Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, June 19, 2009

♥ " ஒரு தமிழீழத் தமிழனின் திடுக்கிடும் டைரிக் குறிப்புகள் ♥

http://i.d.com.com/i/dl/media/dlimage/95/04/1/95041_large.jpeg

http://www.kalachuvadu.com/issue-113/page44.asp

யாழ்ப்பாணக் குறிப்பேடு

அநாமதேயன்

யாழ்ப்பாணம்
20.03.2009

இத்துடன் யாழ்ப்பாணக் குறிப்பேடு எனும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய
நிலைமைகளைப் பிரதிபலிக்கும் விடயங்களை உள்ளடக்கிய பகுதியை
அனுப்பிவைக்கிறேன். எனது சொந்தப் பெயரைப் பாதுகாப்பு நோக்கங்கருதிக்
குறிப்பிடவில்லை. இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் கிழித்து வாசித்த
பின்னரே அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிலவேளை இப்பிரதி
உங்களுக்குக் கிடைக்காமலும் போகலாம். தற்செயலாகக் கிடைத்தால்
காலச்சுவட்டில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். பிரசுரிப்பதும்
பிரசுரிக்காமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. பிரபாகரனின் படம்
முகப்பில் வெளியான 'ஆனந்த விகட'னை விற்பனைசெய்தமைக்காக பூபாலசிங்கம்
புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைதுசெய்யப்பட்டுச்
சிறையிலடைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதுதான் ஈழத்தின் இன்றைய
நிலவரம்.

அநாமதேயன்

குறிப்பு (1)

மட்டக்களப்பிலிருந்து சலீம் தொலைபேசியில் கதைத்தான். ஜூலை 2008
காலச்சுவடு பற்றிய பேச்சு வந்தது. சலனி, நவாஸ் சௌபி ஆகியோரது
கவிதைகளும் 1983 கறுப்பு ஜூலை பற்றிய சிறப்புப் பகுதியும் அதற்கேற்ற
முகப்புப் படமும் தாங்கி அவ்விதழ் வெளிவந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு
அது இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள பூபாலசிங்கம்
புத்தகசாலையில் பலதடவைகள் விசாரித்தும் வரவில்லையென்று சொன்னார்கள்.
சிற்றிதழ்களுடன் பரிச்சயமுள்ள நண்பன் ஒருவனிடம் இது பற்றிக் கேட்டேன்.
1983 கறுப்பு ஜூலை பற்றிய சிறப்புப் பகுதி அவ்விதழில் இடம்பெற்றுள்ளதால்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவ்விதழை எடுத்துவர இராணுவம்
தடைவிதித்துள்ளதாகச் சொன்னான். இதேபோல் செப்ரெம்பர் 2006 காலச்சுவடு
இதழின் முகப்பில் 'சுதந்திர இலங்கை'க்குள் இராணுவ 'வீரன்' ஒருவன்
நின்றுகொண்டு 'Stop' எனக் காட்டும் (ஏ-9 வீதி மூடப்பட்டிருப்பதை
வெளிப்படுத்தும்) படம் இடம்பெற்றதால் கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட அவ்விதழின் எல்லாப் பிரதிகளினதும்
முகப்புக் கிழிக்கப்பட்டிருந்ததையும் நினைவுகூர்ந்து 'ஒக்கமே மஹிந்த
சிந்தனையாக்' (எல்லாம் மகிந்த சிந்தனை) எனச் சிரித்தான்.

