Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, September 6, 2009

"அவலத்தை தந்தவனிடமே பிச்சை!" - ஜெகத் கஸ்பர்-நக்கீரன் தொடர்




                   ழத்திலிருந்துகடந்த மாத இறுதியில் இரண்டு தமிழ் கத்தோலிக்க ஆயர்கள் வந்திருந்தார்கள். அரசியல் பேச வரவில்லை, பேசவுமில்லை. தமிழகத்துப் பேராயர்கள், ஆயர்களிடம் தங்கள் மக்களின் சிலுவைப் பாதையைச் சொல்லி நம்பிக்கையும், தோழமையும் பெறவே வந்தார்கள். அறையைத் தாழிட்டு ஆயர்களோடு நெஞ்சம் திறந்த அவர்களால் அழாதிருக்க முடியவில்லை. ஆம், ஆயர்களும் அழுதார்கள். நம்பிக்கைகள் யாவும் தகர்ந்து போய்விட்டதொரு காலத்தில் மேய்ப்பர்களுக்கும் ஆறுதல் தேவையாகிறது. மானத்தை, தன்மதிப்பை உயிரினும் மேலாய் பேணியதோர் மனிதக்கூட்டம் இன்று ஒருவேளை உணவுக்காய், அவலத்தை தந்தவனிடமே பிச்சைப் பாத்திரம் ஏந்தி தலைகுனிந்து நிற்கும் அவலத்தை எந்த மேய்ப்பனால் தாங்கிக் கொள்ள முடியும்?

அக்டோபர் மாதம் அடைமழைக்காலம் தொடங்குமுன் அத்தனை மக்களும் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும். இல்லையேல் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மக்கள் சாக நேரிடும் என எச்சரிக்கை அறிக்கையொன்று ஐ.நா.அவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாய் ஒசசஊத ஈஒபவ ஊலடதஊநந என்ற ஐ.நா.செய்தி நிறுவனத்தில் எமக்குள்ள தொடர்புகள் கூறுகின்றன. ஆனால் கிராதக ராஜபக்சே அரசின் அருகாமைக் கூலிகள் போல் ஆகிவிட்டிருக்கும் ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனும் அவரது செயலர் விஜய் நம்பி யாரும் இந்த அறிக்கை வெளி வந்து விடாதபடி அமுக்கி வைத்திருக் கிறார்களாம். தமிழர்கள் நமக்கு உலகில் இன்று நண்பர்கள் எவருமில்லை என்பது மட்டுமல்ல, நியாயத்தின் காவலர்களாய் இருக்க வேண்டியவர்கள் கூட ஒட்டுமொத்தமாய் நமக்கெதிராய் அணிவகுத்து நிற்கிறார்கள். எல் லோராலும் கைவிடப்பட்டவர் களானோம்.

