு அதை மாற்றி எழுதுவோம். பேராண்மை படத்தில் உள்ள சில வசனங்கள் இன்று சிலாகித்துப் பேசப்படுகிறது. அந்த வசனங்களை எடிட்டிங் முடிந்தவுடன் சேர்த்தோம். உதிரி உதிரியாக எடுத்து சேர்த்து, மொத்தமாகப் பார்த்தபோது இந்த மாதிரி படம் எடுக்கிறேன் என்று சொல்லவே இல்லையே என்று எனது உதவியாளர் ரோகாந்த் கேட்டபோது, இந்த படம்தான் எடுக்கிறேன் என்று நானும் தொடங்கவில்லையே என்று சொன்னேன். அதாவது நாங்கள் படம் தொடங்கும்போது ஒரு நோக்கம் இருந்தது. உதிரி உதிரியாக எடுத்து உருமாறும்போது அதனின் வீச்சும், அபரிமிதமான படமாக உருமாறியிருக்கிறது. பேராண்மை படம் எவ்வளவு வரவேற்பை பெறும் என்பதைத் தாண்டி ஆழமாக விவாதத்திற்கு உள்ளாகும், நுட்பமாக ஊடுருவி மக்களிடம் செல்லும், குறைந்தபட்சம் ஐந்து வருடத்திற்கு விவாதங்கள் இருக்கும் என்று இன்றைக்குப் புரிகிறது. படத்தை எடுத்து ரிலீஸ் செய்தபோதுகூட மக்களிடம் மிக வீரியமாக சென்று அடையும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. விளைவு என்னவாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். இதைப் பார்க்கும்போது கலை என்பது என்னில் அப்பாற்பட்டதாக இருக்கிறது. எந்த ஒரு தத்துவம் பெரும்பான்மையான மக்களால் ஏற்கப்படுகிறதோ அப்போது அதற்கு பௌதீக சக்தி வருகிறது என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். கலைக்கும் இந்தத் தன்மை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
கே: சீரியஸாக சொல்லப்படுகிற கருத்துகள் வெகுசன சினிமாவில் பெரும்பாலும் வெற்றிப்பெற முடியவில்லை என்ற கருத்து உள்ளதே?
கொச்சையாக சொல்லவேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் வெற்றியடைய செய்யமுடியும். மூட நம்பிக்கையைக் கூட மாபெரும் வெற்றிப் படைப்பாக்க முடியும். மூட நம்பிக்கையையே வெற்றிப் படமாக்க முடியும் போது நம்பிக்கையை அதைவிட இன்னும் வெற்றிப்படமாக ஆக்கமுடியும். அப்படி வெற்றிப் படமாக்க முடியவில்லை என்றால் அது ஆக்கம் செய்கிறவனின் குறைதான். அதாவது அவனுக்கு சினிமா பற்றிய பார்வையும், கலையைப் பற்றிய புரிதலும் குறைவாக இருப்பதுதான் காரணம். இதனால் இரண்டு பாதிப்புகளை உணருகிறேன். சினிமா என்கிற கலை வடிவத்தையோ, தொழில்நுட்பத்தையோ சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் சிறந்த கருத்துகளை வைத்து படம் செய்கிறபோது அந்த படம் தோல்வி அடைகிறது என்றால் இரண்டு பாதிப்புகள் உருவாகிறது. அதில் ஒன்று படம் தோல்வியடைகிறது. மற்றொன்று அந்தக் கருத்துகளும் தோல்வியடைந்தது போலாகிறது.
சினிமா வட்டாரத்திலும், சில முற்போக்காளர்களின் மத்தியிலும் கூட சிறந்த கருத்துகள் சொன்னால் படம் ஓடாது என்கிற கருத்து இருக்கிறது. பொதுவாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு வருகிறார்கள். அந்த மாணவர்களை எப்படி திருப்தி படுத்துவது என்றுதான் சினிமா வட்டாரங்களில் பேச்சுவார்த்தை நடக்கின்றன. மாணவர்களை பிரதானமாக வைத்து எடுத்த திரைப்படத்தில் கூட வகுப்பறைகளே கிடையாது. அப்படி சில வகுப்பறைக் காட்சிகள் படத்தில் வந்தால்கூட தமிழாசிரியர்களை கிண்டல் செய்கிற மாதிரிதான் எடுக்கிறார்கள். எங்கோ ஒன்று, இரண்டு சிறந்த வகுப்பறைகளான ’பூ ஒன்று பூயலானது’, ‘நூற்றுக்கு நூறு’ போன்ற படங்களில் சந்தித்திருக்கிறோம்.
நான் எடுக்கிற சினிமாவை ஒரு பத்துப் பேர் பார்த்தால் போதும் என்பதற்காக நான் சினிமா எடுக்க வரவில்லை. என்னுடைய நோக்கமும் அதுவல்ல. ஒரு படத்தை எடுத்தால் அதை உலகமே பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதை நோக்கிப் போக வேண்டிய வேலையை செய்யவேண்டும். ஒரு முழு படத்தை எல்லாரும் பாசிட்டிவாக பார்க்க முடியாது. படத்தைப் பார்த்து எதிர்த்து சொல்கிறவர்களுக்கும் படம் எடுக்கவேண்டும். பொதுவாக படத்தை பொறுத்தவரைக்கும் பார்வையாளர்களைப் பற்றி ஒரு கணக்கு இருக்கிறது. அதில் உள்ள கிராஃபில் 1 முதல் 100, 50 முதல் 100, 80 முதல் 100 வரைக்கும் போனால் வெற்றிதான். 99ல் தொடங்கி 99ல் நின்றால் அது தோல்விதான். இந்தக் கணக்கில் அறிஞன், விஞ்ஞானி, தத்துவவாதி, பாமரன், குழந்தை, பெண்கள் என்று எல்லாரும் வந்து விடுவார்கள்.
கே: இயற்கை படம் எப்படி வந்தது?