குறிப்பு (2)

இப்போது நான் செய்தித்தாள்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவருகிறேன்.
'புதுக்குடியிருப்பில் எறிகணை வீச்சு', 'நூற்றுக்கு மேற்பட்டோர் உடல்
சிதறிப் பலி', 'ஐம்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம்', 'வீதியெங்கும்
சடலங்கள்' எனத் தலைப்பிட்டு ஒவ்வொரு நாளும் கண்டு சகிக்க முடியாத
படங்களுடன் யாழ்ப்பாணத்துச் செய்தித் தாள்கள்
வெளிவந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மூன்று தினங்கள் இவற்றைத் தொடர்ந்து
வாசித்ததில் சாப்பிட முடியவில்லை. உறங்க முடியவில்லை. கனவில்கூடப்
படுக்கை விரிப்புகளிலும் சாக்குகளிலும் கூழாகிப்போன பிரேதங்கள்
அள்ளப்படும் காட்சிகளே தொடர்ந்து வருகின்றன. அலென்ரனேயின் ஹிரோஸிமா
மொர் அமோர் திரைப்படந்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது.
இணையதளத்துடன் பரிச்சயமுள்ள நண்பனொருவன் வீட்டிற்கு வந்திருந்தபோது
இணையதளமொன்றில் 'மனதைரியமுள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்' என்ற
தலைப்பில் சில படங்களைப் பார்க்க நேர்ந்ததாகவும் எறிகுண்டு வீசப்பட்டுக்
கருகிப்போன நிலையில் பற்கள் வெளித்தள்ளிய நிலையில் குவியல்
குவியல்களாகச் சடலங்கள், தலை சிதறிய முண்டங்கள் அப்படங்களில்
நிரம்பியிருந்ததாகவும் ஐந்தாறு படங்களுக்கு மேல் பார்க்க
முடியவில்லையென்றும் சொன்னான்.

குறிப்பு (3)

அண்மையில் யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியில் வசிக்கும் தேவராஜா சாளினி
(வயது 18) சுருக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டதாகத் தகவல் வந்தது.
இப்பெண் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தேற்றி 2AB என்ற
பெறுபேற்றைப் பெற்றிருந்தும் 'Z' முறைத் தரப்படுத்தலின் காரணமாக யாழ்
பல்கலைக் கழகத்தின் கலைப்பீட உள்நுழைவுக்கான அனுமதியைப் பெற முடியாத
நிலையில் மனவிரக்தியுற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகவே கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. சம்பவம் நடைபெற்ற தினத்தில் இப்பெண்
வீட்டில் தனித்திருந்துள்ளார். இவரது வீட்டிற்கருகில் இராணுவக் காவலரண்
அமைந்துள்ளது. அங்கே காவற்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வீட்டினுள்
புகுந்து சாளினியை வல்லுறவுக்குட்படுத்திக் கழுத்தை நெரித்துக்
கொன்றுவிட்டுத் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். வெளியே
சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய
சாளினியின் தொடைப் பகுதியிலிருந்து இரத்தம் கசிந்திருந்தது. படையினர்
சாளினியை வல்லுறவுக்குட்படுத்தியமைக்கு வலுவான ஆதாரங்கள் இருந்தும்
எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இதுதவிர சாளினியின் மரண
விசாரணை அறிக்கைகூடத் தற்கொலையால் மரணம் சம்பவித்துள்ளதாகவே
வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தற்போது
யாழ்ப்பாணத்தில் பரவலாக நடைபெற்றுவருகின்றபோதிலும் வெளிக்கொணர முடியாத
நிலையில் பத்திரிகையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் எந்நேரமும்
துப்பாக்கிகள் குறிபார்த்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பு (4)

யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்துவிட்டால் மக்கள்
பதகளிக்கத் தொடங்கிவிடுவர். அவர் கொழும்புக்குத் திரும்பிச்
செல்லும்வரை ஆகக் குறைந்தது நாலைந்து பேராவது 'அடையாளம் தெரியாத
நபர்களால்' சுட்டுக்கொல்லப்படுவர். அவர் யாழ்ப்பாணத்திற்கு வரும்போதே
இம்முறை யார் யாரைச் சுட்டுக்கொல்வது என்ற பட்டியலுடனேயே வருவார்.
யாழ்ப்பாணத்திற்கு வந்து இறங்கியதுமே அப்பட்டியலைத் தமது
தொண்டரடிப்பொடிகளிடம் கொடுத்துவிடுவார். அவர்களும் நாளுக்கொருவராகப்
போட்டுத்தள்ளிவிடுவர். பத்திரிகை நண்பர் ஒருவரைச் சந்திக்க ஒரு நாள்
சென்றேன். அவர் பரபரப்பாக இருந்தார். காரணம் கேட்டேன். 'டக்ளஸ்
யாழ்ப்பாணம் வந்திட்டானடாப்பா. இனி Front pageஇல் சுட்டுக் கொலைக்கெண்டு
ஒரு column ஒதுக்க வேணும்' என்றார். இனி வரவிருக்கும் நாள்களை எண்ணிப்
பார்க்கும்போது பயமாக இருக்கிறது.

சுட்டுக்கொல்வது ஒருபுறமிருக்க யாழ் மக்கள் மோசமாக
அவமதிப்பிற்குள்ளாகும் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
சமூக சேவைகள், சமூகநலத் துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து, ஸ்ரான்லி வீதியிலமைந்துள்ள ஸ்ரீதர்
தியேட்டரில் தங்கியிருப்பது வழக்கம். அக்காலப்பகுதியில் கல்லூரி அதிபர்
மற்றும் ஆசிரியர்கள், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், அரசாங்க
அலுவலர்கள் ஆகியோரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து மாநாடுகள்
நடத்துவார். இதுதவிரப் பொதுமக்கள் குறைகேள் சேவையையும் நடத்துவார்.
இதற்கென யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதரும் மக்கள்
மோசமான உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே அமைச்சரைச் சந்திக்க முடியும்.
உடற்சோதனை சாதாரணமானதல்ல. ஆண், பெண் இருபாலாரும் தனித்தனி
மறைவிடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டே
இவ்வுடற்சோதனை நிகழ்த்தப்படுகிறது. இதன்போது பெண்களே மிகுந்த
நெருக்கடிக்குள்ளாகின்றனர். மார்பகங்கள் உண்மையானவைதானா என்பதை
உறுதிப்படுத்திக்கொள்ளப் பல தடவை அமுக்கப்படுகின்றன. யோனித்
துவாரங்களுக்குள் விரல் நுழைத்தும் பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கோ
விதைப்பைகள் நசுக்கிப் பார்க்கப்படுகின்றன. இக்'கௌரவிப்பு' நிகழ்வுகளை
மூலைக்குமூலை பொருத்தப்பட்டிருக்கும் கமராக்கள் பதிவுசெய்கின்றன.
எனக்குத் தெரிந்தவொரு பெண் தனது பணி இடமாற்றம் தொடர்பாக அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திக்கப் போய்வந்தாள். அவளிடம் இவ்வுடற்சோதனை
குறித்து விசாரித்தபோது சொன்னாள், "எங்களுக்கு மார்பகப் புற்றுநோய்
இருக்கா? எண்டு பரிசோதிக்க ஆஸ்பத்திரிக்குப் போகத் தேவையில்லை. ஸ்ரீதர்
தியேட்டருக்குப் போனால் போதும்."

குறிப்பு (5)