மூன்று லட்சம் தமிழ் மக்கள் திறந்த வெளியில் சிறையிடப்பட்டு கடந்த வெள்ளியோடு நூறு நாட்கள் ஆயிற்று. இவர்கள் எக்குற்றமும் செய்யாதவர்கள். பலமுறை அடித்துத் துவைக்கப்பட்ட அப்பாவிகள். முக்கிய மாக, ஏழைகள். இவர்களை நூறு நாட்கள் அடைத்து வைத்திருந்தது சட்டவிரோதமான செயல். இந்த திறந்த வெளிச் சிறைகளை பேணத்தான் இந்தியாவும் ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கிறது. தவறு, குற்றம், பாவம். இந்தியாவின் பணம் நமது பணம். தங்கள் வாழ்விடங்களில் மீண்டுமொரு சிறு வாழ்வை சூன்யம் விட்டுச் சென்ற புள்ளிகளிலிருந்து தொடங்கத்தான் நமது பணம் பயன்பட வேண்டுமேயன்றி அக்கிரமத்தின் சங்கிலிகளை மேலும் இறுக்கவும், அழுத்தி இறுக்கும் நுகத்தடிகளை அதிகமாக்கவுமல்ல. சட்டவிரோதமான பொதுமக்கள் சிறைகளைப் பேண துணைநிற்கும் நம் நாட்டு அதிகாரிகள் மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிகிறார்கள். இறை நீதி இவர்தம் தலைமுறைகளை சும்மா விடாது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லா பகுதிகளும் கண்ணிவெடிகள் கொண்டிருப்பவை அல்ல. அதிகபட்சமாய் பத்து சத நிலப்பரப்பில் அவை இருக்கலாம். நேர்மை இருந்தால் கடந்த நூறு நாட்களிலேயே அப்பகுதிகளை அடையாளம் கண்டு சிவப்புக்கொடி நட்டிருக்க முடியும். மழைக்காலம் தொடங்குமுன் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் மனம் இல்லை. அதனிலும் மேலாய் திறந்தவெளிச் சிறைகளிலேயே பாதித்தமிழர்கள் அழிந்தும், பலவீனமுற்று வாழத் தகுதியற்றவர்களாயும் ஆகிடவேண்டுமென ராஜபக்சே அரசு நினைக்கிறது. இதற்கு உதவத்தான் நமது ஆயிரம் கோடி ரூபாய். தமிழ் மக்களைப் போக விடு என உத்தரவிடும் ஒழுக்கம் நமது வெளியுறவுக் கொள்கைக்கு என்று வரும்?

இன்றுவரை முல்லைத்தீவிலிருந்து எத்தனைபேர் தப்பி வந்தார்கள், அவர்கள் பெயர் என்ன, ஊர், விபரங்கள் என்னவென்ற முறைப்படியான பதிவுகள் எதுவும் இல்லை. அதனைச் செய்வதற்கு ஐ.நா.அவை நிறுவனங்கள் எதையும் ராஜபக்சே அரசு அனுமதிக்க வில்லை. வலுவோடு இருக்கிற தமிழ் வாலிபர்களை இரவோடு இரவாய் தினம் எட்டு, பத்து என தீர்த்துக் கட்டும் கொடுமையை படிப்படியாய் நடத்தி முடிக்கத் தோதாகத்தான் இன்றுவரை முறைப்படியான பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இதனை முன்பு நாம் சொன்னபோது இங்குள்ள பெரிய ஆங்கிலப் பத்திரிகை முதலாளி "புலிகளின் பிரச்சாரகர்' என்று எள்ளினார். இந்த வாரம் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஒளிக்கோப்பு உலகை உலுக்கி, நமது அச்சங்களெல்லாம் எத்துணை உண்மையானவை என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

இப்படியாக எத்தனை படுகொலைகள் நடந்தன? நாம் பார்த்த ஒளிக்கோப்பு காட்டும் கொடூரம் பட்டப்பகலில் நடந்திருக்கிறது. எனில் கொடும் இரவுகளில் எத்தனை தமிழ் உயிர்கள் காற்றோடு கலந்தனவென்று எவருக்குத் தெரியும்? எனவேதான் உலக அமைப்புகளின் பார்வைக்கு வதைமுகாம்கள் வருவதை திட்டமிட்டு இலங்கை அரசு தடுத்து வருகிறது. உண்மையில் இலங்கையால் மட்டுமே முடிகிற காரியமல்ல அது. இந்தியா மட்டும் தன் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மீது கொஞ்சம் இறுக்கமும், தமிழர் மீது கொஞ்சம் இரக்கமும் வைத்தால் போதுமானது. மற்றவை தானாக நடக்கும்.