நான் உதவி இயக்குனராக வேலை செய்துகொண்டு இருந்தபோது எனக்கு உடனே படம் எடுக்கவேண்டும் என்று எல்லாம் இல்லை. என்னுடைய உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் தான் நான் படம் எடுக்கவேண்டும் என்ற அவசியத்தைச் சொன்னான். நான் ஏற்கெனவே சொன்னமாதிரி உண்மையிலேயே பெரிய கலைஞன் இல்லை. என்னுடைய படைப்புகளில் கலைத்தன்மை இருக்கும். ஆனால் கலைஞனுக்கான தகுதியெல்லாம் இல்லை. நான் உதவி இயக்குனராக இருந்தபோது கே.ஆர். சாருடன் காதல் ரோஜா என்கிற படத்தின் டிஸ்கஸில் கலந்துகொண்டேன்.
அந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்கள், ஒரு கதாநாயகி. அதில் கதாநாயகி தம்மை காதலித்த கதாநாயகனைத் தேடிச் செல்கிறாள். போகிற வழியில் ஒரு பத்திரிகை நிருபரைச் சந்திக்கிறாள். அந்த நிருபர் அவளுக்கு நிறைய உதவிகள் செய்கிறார். காதலனைத் தேடிப் போய்க்கொண்டிருக்கும் போதே இந்த நிருபர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. இப்படி ஏற்படுவது சரியா தவறா என்று தெரியவில்லை. ஒரு சங்கடமான பயணம். அங்கே போய்க் காதலனைப் பார்த்தால் அவன் மோசமானவனாக இருக்கிறான். அதனால் நிருபரையே திருமணம் செய்துகொள் என்று படம் முடிகிறது. அப்போது நான் காதலனும் சிறந்தவனாக இருந்தால் படத்தை எப்படி முடிப்பது? என்று கேட்டவுடன் அங்கே ஒரே கசமுசாவாகிவிட்டது. உடனே கே.ஆர். ’ஏண்டா வேணும்னே குழப்பம் பண்றியா’ என்று கேட்டார். 'இல்ல சார் தாஸ்தோவ்ஸ்கி எழுதின வெண்ணிற இரவுகள் கதை இப்படித்தான் இருக்கிறது’. இப்போதுதான் படித்தேன் என்று கூறினேன். அப்போது கே.ஆர். இப்படி ஒரு கதை இருந்தால் அதை தனிப்படமாகவே எடு என்று சொல்லி ஒரு பைனான்சியரையும், விநியோகஸ்தரையும் அறிமுகம் செய்தார். ஆனால் எனக்குப் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஏனெனில் அந்தக் கதைக்கான விஷ§வல் போதுமானதாக இல்லை. இப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது. அந்தக் கதைக்கான விஷ§வலை யோசிக்கும்போது கதாநாயகி காத்துக்கொண்டு இருக்கிறாள். நிறைய ரயில்கள் வருகிறது. கடைசி ரயிலில் கதாநாயகன் வருகிறான். எனக்கு இந்த மாதிரி பஸ்ஸ்டாண்ட், ஏர்போர்ட் என்பதெல்லாம் சரியாக வரவில்லை. இடையில் நான் சென்னைத் துறைமுகத்தில் வேலை செய்ததால் கதாநாயகி லைட்ஹவுசில் காத்துக்கொண்டு இருக்கிறாள். கதாநாயகன் கப்பலில் வருகிறான் என்ற காட்சி சரியாகப்பட்டது. கடல் என்பது முடிவில்லாதது. இயற்கை படம் செய்ததே இந்த முடிவில்லாததுதான் காரணம். இந்தக் கதையை சொன்னபோது நிறையபேர், அதாவது சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி உட்பட எல்லாரும் படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாக இருக்கிறது அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
இந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர் குமார் ஆசைப்பட்டார். துறைமுகம், கப்பல் என்று வந்தவுடன் தயாரிப்பு செலவு அதிகமாகும் என்று யோசித்தார். உடனே நானும், என்னுடைய நண்பன் எட்வினும் தூத்துக்குடிக்குச் சென்று துறைமுகத் தலைவரைப் பார்த்து விஷயத்தைக் கூறினோம். பிறகு அவர் ஒரு நாளைக்கு 4, 500 ரூபாய்க்கு வாடகைக்கு படப்பிடிப்பு நடத்துவதை அனுமதிக்க ஒத்துக் கொண்டார். சென்னையில் சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்தினால் 25, 000 ரூபாய் வாடகையும், ஹோட்டலில் 1 லட்ச ரூபாய் வாடகையும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் தூத்துக்குடி துறைமுக கழகத்தின் கடிதத்தை தயாரிப்பாளரிடம் காண்பித்து, சாதாரணமாக ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்ன ஆகுமோ, அதே செலவுதான் ஆகும் என்று சொன்னவுடன்தான் தயாரிப்பாளர் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார். தயாரிப்பாளரைப் பொறுத்தவரைக்கும் புது இயக்குனர், முதலீடு, லாபம் என்பதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. இப்படித்தான் எனக்கு முதல் படம் அமைந்தது.
கே: எதிர்காலத்தில் என்ன மாதிரியான தொழில்நுட்பத்தில் சினிமாவை எடுக்க விரும்புகிறீர்கள்?
நான் சினிமாவை White Screen ஆகத்தான் பார்க்கிறேன். எனக்கு 8 MM, 16 MM, 35 MM, 70 MM ஆகிய ஃபார்மெட்டில் சினிமா எடுக்க ஆசை. இதில் 70 MM தொழில்நுட்பம் வருவதற்கிடையில் சினிரொமோ என்ற தொழில்நுட்பம் வந்தது. இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு என்பது மனிதர்கள் பார்ப்பது மாதிரி திரையில் காண்பிக்க முடியும். அதாவது ஒரு பொருளை மனிதனுடைய கண் 180 டிகிரி கோணத்தில் பார்க்கிறது. இதை 3 கேமராக்களில் சூட் செய்ய வேண்டும். இந்த சினிரொமோ தொழில்நுட்பத்திலும் 3D Filmlலும் படம் பண்ணுவதற்கு ஆசை. அதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது.
பிர்லா பிளானிட்டோரியத்தில் புது மாதிரியான ப்ரொஜக்டர் ஒன்று இருக்கிறது. செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஒரு ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, அந்தத் திரையே கோள வடிவத்தில் இருக்கும். அங்கே Multi Projector இருக்கும். நீங்கள் படத்தை அண்ணாந்துதான் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போது நாம் உண்மையில் அண்டவெளியில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை கொடுக்கும். ஆனால் இது அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்குத்தான் சரியாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கான டாக்குமெண்டரி பிலிம்களை இந்தத் தொழில்நுட்பத்தில் செய்வதற்கு ஆசையாக உள்ளது.