வன்னிப் பெருநிலப்பரப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அகோர எறிகணை வீச்சு
மற்றும் கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களால்
காயமடைவோரை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையோடு வவுனியா
மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளுக்குக் கொண்டுசென்று
சிகிச்சையளிப்பதுடன் அவ்வைத்தியசாலைகளைச் சுற்றிப் பலத்த இராணுவப்
பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எவரும் வைத்திய
சாலைகளுக்குட் சென்று நோயாளரைப் பார்வையிட முடியாத நிலைமையே
காணப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன்,
தினக்குரல், வலம்புரி ஆகிய நாளிதழ்களில் வன்னியில் காயமடைந்து
சிகிச்சைக்காக வவுனியா மற்றும் திருமலை வைத்திய சாலைகளுக்குக்
கொண்டுசெல்லப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல்கள் பிரசுரமாகிவருகின்றன. சில
தினங்களுக்கு முன்பு பத்திரிகை வாங்கக் கடைக்குச் சென்றபோது
பத்திரிகைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடைக்காரர் சொன்னார், 'இப்ப
காயப்படுகிற ஆக்களின்ரை பெயர்ப்பட்டியல் வாறதால பேப்பரெல்லாம் உடனை
முடிஞ்சுபோகிடுது. மேலதிகமாக அஞ்சு பேப்பர் எடுத்தும் போதாமலிருக்கு.
இன்னும் பத்துப் பேப்பர் மேலதிகமாய் எடுத்தால்தான் சரிப்பட்டுவரும்.'
இதைக் கேட்டு நான் வேதனைக்குள்ளானேன். யாழ்ப்பாணத்தில் பத்திரிகை
விற்பவர் உட்பட எல்லா வியாபாரிகளுமே யுத்தம் தொடர்வதைத்தான்
விரும்புகின்றனர்.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக்
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துசேரும் வன்னி மக்களைப் படைத்தரப்பினர்
வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளிலமைக்கப்பட்ட புனர்வாழ்வு முகாம்களில்
தங்கவைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இம்முகாம்களிலிருந்து
எவரும் வெளியேறிச் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிலிருக்கும் இளம்வயதினரின் நிலைமை
கேள்விக்குள்ளாகி வருகின்றது. கடந்த சில தினங்களில் இம்முகாம்களில்
தங்கவைக்கப்பட்டிருந்த இளம்வயதினரில் 28 பேர் காணாமற்போயுள்ளனர். மேலும்
இங்குள்ள பெண்களை விசாரணைக்கென அழைத்துச்சென்றுள்ள படைத் தரப்பினர்
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி எரித்துக் கொன்றுள்ளதாகவும் தகவல்கள்
கிடைத்துள்ளன. இதை முற்றாக மறுத்துள்ள படைத்தரப்பானது புலிகள் தமது
கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் வெளியேறிச் செல்வதைத் தடுக்குமோர் உத்தியாகவே
இப்பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பு (6)