இந்தியாவைப் பகைத்துக் கொண்டு ராஜபக்சே ஊழிக்கூத்தெல்லாம் ஆடமுடியாது. இந்தியா கண்ணசைத்தால் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் ராஜபக்சேவை இறுக்க அணிவகுக்கும். சீனாவிடம் கூட நேரடியாகப் பேசி சரிக்கட்டும் ராஜதந்திர வலு இந்தியாவுக்கு உண்டு. இந்தியா இன்று குறி முண்டுக் கோவணம் கட்டி ராட்டை சுற்றிய மாமனிதனின் நாடல்ல. இது பெரிய வல்லரசு. செலவழிக்கும் திறனுள்ள சுமார் 40 கோடி நடுத்தர மேல் வர்க்கங்களை கொண்ட வருங்கால உலகச் சந்தை. இந்த சந்தையின் கண் சீறல்களுக்கு வியாபாரம் செய்ய விரும்பும் நாடுகள் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆத லால்தான் இந்தியா மனது வைத்தால் நிலை மை நிச்சயம் மாறும் என நம்பிக்கையோடு சொல் கிறோம்.



இந்தியா தானாக மாறாது. தமிழகம்தான் இந்தியாவை மாற்ற முடியும், மாற்ற வேண்டும். அக்பர், அன்புடை நேரு இப்படி ஓரிருவரது காலங்கள் தவிர்த்து புதுடில்லி தர்பார் நெஞ்சிரக்கம் கொண்டு மானுடத்தை அரவணைத்ததாய் வரலாறு இல்லை. ஆனால் தமிழகம் ஒன்றுபட்டு நினைத் தால் புதுடில்லி மாறும். எனவேதான் வசைபாடு படலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மிச்சமிருக்கும் தமிழரையேனும் காத்திட எல்லா கட்சியினரும், அமைப்புகளும் இணைந்து ஒரு குரலாய் புதுடில்லியில் ஒலிக்க வேண்டுமென பாதம் விழுந்து மன்றாடுகின்றோம். உண்மையில் காங்கிரஸ் கட்சி எனக்கு பிடித்த கட்சிதான். இரண்டாம் தலை முறை தலைவர்களை அக்கட்சி அடை யாளம் கண்டு புடமிடும் காட்சி காண சிலிர்ப்பாயிருக்கிறது. நாளைய தேசம் குறித்த நம்பிக்கையும் பிறக்கிறது. ஆனால் தமிழகத்து காங்கிரஸ் பெரியோருக்கு தோழர் திருமாவளவன் மீது வருகிற கோபத்தில் கால் சதமேனும் ராஜபக்சே மீது வராதாவென்றுதான் ஒவ் வொரு நாளும் கடவுளை பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவா, அதிசயம் நடத்திக் காட்டு. பேராயர்களைப் பற்றி தொடக்கத்தில் கூறியிருந்தேன்.


எனது வாழ்வில் மறக்கவே முடியாத பேராயர் ஒருவரை நான் பதிவு செய்ய வேண்டும். அவர்தான் நினைவில் வாழும் முன்னாள் மதுரை பேராயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்கள். மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் மேல் மட்டிலா மதிப்பும் உள்ளார்ந்த நம்பிக்கையும் கொண்டவர். எப்போது அவரை சந்தித்தாலும் கலைஞரை சிலாகிப் பார். என்னை தெரிவு செய்து மணிலா வேரித்தாஸ் வானொலிக்கு அனுப்பி வைத்ததும் அவர்தான். குருகுல வாழ்வுக்கு ஒன்பதாம் வகுப்பில் என்னைத் தேர்வு செய்ததும் அவர்தான். 14-ம் வயதில் நாங்கள் 27 பேர் தெரிவு செய்யப்பட்டோம். தேர்வு நடைமுறைகளெல்லாம் முடிந்தபின் ஆசி பெறவேண்டி பேராயர் அலுவலகம் சென்று வரிசை யில் நின்றோம். பேராயர் முன் முழந்தாள்படியிட்டு அவரது மோதிரத்தை முத்தம் செய்ய வேண்டும். பேராயர்களின் மோதிரத்தை முத்தம் செய்வது கத்தோலிக்க மக்களிடையே பொது வழக்கம். எனது முறை வந்த போது நான் முழந்தாள்படியிடவுமில்லை, மோதிரத்தை முத்தம் செய்யவுமில்லை. கரங்கள் தொழுது வணக்கம் செய்தேன்.