கே: உங்கள் அலுவலகத்தில் நிமாய் கோஷின் படம் உள்ளது. அவரைப் பற்றி.....
நிமாய்கோஷை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இது இளவேனிற் காலம் என்ற ஒரு திரைப்படம் எடுத்தார்கள். கோயமுத்தூர் ஆனந்துதான் இந்தப் படத்தை இயக்கினார். ஆனந்த் எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை. இந்தப் படத்திற்கு நிமாய் கோஷ்தான் கேமிரா. தோழர் பாவெல்தான் என்னைக் கூட்டிக்கொண்டுப் போனார். அப்போது எனக்கு சினிமாவைப் பற்றி அதிகம் தெரியாது. இரண்டு, மூன்று தடவை சூட்டிங் பார்க்க அனுமதி கிடைத்தது. இண்டோ-சைனா பிரெண்ட்ஷிப் அசோசியேஷன் தலைவராகவும், பிலிம் சொசைட்டிகளையும் நடத்தி வந்தார் நிமாய் கோஷ். ஒருமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு தொடர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போது ஐயங்கரன் அலுவலகத்தில் உள்ள என்னுடைய அறையில், என் தலைக்கு மேலே நிமாய்கோஷின் படம் இருப்பதைப் பார்க்க முடியும்.
நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் சேர்ந்து முதன் முதலில் மியூசிக் அசோசியேஷன் தொடங்கினார்கள். நிமாய்கோஷின் படங்களையும் பார்த்து இருக்கிறேன். நிமாய்கோஷ், எம்.பி. சீனிவாசன் ஆகியோர் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட செய்தி என்பது மார்க்சிய பார்வை உள்ளவர்கள் முதன் முதலாக எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக இருக்கிறார்கள். உதாரணமாக நிமாய்கோஷ் இந்தியாவில் திரைப்படங்களை 16 MMல் எடுத்து சினிமாஸ்கோப்பில் வெளியிட முயற்சி செய்து இருக்கிறார். அதை என்லார்ஜ் செய்கிற போது படத்தில் உள்ள காட்சிகள் புள்ளி புள்ளிகளாக படங்கள் தெளிவில்லாமல் தெரிந்தன. அதனால் நடைமுறையில் வராமல் போய்விட்டது. ஆனால் இன்றைக்கு வெற்றிகரமாக ஓடிய ‘சுப்பிரமணியபுரம்’, ‘பசங்க’ ஆகிய திரைப்படங்கள் 16 MMல் எடுக்கப்பட்டு என்லார்ஜ் செய்யும்போது இன்றைக்கு புதிய தொழில்நுட்பமான Digital intermediate (DI)னால் சினிமாஸ்கோப்பில் இன்று சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் நிமாய்கோஷ§க்கு அன்றைக்கு இந்த வசதி இல்லை. நிமாய் கோஷின் ஐடியாதான் ஜெயித்திருக்கிறது. இதற்கு காரணமான நிமாய்கோஷின் பெயர் தெரியாமலேயே போய்விட்டது. அதேபோல 3D படத்தை எடுத்திருக்கிறார்.
நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்ததுபோல சினிமா தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்தினர். உதாரணமாக முன்பு ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கட்டுப்பாட்டில் இசை அமைப்பாளர், இசைக் கலைஞர்கள் வேலை செய்வார்கள். அந்த இசையமைக்கும் வேலை முடிந்தவுடன் இசையமைப்பாளருக்கு உடனே தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்து விடுவார். ஆனால் அதில் தபேலா வாசித்தவர் அந்தப் படத்தின் வெற்றி தோல்வி வரை காத்திருந்து பேசிய சம்பளத்திற்கு பேரம் பேசி வாங்கிகொண்டு போவார். இந்த உறவுமுறை மிகக் கடினமாக இருந்தது. இந்த மாதிரியான சூழலில் நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் ஒரு யூனியன் ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் ஒரு பாடல் ஒளிப்பதிவு செய்யும்போது பல்வேறு இசைக் கலைஞர்களை இசை அமைப்பாளர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். ரெக்கார்டிங் முடிந்தவுடன் எல்லாருக்கும் பணம் பட்டுவாடா முடித்த பிறகுதான் கேசட் வெளிவரும். இந்த முறையை இவர்கள் இரண்டு பேரும்தான் கொண்டு வந்தார்கள். இந்த முறையால் தமிழ் சினிமாவில் பெரிய மாற்றமே வந்தது. இந்த மியூசிக் யூனியன்தான் முதன்முதலில் ஒரு அரங்கமே கட்டியது. அந்த அரங்கத்தில் சினிமாவின் பல யூனியன்கள் கூட்டம் இன்றும் நடந்து வருகிறது. நிமாய்கோஷ், எம்.பி. சீனிவாசன் ஆகியோர் கொண்டு வந்த இந்த முறை சினிமாவில் உள்ள இருபத்தி நான்கு யூனியன்களிலும் முன்னோடியாக இருக்கிறது. இதனால் உழைத்த பணத்தைப் பெற முடியும். இதை லெனின் சார் ரூமில் நான் கேள்விப்பட்டதுதான். ஏனெனில் நான் பரம்பரை சினிமாக்காரன் கிடையாது.
கே: சினிமாவில் பர்பெக்ஷன் முக்கியம் என்று சொல்கிறார்கள். உங்களுடைய பேராண்மைப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உண்மையிலே என்ன எடை இருக்குமோ அதே எடையில் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார்களே?