அண்மையில் வடமராட்சிப் பகுதியில் நடைபெற்ற துவாரகனின் 'மூச்சுக் காற்றால்
நிறையும் வெளிகள்' கவிதைத் தொகுதிக்கான விமர்சனக் கருத்தரங்கில் ஓர்
இலக்கியவாதி கருத்துரை வழங்கியபோது இக்கவிதை நூலுக்கான விமர்சனக்
குறிப்பொன்றைக் காலச்சுவடு டிசெம்பர் 08 இதழில் ராஜமார்த்தாண்டன்
எழுதியிருப்பதாகவும் அக்குறிப்பில் 'முதுகுமுறியப் பொதிசுமக்கும்
ஒட்டகங்கள்', 'வெள்ளெலிகளோடு வாழுதல்' போன்ற சமகால ஈழத்தின் சூழலைப்
பிரதிபலிக்கும் கவிதைகளை சூழ்நிலை பற்றிய புரிந்துணர்வின்மையால் ராஜ
மார்த்தாண்டன் முக்கியத்துவப்படுத்தவில்லையெனவும் காலச்சுவடு பெப்ருவரி
09 இதழில் ஈழத்துச் சிறுகதையென்ற பேரில் வெளியாகியுள்ள தி. மயூரனின்
'கண்ணீர் தேசம்' என்ற கதையும் சமகாலச் சூழலைப் பற்றிய காலச்சுவட்டினது
புரிந்துணர்வின்மையையே எடுத்துக் காட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விமர்சனக் கருத்தரங்கு முடிவுற்று இருதினங்களின் பின்பே பெப்ருவரி
மாதக் காலச்சுவடு எனக்குக் கிடைத்தது. தி. மயூரனின் சிறுகதையை
வாசித்தபோது முழு அபத்தமாகத் தோன்றியது. குறித்த எழுத்தாளரைப் பற்றிய
அறிமுகத்தில் தினக்குரல், சுடரொளிப் பத்திரிகைகளில் கதை எழுதியிருப்பவர்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு பத்திரிகைகளுமே சராசரிக்கும்
கீழான தரத்திலமைந்த சிறுகதைகளையே பிரசுரித்துவருகின்றன என்பதும்
குறிப்பிடத்தக்கது. இக்கதையில் மாதவி என்ற பெண்ணைப் படையினனொருவன்
விரும்புவதாகவும் அவனைத் திருமணம்செய்து தருமாறு அவளது வீட்டிற்கு வந்து
கேட்பதாகவும் அவளது தந்தை மறுத்து ஆவேசிப்பதாகவும் பின்னர் அவளுடன்
கொழும்புக்குப் புறப்படத் தயாராகவுள்ள நிலையில் இரவு வீட்டிற்குள்
படையினர் உட்புகுந்து மாதவியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த
முயலும்போது அவள் குறித்த படையினனைத் துப்பாக்கியால்
சுட்டுக்கொல்வதாகவும் வருகிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரையும்
சுஜாதாவையும் நிறைய வாசித்து வருகிறார் என நம்புகிறேன். ஏனெனில்
அவர்களின் கதைகளிலேயே மாதவிகள் தம்மைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த
வருபவர்களைச் சுட்டுக்கொல்வது சாத்தியம். சமகால யாழ்ப்பாணச் சூழலில் இது
சாத்தியமல்ல. யாழ்ப்பாணத்தில் படையினர் பெண்களை விரும்புவது வழமை. ஆனால்
அவர்களது அணுகுமுறை மயூரனின் கதையில் வருவது போன்றதல்ல. முற்றிலும்
வேறுவிதமானது. படையினனொருவன் தமிழ்ப் பெண்ணொருத்தியை விரும்பினால் அவளை
அடைய அதற்குப் பல்வேறு மாற்று வழிகளைக் கையாளக்கூடிய சாத்தியமுள்ளது.
இதற்கான ஒரு தகுந்த எடுத்துக்காட்டாக தேவராஜா சாளினியின் கொலைச்
சம்பவத்தைக் குறிப்பிடலாம் [பார்க்க: குறிப்பு(3)]. இதைத் தவிர வீட்டைச்
சோதனையிடுதல் என்னும் பேரில் உள்நுழைந்து அங்கே வெடிபொருட்களை
மறைத்துவைத்துவிட்டு வீட்டிலுள்ளவர்களே மறைத்துவைத்திருந்ததாகவும்
அவர்களுக்குப் புலிகளுடன் நீண்ட காலமாகத் தொடர்பிருக்கிறதெனவும் கூறி
அவ் வீட்டிலுள்ளவர்களைக் குறிப்பாக இளம் பெண்களை, கைதுசெய்து
கொண்டுசென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் சம்பவங்களும்
நிகழ்ந்துவருகின்றன. மேலும் தற்போது யாழ்குடா நாட்டில் இரவு 9:00 மணி
தொடக்கம் அதிகாலை 4:30 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமலிலிருப்பதால்
நள்ளிரவு வேளையில் படையினரதும் ஒட்டுக்குழுக்களினதும் அட்டகாசம்
எல்லைமீறியதாகக் காணப்படுகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள
நாயன்மார்கட்டு என்ற பகுதியிலமைந்துள்ள அரச நிர்வாக அலுவலர் ஒருவரின்
வீட்டினுள் புகுந்த ஆயுததாரிகள் அவ்வலுவலரின் மகளை ஆயுதமுனையில்
மிரட்டிப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள்
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்துவருவது வழமையாகிவிட்டது.
இதுதவிரப் பதின்ம வயதுப் பிள்ளைகளை 'எனது ஆசையைப் பூர்த்திசெய்யாவிடின்
உனது குடும்பத்தையே சுட்டுக் கொன்றுவிடுவேன்' என மிரட்டி ஆயுததாரிகள்
சிலர் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அண்மைக் காலமாக
யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் யாழ்குடா நாட்டில்
திருமணமாகாமலே கருத்தரிக்கும் பெண்களினது எண்ணிக்கை (குறிப்பாகப் பதின்ம
வயதினர்) வேகமாக அதிகரித்துவருவதாகவும் இதன் பின்னணியில் படையினரும்
ஒட்டுக்குழுக்களுமே இருந்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தி. மயூரனின் 'கண்ணீர் தேசம்' என்ற சிறுகதை காலச் சூழலைப்
பிரதிபலிப்பதில் எவ்வளவுக்கு விலகி நிற்கிறது என்பதை வாசகர்கள்
உணர்ந்துகொள்ளலாம்.