""என்னடா... பேராயரின் மோதிரத்தை முத்தம் செய்யத் தயக்கமா?'' என்றார். நான் எப்பதிலும் சொல்லவில்லை. முதல் நாளாகிய அன்றே என் குருகுல வாழ்வு முடிந்து போகுமென்றுதான் அருகில் நின்ற ஆசிரியப் பெருமக்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மாமனிதர், மகான், தலைவர். குருகுல இயக்குநரான பின்னர் ஆயராக உயர்வு பெற்ற லியோன் தர்மராஜ் அவர்களை அன்றிரவே தனியாக அழைத்துக் கூறியிருக்கிறார், "அந்தக் காஞ்சாம்புரத்துப் பையனை கவனித்துக் கொள்ளுங்கள், வித்தியாசமான ஆளாய் வருவான் போல் தெரிகிறது' என்றிருக்கிறார்.

பௌத்த மகாநாயகதேரோவாக இருந்திருக்க வேண்டிய ஆஸ்வல்ட் கோமிஸ் என்ற சிங்களப் பேராயர் ஒருவர் போப்பாண்டவர் அரசு நடத்தும் உரோமாபுரி வரைக்கும் சென்று எப்படியாவது வேரித்தாஸ் வானொலியிலிருந்து என்னை நீக்க வேண்டுமென நீண்ட சதிசெய்த 2000-ம் ஆண்டில், கால்கள் அசைக்க முடியாமல் படுக்கையில் இருந்து கொண்டே சிங்களப் பேரினவாத இலங்கை திருச்சபையின் சதிக்கு செவிட்டிலறை கொடுத்து பின்வாங்கச் செய்த அந்தத் தலைவனை எப்படி நான் மறப்பேன்?

என்ன நடந்ததென்பது சுவாரசியமானது. உலகத் திருச்சபை, ஆசியத் திருச்சபை இரண்டையும் தன்வயப்படுத்தி சிங்களம் திமிருடன் நின்ற காலை மதுரை மாநகரில் படுக்கையில் இருந்து கொண்டே ""இலங்கையில் தமிழ்த் திருச்சபை அச்சுறுத்தப்படும் திருச்சபை. அவர்களால் அங்கு ஓங்கிக் குரல் எழுப்ப முடியாது. எனவே தான் அவர்களது குரலாய் தமிழகத் திருச்சபையும், ஆயர்களும் இங்கிருந்து பேச வேண்டியுள்ளது. ஃபாதர் ஜெகத் கஸ்பர் எனது நம்பிக்கைக்குரியவர். அவரது குரல் எனது குரல். எனது குரல் தமிழகத் திருச்சபையின் குரல். அவரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது'' என்று பெரிய அதிகாரிகளுக்குப் பதில் சொன்ன அந்தச் சூரியனை மனதில் நான் தொழாத நாளில்லை. எனக்காகப் பேசியதற் காகவல்ல, துன்புறும் என் இனத்திற்காகப் பேசியதால்.

(நினைவுகள் சுழலும்)

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15521




                      "மறக்கமுடியுமா' நக்கீரனில் நான் எழுதத் தொடங்கி இது ஐம்பதாம் பதிவு. இரண்டு இதழ்களுக்கெனத் தொடங் கிய எழுத்து, காலம் தமிழ் வரலாற்றை சிலுவையிலறைந்த வலியின் கதறலாய் தொடர்கிறது. இப்போதும் நிறைவு செய்திடவே விருப்பம். எனினும் அரசியல் வெளி உண்மை அறுபட்டும், மானுடவெளி உணர்வு சலித்தும் கிடக்கின்ற ஒரு காலகட்டத்தில் இருள் கவிந்த பாலைவனத்தின் தூரத்துக் கூக்குரலாய் இன்னும் சில வாரங்கள் தொடரும். வீழ்ந்த தமிழினம் மீண்டும் எழும், மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையின் தளிர்களாய் ஆங்காங்கு இயங்கிவரும் உணர்வு கொண்ட இளையர்களுக்கு இவ்விதழ் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