அமீர், பாலா போன்றவர்கள் ஒரு கதாபாத்திரத்தை கச்சிதமாக, சரியாக செய்கிறார்கள். அதனால் Fine Art என்றேன். அதற்கு உடனே அமீர் உங்களுடையது Modern Art என்றார். Fine Art என்பது ஒரு கதாபாத்திரத்தின் உடை, ஹேர்ஸ்டைல். தொழிலாளியாக இருந்தால் எவ்வளவு அழுக்கு இருக்கவேண்டுமோ அந்த அளவுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக காலையில் நடிகர் விக்ரம் குளித்துவிட்டு தான் சூட்டிங் வரும்போது அவர்மேல் ஒரு வாளி மண்ணைக் கொட்டச் சொல்வாராம் பாலா. என்னைப் பொறுத்தவரைக்கும் சின்ன சின்ன விஷயங்கள்கூட கொஞ்சம் சரியில்லை என்றாலும் நான் டேக் எடுத்து முடித்துவிடுவேன். அதற்காக அடுத்த டேக் எல்லாம் போவதில்லை. பேராண்மை படத்தில் வரும் இடைவேளைக் காட்சியை இப்போது பிரம்மாண்டமாக சொல்கிறார்கள். அது ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட காட்சிதான்.
என்னுடைய உதவியாளர்கள் நீங்கள் சரியாக கவனமில்லாமல் எடுக்கிறீர்கள் என்று சொல்வார்கள். என்னுடைய படத்தின் அளவு பெரியது. தயாரிப்பு செலவு குறைவு. அதனால் அடிதடியாக அடுத்தக் காட்சிக்கு போய்க்கொண்டே இருப்பேன். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி ஆயுதங்கள் மற்ற விஷயங்கள் உண்மையில் எப்படி இருக்கின்றதோ அப்படியே இருக்கவேண்டும் என்று நான் கவனம் செலுத்திக் கொண்டே இருப்பேன். இதில் ஏதோ ஒன்று பொய்யாக இருந்தால் காட்சியே பொய்யாகிவிடும். ஏனெனில் காட்சி புனைவாக இருக்கிறது. பேராண்மை படத்தில் நடித்த ரோலண்ட் கிங்லேங்கர் ஒரு ’மிசைலை’ நிறுத்துகிறார் என்கிறபோது அந்தப் பொருள் பொய் என்றால் அந்தக் காட்சியின் முக்கியத்துவம், டெம்போ எல்லாம் குறைந்துவிடும். பார்வையாளருக்கு அந்தக் காட்சியும் பொய்யாகிவிடும். அதனால் இவைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
பேராண்மை என்று தொடங்கும்போதே ஸ்டோரி போர்டை ட்ராட்ஸ்கி மருது வரைந்து கொடுத்தார். அதில் இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகளை ஆறு பேர் கொண்ட குழு கடந்து செல்ல வேண்டும். அந்தக் காட்சி மிக ரிஸ்காக இருந்ததால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் செய்தோம். இதற்காக ஒரு வருடம் வேலை செய்தோம். படம் முடியும்போது சேர்க்கலாம் என்று திரும்ப போட்டுப் பார்த்தால் அதில் இரண்டு, மூன்று ஷாட் உண்மையற்றதாக இருந்தது. அதைப் பார்த்தால் கிராபிக்ஸ் என்று தெரியும். இது பொய் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் மிகுந்த மனக்கஷ்டத்தோடு 300 அடியை வெட்டி எறிந்தோம். என்னுடைய சினிமா வாழ்க்கையில் வேறு படத்திலும் இதை பயன்படுத்த முடியாது.
கே: பேராண்மை வெற்றி பெரும் என்று நினைத்தீர்களா?
உறுதியாக வெற்றிப் பெறும் என்று நம்பினேன். எப்படி என்றால் மக்களை நம்பினேன். பொதுவாக மக்கள் நிறைய படம் பார்க்கிறார்கள். ஒரு தடவை என் நண்பர் தாஸ் சொல்லும்போது தமிழ் சினிமாவில் ஒரே கதையை வேற வேற மாதிரி எடுக்கிறார்களா? அல்லது வேற வேற கதையை ஒரே மாதிரி எடுக்கிறார்களா? என்றார். இந்தக் கேள்வி மக்கள் மத்தியிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக மக்கள் மத்தியில் இந்தக் கேள்வி இல்லாமல் இருக்க முடியாது. மக்கள் காசு கொடுத்து சினிமாவை கமிட்டடாகப் பார்க்கிறார்கள். தொடர்ந்து படம் பார்க்கும்போது ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்புத்தன்மை கண்டிப்பாக இருக்கும். அதே நேரம் டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்களை, சீரியஸான படங்களை தொலைக்காட்சி மூலமாக பார்க்கிறார்கள். இப்போது படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கமும் வந்திருக்கிறது. உதாரணத்திற்கு இந்தப் பேட்டியில் முன்பு சொன்னது மாதிரி என்னுடைய வீட்டுக்கருகில் இருந்த ரிக்ஷாகாரர்களும், கைவண்டிக்காரர்களும் தியேட்டரில் ஓடும் ஆங்கிலப் படத்தைப் பார்த்துவிட்டு கதை அமைப்புகளையும், காட்சி அமைப்புகளையும் டிஸ்கஸ் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் படத்தின் பெயரும், ஆங்கிலமும் தெரியாது. ஆனால் என்னிடம் ’தேவி காசினோ தியேட்டரில் இங்கிலீஷ் படம் ஓடுது. பார்த்துவிடு’ என்று சொல்லி இருக்கிறார்கள். பென்ஹர் படத்திற்கு என்னுடைய அண்ணன் எங்கம்மாவை கூட்டிக்கொண்டுப் போனார். படம் நன்றாக இருக்கிறது என்று எங்கம்மாவும் எங்களை கூட்டிக்கிட்டுப் போனார். எங்கம்மாவுக்கு தமிழே எழுதப் படிக்கத் தெரியாத போதும், ஆங்கிலமும் தெரியாத போதும் நல்ல படம் என்பதை அடையாளப்படுத்த முடிந்தது. ‘டென் காமாண்மெண்ட்ஸ்’, அமிதாப்பச்சன் நடித்த தீவார் படமும் இப்படித்தான் பார்த்தேன். ஆனால் எங்கம்மா நிறைய சினிமா பார்க்கிறவர் கிடையாது.
இதைப் பார்க்கின்ற போது ஒரு சாதாரண தமிழ் படத்திற்கு ஐம்பது ரூபாய் கொடுத்துப் பார்ப்பது, பென்ஹர் படத்திற்கும் ஐம்பது ரூபாய் கொடுத்துப் பார்ப்பது என்பதை ஒப்பு நோக்கும்போது மொழியைத் தாண்டி பென்ஹர் பார்க்கும்போது பயன் மதிப்பு அதிகமாக தெரிகிறது. அதனால் சரியான சினிமாவை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.