குறிப்பு (7)

வெகுசன இதழொன்றில் உதவி ஆசிரியனாகப் பணிபுரிந்து வரும் நண்பன் ஒருவன்
வில்லு என்ற திரைப்படம் தொடர்பாக விமர்சனக் குறிப்பொன்றை எழுதித்
தரும்படி கேட்டுக்கொண்டான். வில்லு யாழ்ப்பாணத்தில் வெளியாகி ஓரிரு
தினங்களே ஆகியிருந்த நிலையில் வீடியோக் கடைகளில் சீடியும்
கிடைக்காதென்பதால் சீடி கிடைத்ததும் படத்தைப் பார்த்துவிட்டு எழுதுவதாக
நண்பனிடம் சொன்னேன். அவன் படம் இப்போதுதான் வெளியாகியிருப்பதால் சீடி
வெளி வருவதற்கு ஒரு மாதமாகுமென்றும் அத்திரைப்பட விமர்சனம் அடுத்த கிழமை
தன் இதழில் வெளியாக வேண்டுமென்றும் என்னைத் திரையரங்கில் போய்ப்
பார்த்துவிட்டு உடனடியாக விமர்சனத்தை எழுதும் படியும் நுழைவுச்
சீட்டுக்கான செலவைத் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அவன் கேட்டுக்
கொண்டதால் அப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த திரையரங்குக்குப்
போனேன். நான் போனது காலை 10:30 காட்சிக்கு. திருவிழாவைப் போல் கூட்டம்
அலை மோதியது. பிற்பகல் 2:30 காட்சியைப் பார்க்கவுள்ளோரும் அப்போதே
வந்திருந்தனர். நான் திரும்பிவிடலாமென்று தான் நினைத்தேன். அங்கே
வந்திருந்த நண்பனொருவன் நுழைவுச் சீட்டெடுக்க முண்டியடித்துக்கொண்டு
நின்றிருந்தவர் வரிசையில் தென்பட்டான். அவனிடம் 150 ரூபாய் கொடுத்துப்
பின்வரிசை நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனேன். ஆசனங்கள்
ஏற்கெனவே நிறைந்திருந்தன. ஒதுக்குப்புறமாக இருந்த ஆசனமொன்றில்
அமர்ந்தேன். எனக்குப் பின்புறம் ஙிஷீஜ் என்னும் பெயரில் அமைக்கப்பட்ட 200
ரூபாய் நுழைவுச் சீட்டுக்குரிய கூண்டுகளுக்குள் சோடிகளாகச் சிலர்
அமர்ந்திருந்தனர். ஒருவாறு 10:45 மணியளவில் படம் தொடங்கியது. இளம்
வயதினர் துள்ளிக்குதித்துக் கூக்குரலிட்டு ஆரவாரித்தனர். சிலர்
உள்ளங்கைகளில் கற்பூரம் கொழுத்திச் சுற்றினர். வேறு சிலர் கரகோச
மெழுப்பியும் விசிலடித்தவாறுமிருந்தனர். இந்த ஆரவாரங்கள் ஓய்வதற்குச்
சுமார் பத்து நிமிடங்கள் எடுத்தன. பின்னர் கூண்டுப் பகுதியிலிருந்து
இடைக்கிடையே (படம் முடியும்வரை) முனகல் சத்தங்கள் கேட்டன. உண்மையில் நான்
திகைப்படைந்துபோனேன். நான் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறேனா? என ஒரு
கணம் அதிர்ந்துதான் போனேன். படம் முடிந்து வரும்போது நண்பனிடம் இது
குறித்த ஆதங்கத்தைத் தெரிவித்தேன். அவன் சிரித்து விட்டுச் சொன்னான்.
'யாழ்ப்பாணத்தில இண்டைக்கு மொத்தமாக 3 தியேட்டர் இயங்குது.
எல்லாத்திலயும் இது நடக்குது. நாதன் தியேட்டருக்குப் போய்ப்பார்.
மூன்றாவது மாடியில படுக்கையறை வசதியளுமிருக்கு. அதுக்குள்ள சோடியள்
மட்டுந்தான் போகலாம். சோடியள் முதல்ல சேர்ந்து வாறேல்ல. பொடியன் வந்து
தியேட்டருக்குள்ள நிண்டுகொண்டு மிஸ்ட்கோல் அடிக்கப் பெட்டை வரும்.
இரண்டு பேரும் ரிக்கற் எடுத்துக்கொண்டு மூண்டாம் மாடிக்குப் போவினம்.
இன்ரேர்வலுக்கும் வெளில வராயினம். ஆனால் படம் முடிய முன்னம் வெளிக்கிட்டு
வேற வேற திசையால போவினம்.' அவன் இதையெல்லாம் ஒரு சாதாரண நிகழ்வாகவே
கருதுகிறான். யாழ்ப்பாணத்தின் பண்பாடு, விழுமியம் என அனைத்தையுமே
திட்டமிட்டுச் சீரழிக்கும் செயற்பாடுகள் 1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணம்
படையினரின் ஆக்கிரமிப்பிற்குள் வந்ததும் படிப்படியாக ஆரம்பித்தன. இதனொரு
பகுதிதான் யாழ்நகரில் திரையரங்குகளை மீளவும் செயற்பட அனுமதி
வழங்கியமையாகும். இதைத் தொடர்ந்து 2002 காலப்பகுதியில் புரிந்துணர்வு
உடன்படிக்கை கைச்சாத்தாகித் தரைவழிப் பாதை திறந்தவுடன் கைத்தொலைபேசிப்
பாவனை மிகப் பரவலடைந்தது. இப்போது 2700 ரூபாய் விலையில் டயலொக்
நிறுவனம் யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விற்பனை முகவர் நிலையங்களெங்கும் இளம் பிராயத்தினர் கூட்டம்
அலைமோதுகிறது. இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசிகளை
நோண்டிக்கொண்டும் காதில் வைத்துக்கொண்டும் அலையும் இளம் பிராயத்தினரே
நீக்கமற நிறைந்துள்ளனர்.