""எமது மக்களை போகவிடு'' (Let Our People Go) என்ற முழக்கத்தை செப்டம்பர் மாதத்திற்காய் "நாம்' (We) என்ற அமைப்பின் இளையர்கள் முன் வைக்கிறார்கள். முட்கம்பி வேலிகளுக்குள் சிறை யிடப்பட்டிருக்கும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்கள் அவர்தம் ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையைக் கொடுங்கள் என்ற கோரிக்கையோடு வருகிறார்கள் இந்த இளையர்கள். தமிழர்களாய், மனிதர்களாய் இவர்களோடு இணைவோம்.

ஊர் என்றதுமே புதுவை இரத்தினதுரையின் மறக்க முடியா கவிதையொன்று மனதில் விரிந்தது. தேடிக்கண்டெடுக்க இரண்டு நாட்கள் ஆயின.

நேற்றெம் ஊரிருந்த காற்றில்

இதமான குளிரும்

நேர்த்தியான சுகமுமிருந்தது

சாணிமெழுகிய தலை வாசலில்

சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது.

வாசலிறங்கக் கோலமிருந்தது.

வயலில் நம்பிக்கை விளைந்தது.

வெளியே அறியப்படாத எத்தனையோ

உள்ளே வெளிச்சம் நல்கின.

அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்

குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்

நிறையும் மனமிருந்தது.

மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்

இருளெனும் எழிலிருந்தது.

அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க

சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.

ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்

தேவ நிலை சித்தித்தது.

ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும்,

கூத்துப் பாட்டும்,

நாதஸ்வர மங்கலமும்

தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு

எங்கே துரத்திப் பிடியென்பதாய் போயின.

சாவுக்கும் சடங்குக்கும் உருகியொழுக

பக்கத்திற் சுற்றமிருந்தது.

சனியானாற் பிடித்திழுத்து எண்ணை முழுக்காட்ட

அத்தைமார் இருந்தனர்.

புது வருடத்தன்று புளியமரக்கிளையேறி

அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட

அம்மான்மார் இருந்தனர்.

சின்னத் திரளிப் பொடியும்

வெள்ளி முரலும்

கூனி இறாலும் போட்டுக் குழம்பு வைக்க

குஞ்சாச்சிமா இருந்தனர்.

நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே

பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.

தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்வர

திருக்கல் வண்டிகள் இருந்தன.

என்ன இல்லையென்பதாய் எல்லாமுமிருந்தன.

தையெனிற் பொங்கல்.

சித்திரையிற் கஞ்சி.

ஆடியிற் கூழென

வாய்க்குக்கூட வரையறையிருந்தது.

அப்பனுக்கு மூத்தவன்

ஆத்தாளுக்கு இளையவனென

சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.

ஆகக்கூடிய தொலைவுப் பயணமெனக் கதிர்காமத்துக்கு

அதுவும் கால்நடையாகப் போகும்

வடிவிலியங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.

மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்.

அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.

சூடடித்துக் குவித்த நெல்லும்

கிழித்துலர்த்திய ஒடியலும்

நிறைந்த நெஞ்சில் நித்திரையிருந்தது.

தழுவிப் போனது காற்று.

உருகி உள்ளேறியது உறவு.

கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்

இலந்தைமரக் காட்டு வெளியிடையும்,

புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த

ஒற்றையடிப் பாதையிலும்,

வயல் வரப்பிலும்

வாய்க்காற் கரையிலும்

தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்

இணைந்ததும் பிணைந்ததுமென

இருந்தது எம்மூர்களிலும் காதல்.

இன்று எல்லாம் தொலைத்து

இடருருவிக் கிடக்கிறது வனப்பு.

துக்கித்திருக்கிறது சோபிதம்.

முற்றத்து முருங்கை நிறைகாய்

சுமைதாங்காது கிளை முறிய

மரமும் பாறிச் சரிகிறது -

உருவிச் சப்ப ஒருவரில்லை.