கே: டாக்கீஸ் 75 என்ற நிகழ்ச்சியை நடத்தி உள்ளீர்கள், அதைப் பற்றி கூறுங்கள்....
சினிமா எனக்கு எந்தக் காலத்திலும் கனவாகவோ, ஆர்வமாகவோ இருந்ததில்லை. எங்கள் வீட்டுக்கும் சினிமாவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நான் சினிமாவுக்கு போவேன் என்று ஒருபோதும் எங்கள் வீட்டிலேயோ அல்லது நானோ நினைக்கவில்லை. சோலைக்குயில் படத்தில் நான் வேலை செய்தது என் குடும்பத்திற்கு தெரியாது. பின்னால் உதவி இயக்குனராக வேலை செய்கிறேன் என்று சொன்னபோது சரி என்று சாதாரணமாக பதில் வந்தது. இன்றைக்கும் எங்க வீட்டில் உதவி இயக்குனர் என்றால் என்னவென்றேத் தெரியாது. இப்போதும் என்னுடைய படப்பிடிப்புகள் நடக்கிறபோது என் வீட்டிலிருந்து யாரும் வந்து சூட்டிங் பார்ப்பதில்லை.
அரசியல் ரீதியாக சுற்றிக்கொண்டு சினிமாவுக்கு வந்தபிறகு, நமக்கு முன்னோடியாக சினிமாவில் இருந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் டாக்கீஸ் 75 நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பேசும் படம் வந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதை அறிவித்தார்கள். இந்தியா முழுவதும் கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டத்தின் போக்கு என்பது கலை நிகழ்ச்சி கொண்டாடுவது மாதிரிதான் இருந்தது. வேறு ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் நான் வந்ததால் சினிமாவில் யோசிப்பது மாதிரி யோசிக்காமல், வேறு மாதிரிதான் யோசிக்க வேண்டியிருந்தது.
75 வருட சினிமாவை கொண்டாடும்போது யாரோடு சேர்ந்து கொண்டாடுவது என்ற கேள்வி வருகிறது. சினிமாவின் முக்கியமான 24தொழில் பிரிவுகள் உள்ளன. அந்த தொழில்நுட்ப குழுவினரோடும், யூனியனோடும் கொண்டாடுவோம் என்று முடிவு செய்தோம். சினிமாவில் கால்சீட் என்பது என்ன? இது எங்கே இருந்து வந்தது? நூறு வருடத்திற்கு முன்பு அமெரிக்காவின் சிக்காகோவில் பல போராட்டங்கள் நடந்து ஒருநாள் உழைப்பு என்பது எட்டு மணி நேரம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனால்தான் கால்சீட்டுக்கு இவ்வளவு பேட்டா என்று இன்று பேசுகிறோம். இதை நினைவுப்படுத்தும் விதமாக அந்த 75 வருட சினிமாவை உலகாயுதா என்ற அமைப்பின் மூலம் கொண்டாடினோம்.
என்னுடைய நண்பர் ஜி. ரவி By Cell என்ற ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார். அவர் இந்த 75 வருட விழாவைக் கொண்டாட சர்வதேச தன்மையில் ஒரு சினிமா படக்கருவிகளைப் பற்றி சினிமா டுடே என்ற ஒரு கண்காட்சியை சென்னை டிரேடு சென்டரில் நடத்தினார். அப்போது அந்த இடத்தில் எனக்கு ஒரு ஹால் கொடுத்தார். அதில் 24 சங்கங்களில் உள்ள மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் போது அவர்களுக்கு ஒரு பவுன் காசு கொடுக்க வேண்டும். இது போக டி.வி.யில் வேலைபார்க்கும் மூத்த தொழிலாளர்களில் மூன்று பேருக்கு இதே பரிசை கொடுத்துக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தோம். 75 தங்கக் காசுகளுக்கு ஏழு லட்ச ரூபாய் தேவைப்பட்டது. என்னிடம் காசு இல்லை. நான் ஈ படம் முடித்த பிறகு ஜி.வி. பிலிம்சில் ஒரு படம் செய்வதற்காக அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். பிறகு இந்த நிகழ்ச்சிக்காக அவர்களை தொடர்பு கொண்ட போது இந்த ஏழு லட்ச ரூபாயை ஜி.வி. பிலிம்ஸின் லண்டன் கணேஷ், வெங்கட்ரமணி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்வாக இருந்தது. பீதாம்பரம் என்பவர் எம்.ஜி.ஆருக்கு மேக்கப்மேன். இவருடைய பையன்தான் இயக்குனர் பி.வாசு. எனக்கு வாசு சார் போன் செய்து ரொம்ப நேரம் பேசினார். பீதாம்பரம் சாருக்கு இந்தத் தங்கக்காசு ஒன்றும் பெரிதில்லை. நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டார். சினிமாவுக்காக உழைத்திருக்கிறோம். ஆனால் சினிமாவில் கண்டுகொள்ளவில்லை என்று இருந்த சூழலில் இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.
இதன் தொடர்ச்சியாக இதனை இரண்டாவது வருடமாக கொண்டாடினோம். அந்த நிகழ்ச்சியில் இன்னொரு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்து இருந்தோம். அந்த நிகழ்வில் ஆரம்பகாலப் படங்களுக்கு விருது கொடுக்க எண்ணினோம். உதாரணமாக எனக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் 1954 வரைக்கும் தேசிய விருது என்பதே கிடையாது. இந்திய பேசும் படமும், தமிழ், தெலுங்கு பேசும் படமும்1931-ல் தொடங்கியது. முதன் முதலில் தேசிய விருது அறிவிக்கும்போது இந்திப்படங்களுக்கு மட்டுமே கொடுத்தார்கள். அதற்கு அடுத்த வருடம்தான் அகில இந்திய சினிமாவுக்கு கொடுத்தார்கள். 31-ஆம் ஆண்டு முதல் 54 -ஆம் ஆண்டு வரைக்கும் தேசிய விருதுக்கு முன்பு எடுத்த படங்களின் இயக்குனரோ, நடிகரோ, பாடல் ஆசிரியரோ என்று யாருமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. அதனால் புதிய கருத்தாக்கம் ஒன்றை உருவாக்கினோம். அந்தக் கருத்துப்படி உள்ளே செல்லும் போது புதிய பிரச்சனைகளை சந்தித்தோம். அந்தப் பிரச்சனை என்பது 1931-ல் வந்த காளிதாஸ் என்ற படம் தான் தமிழில் வந்த முதல் பேசும் படம். தெலுங்கிலும் அதுதான். இந்தப் படங்களிலிருந்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு வந்த படங்களில் சிறந்த படங்கள் என்று வருடத்திற்கு ஒன்றை தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்தோம். ஆனால் எங்களுடைய மூதாதையர்கள் எடுத்தப் படத்தை நாம் எப்படி தேர்தெடுப்பது? அதனால் எல்லா படங்களையும் தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பது என்று தொடர் திட்டமாக வைத்தோம்.