இதற்கிடையில் நான் வில்லு பற்றிய எனது விமர்சனத்தை நண்பனுக்கு
அனுப்பிவைத்தேன். குறித்த விமர்சனம் அவ்வெகுசன இதழில் வெளிவந்ததைப்
பார்த்தபோது உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். நான் மூன்று பக்கங்களில்
எழுதியிருந்த விமர்சனம் ஒரு பக்கத்தில் சுருக்கப்பட்டு இடைவெளிகளுக்குள்
வில்லுவின் வண்ணமயமான 'ஸ்ரில்'கள் சொருகப்பட்டிருந்தன. நண்பனிடம்
தொடர்புகொண்டு கேட்டபோது எனது விமர்சனத்தைப் பரிசீலனைக்கு
எடுத்துக்கொண்ட ஆசிரியர் குழுவானது நயன்தாரவைப் பற்றி மோசமாக
எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் ஈழத் தமிழர்களுக்கு 5,00,000 ரூபாவை
நன்கொடையாக வழங்கியிருப்பதால் இவ்விமர்சனம் முழுமையாகப் பிரசுரமானால்
வாசகர்களின் எதிர்ப்பைச் சந்திப்பதுடன் விஜய் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக
உண்ணாவிரதமிருந்ததால் அவரைக் கிண்டலடித்து எழுதிய பகுதிகளை வெளியிடுவதும்
குறித்த இதழின் விற்பனையில் சரிவை ஏற்படுத்திவிடுமெனக் கருதி எனது
விமர்சனம் சுருக்கப்பட்டதாக அவன் விளக்கமளித்ததுடன் வெகுவிரைவில்
நுழைவுச் சீட்டு மற்றும் விமர்சனப் பகுதிக்கான கொடுப்பனவுகளை உள்ளடக்கிய
650 ரூபாய் பெறுமதியான காசோலை எனது முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுமெனவும்
தெரிவித்தான்.