கிணற்றடி வாழை குலை முற்றிக் கிடக்கிறது

ஒருவரில்லை உரித்துத் தின்ன.

இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்

இழந்ததை எண்ணி குமைந்ததுவாய்

உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்!

ஆம், உலகிடம் நம் மக்கள் இன்று வேண்டி நிற்பது ஒன்றுதான்! நாங்கள் ஊர் போய் சேர வழி செய்யுங்கள். ஊருக்குப் போனால் மீண்டும் போராட் டம் தொடங்குவார்களோ என்ற அச்சத்தில் இனத்தை யே வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்திடும் திட்டம்தான் திறந்தவெளி வதை முகாம்கள். அக் டோபர் வந்துவிட்டால் அவை மரண முகாம்களாகும். ஆதலினால் அனைவரும் முழங்குவோம்: ""எமது மக்களை போகவிடு. Let Our People Go''

போராட்டம் என்னவாகும்? தமிழருக்கு அரசியல் தீர்வொன்று கிட்டுமா? எதிர்காலம் எவ்வாறிருக்கும்? பலரும் கேட்கிற கேள்விகள் இவை. இதோ பதில்:

மே-04. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தத்தின் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்த நாட்கள். இயக்கத்தின் இரண்டாம் நிலை எதிர்காலத் தலைவர்களை அழைத்திருக்கிறார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இரவுப் பொழுது. பங்கருக்குள் சந்திப்பு. அவரது கண்களில் ஞானத்தீட்சை பெற்றவர் போன்றதொரு ஒளி. ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்த் துடிப்பு. பிரபாகரன் பேசி யிருக்கிறார்: ""தினையான் குருவியை பார்த்திருக்கி றீர்களா? வேலிகளில், பூச்செடிகளில், வயல்வெளி களில், வாலை வினாடிக்கு இருமுறை சிலிர்ப்பிக் கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி... குருவி இனங்களிலேயே மிகச் சிறிய குருவி இந்த தினையான் குருவிதான்... ஆனால் வெயில், மழை, புயல், குளிர், பாம்பு-எலி போன்ற எதிரிகள் எல்லாவற்றிடமிருந்தும் தன்னை பாது காத்துக் கொள்கிற ஏற்பாடுகளை சிறுகச் சிறுக ஆனால் கச்சிதமாகவும், பிசிரின்றி யும், தன்னம்பிக்கையோடும் செய்யும். நீங்களும் தினையான் குருவிகளைப் போல் இருங்கள். போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான். ஆனால் தினையான் குருவிகளைப் போல எமது போராட்டத்தையும், எமது மக்களுக்கான வாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்புவோம்.

எதற்கும் அஞ்சாதீர்கள். நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மன உறுதிதான் நமது போராட்டத்தை பெரிதாக வளர்த்தது. பாரதியாரின் பாடலை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை

வைத்தேன்

வெந்து தணிந்தது காடு: -தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்

உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

இரண்டு முறை இப்பாடலை பாடிய பிரபாகரன் அவர்கள் தொடர்ந்திருக்கிறார். பாரதியின் அக்னிக் குஞ்சுகள் போலும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகி விட்டோமே என்று மனம் தளராதீர்கள். முக்கியமாக அஞ்சாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரத்தாண்டவம் புரியும் சிங்களப் பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு நெருப்பு போதும். ஏனென்றால் உண்மையும், நீதியும், வரலாறும் என் றானாலும் நமது பக்க மாய்த்தான் இருக்க முடியும். எனவே அஞ்சா தீர்கள்.

போராட்டத்தின் அக்னிக் குஞ்சுகள் நீங்கள். சிறு நெருப்பாய் இருங்கள். உங்களிலிருந்து பெரு நெருப்பு உருவாகும்.

பிரபாகரன் மேலும் பேசுவார்.

(நினைவுகள் சுழலும்)

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15720


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!