இதில் எனக்கு உதவியவர்கள் எனது உதவியாளர் ரோகாந்த் அறிமுகப்படுத்திய உதவி இயக்குனர்கள் உமர் மற்றும் சிவகாந்தன். இன்னொருத்தர் உதயராஜா என்பவர். இவர் ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்து வி.ஆர்.எஸ்.சில் வந்தவர். இவர்கள் முழு நேரமாக வேலை பார்த்தனர். அதில் உதயராஜா என்பவர் மூன்று நாளைக்கு முன்னால் இறந்து விட்டார்.
முதல் ஐந்து வருட திரைப்படங்களை தேடிப்போகும் போது, மொத்தமாக 99 படங்கள் வந்துள்ளன. ஆனால் இரண்டு படங்களின் காப்பிதான் இருக்கிறது. நெகட்டிவும் இல்லை. படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பெயர் இருக்கிறது. 1931 என்பது மிகப்பழமையான காலம் கிடையாது. இந்தச் செய்தி எங்களை மட்டுமல்ல, சினிமா வட்டாரத்திலேயே திகைப்பை ஏற்படுத்தியது. அந்தச் சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கமாட்டார்கள். அதனால் சந்ததிகளுக்கு விருது கொடுக்கலாம் என்று தேடினோம். அப்படி தேடும்போது ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது 1931 முதல் 1935 க்குள் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் கதாநாயகன் ராஜன் என்பவர். அவர் நான் தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்து தெருவில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர்தான் இந்த விழாவின் கதாநாயகன் ஆனார். இன்னும் சொல்லப்போனால் நடிகை சுகன்யா மேடத்திடம் ராஜனைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அவர்தான் என் தாத்தா என்றார். அந்த விழாவில் மூத்த கதாநாயகனை இன்றைய இளம் கதாநாயகன் ஜெயம் ரவி கௌரவித்தார். இந்த விழாவில் ஏ.வி.எம்.சரவணன் சார், பாலசந்தர் சார், எஸ்.பி.முத்துராமன் சார், அ. மார்க்ஸ் என்று பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இரண்டு மேடைகளிலும் ஆய்வரங்கம் நடந்தது. இந்த ஆய்வரங்கங்களில் இயக்குனர்கள் கே. பாக்யராஜ், அமீர், கரு. பழனியப்பன், ராஜா மற்றும் விருது குழுவின் தலைவர் சந்தானம் போன்ற பலரும் பேசினார்கள். அதை தொகுத்து ஒரு புத்தகமாக போடும் திட்டம் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடித்த முதல் பெண் நடிகை டி.பி. ராஜலெட்சுமியின் மகள் இந்த விழாவிற்கு வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ரொம்பவும் நெகிழ்வடைந்தார். டி.பி. ராஜலெட்சுமி எழுதிய நாவலையும், அதன் மதிப்புரையையும், டி.பி. ராஜலெட்சுமி பற்றிய அறிமுகத்தையும் சென்னை குயின்மேரிஸ் கல்லூரி விரிவுரையாளர் பத்மினி எழுதிய புத்தகத்தை அந்த விழாவில் வெளியிட்டோம். பாஸ்கரதாஸின் பேரன் முருகபூபதி இந்த விழாவில் கலந்து கொண்டார் இது மிகப்பெரிய நெகிழ்ச்சியான விஷயமாக இருந்தது. இதை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு நான் எடுக்கும் படத்தின் வெற்றியும், என் வாழ்க்கையின் வெற்றியையும் பொறுத்திருக்கிறது.
கே: சினிமாவைப் பற்றி பொதுவாக உங்கள் அறிதல்கள் என்னவாக இருக்கிறது?
ப: கேமிராவை பொறுத்த வரைக்கும் ARRI 2C, போய் இப்போது 435, D 21 என்ற வகை வந்திருக்கிறது. லைட்டிங்கை பொருத்தவரைக்கும் மினிபுரூட் என்பது வந்திருக்கிறது. என்னுடைய முதல் படமே சினிமாஸ்கோப்தான். முன்பு டிஜிட்டல் எடிட்டிங் என்பது கிடையாது. மூவியாலா என்றொரு எடிட்டிங் மிஷின் இருந்தது. இது ஒரு அமெரிக்க கம்பெனியின் பெயர். இந்த மெசின்தான் பாசமலர், பாவமன்னிப்பு எல்லாம் எடிட் பண்ணிய மிஷின். இந்த மிஷினில் நானும் வேலை செய்து இருக்கிறேன். இதற்கு அடுத்ததாக ‘steenbeck’ என்ற மிஷின் வந்தது. இது ரொம்ப அட்வான்ஸானது. அதை எப்படியாவது வாங்கவேண்டும் என்று முயற்சி செய்து எடிட்டர் லெனின் சார் ரூமுக்கு வந்தது. இந்த மிஷின் வந்த போது பெரிய திருவிழா மாதிரி இருந்தது. கொஞ்ச நாள் கழித்து டிஜிட்டல் தொழில் நுட்பம் வந்த பிறகு நிறைய இடங்களில் ‘steenbeck’ மிஷின் தூங்கிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் நிறைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நான் அருகே இருந்து பார்த்திருக்கிறேன்.
முன்பு நெகட்டிவில் படம் பிடித்து, டெவலப் செய்து, தியேட்டரில் ரஷ் போட்டுப்பார்த்து, பிறகு மூவியாலாவில் எடிட் பண்ணுவார்கள். இப்போது டெலி சினி என்று புது தொழில் நுட்பம் வந்திருக்கிறது. இதில் நெகட்டிவில் படம் எடுத்ததை டெலிசினி செய்து டிஜிட்டலில் எடிட் பண்ணுகிறார்கள். முன்பு ஒரு லட்சம் அடி சூட் பண்ணும் போது ஒரு எடிட்டிங் அசிஸ்டெண்ட் ரிப்போர்டிங் எழுதிக் கொண்டே இருப்பார். அந்த ரிப்போர்ட்டில் ஒ.கே. ஷாட்டை குறித்து தருவார். அந்த ஷாட்டை மட்டுமே ரஷ் பிரிண்ட் போடுவோம். மற்ற ஷாட் எப்படி இருக்கும் என்றே தெரியாமல் போய்விடும். அந்த பிலிம்கள் கேனில் போட்டு மலை மலையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இதை எடிட்டிங் பண்ணும்போது கிரியேட்டிவ்க்கு சிக்கலாக இருக்கிறது. எப்படி என்றால் ஒரு தடவை வெட்டி ஒட்டிவிட்டு திரும்பவும் கரெக்ஷன் பண்ணும்போது கிரியேட்டிவ்விட்டியை இடிக்கிறது. இந்த எடிட்டிங்கில் ஒரு நெகிழ்வு தன்மை இல்லாமல் இருக்கிறது. இந்தக் கஷ்டங்களை எல்லாம் பார்த்து நான் இயற்கை படத்தை கிஸ்வீபீ டெக்னலாஜியில் பண்ணினேன். இந்தத் தொழில் நுட்பத்தில் சூட் பண்ணியவுடனே டெலி சினிக்கு வந்து விடும். ஒரு படத்தை 20 முறைகளில் எடிட் செய்து, எது திருப்தியாக இருக்கிறதோ அதை நீங்கள் வெளியிடலாம்.
அடுத்ததாக, நான் வேலை செய்த படங்கள் ரிலீசாகும் போது முதல் நாள் தியேட்டருக்கு போய் விடுவேன். அந்தப் படத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? எப்படி சிரிக்கிறார்கள்? பிடிக்காமல் எப்போது கத்துகிறார்கள்? எப்போது போர் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்கள்? இடைவேளையின் போது என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்று பார்ப்பேன். மக்களின் உளவியலை கணக்கில் எடுக்காமல் படத்தை எடுப்பது என்பது தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது பேராண்மை படத்தில் இடைவேளைக்குப் பிறகு தியேட்டரை விட்டு யாரும் எழுந்து போகவில்லை என்பது எனக்குப் பெரிய செய்தி. இதற்கு காரணம் தொழில் நுட்பத்தையும், மக்களின் உளவியலையும் ஓரளவிற்கு கற்றதுதான் என்று நினைக்கிறேன். எனக்கு அடுத்த தலைமுறையினர் இன்னும் ஆழமாக கற்க வேண்டும்.
நாம் நினைத்த கதையை எடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி, படம் பார்க்கும் ரசிகனின் மனநிலை என்பது பல்வேறு சூழ்நிலைகளால் வருகிற மனிதர்கள்தான். அவர்கள் சில பேர் வீட்டில் தகராறு செய்துவிட்டு வருவார்கள். சில பேர் வகுப்பை கட் அடித்துவிட்டு வந்திருப்பார்கள். இன்னும் சில பேர் கஷ்டப்பட்டு உழைத்து விட்டு ரிலாக்ஸாக இருப்போம் என்று வந்திருப்பார்கள். சிலபோர் அப்பாவிடம் திட்டு வாங்கி தியேட்டருக்கு வந்திருப்பார்கள், குடித்துவிட்டு சில பேர் படம் பார்க்க வருவார்கள். சிலபேர் ஏ.சி.யில் ஜாலியாக தூங்குவதற்கென்றே வருவார்கள். ஹீரோவை பிடிக்காதவர்களும் வருவார்கள். குடும்பத்தோடு ஒரு பொழுதுபோக்கிற்காக வருவார்கள், ஆக இத்தனை மனநிலையில் வருபவர்களை ஒரே கயிற்றில் கட்டி இழுத்து உட்கார வைப்பது கடுமையான வேலை. இதனால்தான் இன்னமும் சினிமா கிரேஸாகவும் எளிதில் கைப்பற்ற முடியாததாகவும் இருக்கிறது.
கே: உங்கள் படங்களை எப்படி உருவாக்குகிறீர்கள்?
நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எனக்கு எம்.ஜி.ஆர். படம்தான் பிடிக்கும். நான் இன்றைக்கு எம்.ஜி.ஆர் படம்தான் எடுக்கிறேன் என்று நினைக்கிறேன். எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் அவரை வைத்து படம் எடுக்க முயற்சி செய்திருப்பேன். எம்.ஜி.ஆர். ஒரு சிறந்த நடிகர் என்ற கருத்து இன்று வரைக்கும் எனக்கு மாறாமல் இருக்கிறது. ஏனெனில் எம்.ஜி.ஆரின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. ஒரு பாப்புலர் சினிமா, கமர்ஷியல் சினிமாவின் கதாநாயகன் பாசிட்டிவாகவே சொல்ல முடியும் என்கிற ஒரு மாதிரிதான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் பாதிப்பிலிருந்து கதை சொல்ல வருகிறபோது சிக்கல் என்பதே எம்.ஜி.ஆரை முதல் காட்சியில் காட்டும் போதே அவர் நல்லவர், சிகரெட் பிடிக்க மாட்டார், பெண்களை காப்பாற்றுவார், தாய் மேல் அன்பு செலுத்துவார், குடிக்க மாட்டார், சமூகத்திற்கு நல்லது சொல்வார் என்பது திரைப்படத்தில் நிறுவப்பட்டு விடுகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். இல்லாமல் படம் செய்யும் போது நூறு காட்சி செய்தால்தான் இதை சொல்ல முடியும். இப்போது எம்.ஜி.ஆர். படம் போல் எடுக்கும்போது ஒரு இளம் கதாநாயகனை வைத்தால், அவர் முதல் காட்சியிலே எம்.ஜி.ஆர். இல்லை. அவரை எம்.ஜி.ஆர் ஆக மாற்ற நாலு ரீல் தேவைப்படுகிறது. பேராண்மை படத்தில் இப்படித்தான் ஜெயம்ரவியை பயன்படுத்தினேன். எம்.ஜி.ஆர் கிடைத்திருந்தால் இரண்டாம் பாதியிலிருந்தே நான் கதையை தொடங்கி இருப்பேன். தமிழ் மட்டுமே தெரிந்த, தமிழ் சினிமாவைப் பார்த்து வளர்ந்த இயக்குனர்களுக்கு இதுதான் பிரச்சனை. உலக சினிமாகாரர்களுக்கு இந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை.
கதையை பொறுத்தவரைக்கும் எனக்குப் பெரிதாக கலைத் தன்மையெல்லாம் இல்லை. சில சமயம் இன்ஸ்பிரேஷன் தேவைப்படுகிறது. நான் சென்னைவாசி. ஈ படம் என்னுடைய வாழ்க்கையே இன்ஸ்பிரேஷனாக இருந்தது. ’வெண்ணிற இரவுகள்’படித்தது, சென்னை துறைமுகத்தில் வேலை செய்த இன்ஸ்பிரேஷன் இரண்டும் சேர்ந்து இயற்கையை உருவாக்கியது. என்றோ படித்த ’அதிகாலையில் அமைதி’ பேராண்மையாக இருந்தது.
புனைவில் முதல் புள்ளியை உருவாக்க ஓர் இன்ஸ்பிரேஷன் தேவையாக இருக்கிறது. அதற்குக் காரணம் நான் கலைஞனாக இல்லாமல் இருப்பதுதான். சினிமா தொழில் நுட்பத்தை சரியாக ஓரளவிற்கு கற்றதனால் நான் எடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கிறது. இன்னும் நல்ல கலைஞனாக நான் இருந்தால் இந்தப்படங்கள் கிளாசிக்காக மாறும் வாய்ப்பை பெற்றிருக்கும். நான் எமோசன் இல்லாத இயக்குனர் என்றுதான் நினைக்கிறேன். நான் சினிமாவை அதாவது எமோஷனல், காமெடி, கைதட்டல் என எல்லாவற்றையும் மேத்தமேட்டிக்ஸாகத்தான் பார்க்கிறேன். அது குறையாக எனக்குத் தெரியவில்லை.
கே: பேராண்மை படத்திற்கு வந்த விமர்சனங்கள் பற்றி?
இந்தப் பேட்டியின் முதல் கேள்விக்கு இதில் பதில் சொல்லி விடுகிறேன். பேராண்மை படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு கட்டத்தில் என்னோடு கடைசி படமாகவும் இருக்கலாம் என நினைத்தேன். சிலவற்றை கதைப்போக்கில் திணிப்பு என்று தெரியாமல் திணித்தேன். இந்தப் படத்திற்குள் என் ஆளுமையை, நான் யார் என்று தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். இயற்கை என்ற திரைப்படத்தை முதன் முதலில் தொடங்குவதற்கு காரணமே, மேத்தமேட்டிக்ஸ்தான். இன்றைக்கும் நான் காதல்பட இயக்குனர்தான். காதல்பட இயக்குனர் என்ற பிம்பம் வரட்டும் என்பதுதான். பேராண்மையை முதலில் எடுத்து, இப்போது இயற்கையை எடுத்தால் அது நிச்சயமாக கேலிப் பொருளாகி இருக்கும். முதலில் ஒரு காதல் படத்தை எடுத்து தேசிய விருது வாங்கிய பிறகு, என்னுடைய எண்பதாவது வயதில் ஒரு காதல் படம் எடுத்தால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
என்னுடைய மூன்றாவது படத்தில் நான் உரிமையாக இப்படித்தான் படம் எடுப்பேன். என்னுடைய ஆளுமை போக்கு இதுதான் என்று முடிவு செய்தேன். நான் எந்த கருத்துகளால் ஈர்க்கப்பட்டேனோ, அதைப் படத்தில் நேரடியாக கையாண்டு இருக்கிறேன். ஒரு காட்சியில் அரிவாள் சுத்தியலைக் காண்பித்தேன். காரல் மார்க்ஸ் கண்டுபிடித்த Surplus Value என்பது திரட்டப்பட்ட இறந்த உழைப்புதான். அந்த உழைப்பை கழித்து விட்டால் ஒன்றுமே இல்லை. Surplus Value தான் எல்லாவற்றிற்கும் காரணமாக எப்படி உள்ளது என்பதை சொல்லி இருக்கிறேன். இதை எனக்கு எளிமையாக சிறு வயதில் சொல்லிக் கொடுத்தார்கள். நீங்கள் நேரடியாக படம் பார்த்தால் NCC வகுப்புக்கும் Surplus Value -க்கும் சம்பந்தமில்லை. வெறுமனே துப்பாக்கியை மட்டும் வைத்து ஒன்றும் பண்ண முடியாது, சர்வதேச அரசியலையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறேன். சமூகத்தில் அதிகமாக ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞனை படத்தில் கதாநாயகனாக வைத்திருந்தேன். மார்க்சியத்தின் கோஷமான பட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும், பொதுவுடமை தத்துவம்தான் சிறந்தது என்றும் சொல்லி இருக்கிறேன்.
இந்தப் படம் என்ன சாதித்து இருக்கிறது என்றால் தமிழ்நாடு முழுவதும் 220 தியேட்டர்கள் தொடர்ந்து நான்கு காட்சிகளாக இந்த பேட்டிக் கொடுக்கிற நாளில் 31 நாட்களாக ஓடுகிறது. இதன் மூலம் ஒருநாளைக்கு நான்கு முறை Surplus Value பற்றிய வகுப்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றியும், பொதுவுடமை அரசியல்தான் சிறந்தது என்றும் இத்தனைக் காட்சிகளில் மக்களிடம் போய் ஒலித்திருக்கிறது. இதைத்தான் பேராண்மை சினிமா செய்து இருக்கிறது. இதில் குறைகள் ஆயிரம் இருக்கலாம்- இருந்தாலும் முக்கியமானதை செய்து இருக்கிறேன் என்ற திருப்தியும் இருக்கிறது.

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=1562:2009-12-09-01-40-10&catid=958:09&Itemid=209







Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...






smail

http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg

Update me when site is updated





Get more followers
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!