குறிப்பு (8)

இந்த வருடத்தின் பெப்ருவரி நான்காம் திகதி இலங்கை சனநாயகச் சோசலிசக்
குடியரசின் அறுபத் தொராவது சுதந்திர தினம் தலைநகர் கொழும்பில்
வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முன்னைய வருடங்களில் கொண்டாடப்பட்ட
சுதந்திர தினங்களைக் காட்டிலும் இது சிங்களப் பேரினவாதிகளுக்கு
இவ்வாண்டின் சுதந்திர தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக
அமைந்துவிட்டது. ஏனெனில் இவ்வாண்டின் தொடக்கத்தில் புலிகளின் கோட்டை
எனக் கருதப்பட்ட கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றி ஏ-9 வீதியையும்
திறந்துவிட்டனர். இதன் பிரதிபலிப்போ யாழ்ப்பாணத்தில் வேறுவிதமாக
அமைந்திருந்தது. சுதந்திர தினத்திற்குச் சில வாரங்கள் முன்னதாகவே
மோட்டார் சைக்கிள்கள் உட்படச் சகல வாகனங்கள் மற்றும் வீடுகளிலும்
சிங்கக் கொடி பறக்கவிடப்பட வேண்டுமென்ற கடுமையான உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் பாடு
படுகொண்டாட்டம்தான். ரூ. 300 தொடக்கம் ரூ. 1000 வரையான விலைகளில்
சிங்கக் கொடிகள் அமோகமாக விற்பனையாகின - சிங்கக் கொடியைப்
பறக்கவிடாதோர் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து
குறித்த ஒரு நாளில் சிங்கக் கொடி விற்பனை 25,000 ரூபாயை எட்டியதாகத்
தெரியவந்தது. பெப்ருவரி மாத முடிவில் சிங்கக் கொடியின் விற்பனை வருமானம்
ரூ. 7,00,000 எனக் கணக்கிடப்பட்டது. யாழ்நகரின் புத்தக சாலை உரிமையாளர்
ஒருவர் சொன்னார், 'புத்தகங்களை விக்கிறதைக் கைவிட்டுட்டு இனிச் சிங்கக்
கொடி விக்கலாம்போல இருக்கு.'

குறிப்பு (9)

யாழ்ப்பாணத்தில் மின்விநியோகம் மூன்று மின்பிறப்பாக்கிகள் மூலமே
நடைபெற்றுவருகிறது. இதனடிப்படையில் தினமும் மாலை வேளைகளில் 6:30 அல்லது
7:30 மணிக்கு அமல்படுத்தப்படும் மின்வெட்டு ஏறத்தாழ இரண்டு
மணித்தியாலங்கள்வரை நீடிக்கும். சில தினங்களில் இரவு முழுவதும்
மின்வெட்டு நிகழ்வதும் வழமையாகிவிட்டது. பிரதேசச் செயலக மட்டத்தில்
மின்சார சபை ஊழியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இம்மின்தடை
பற்றி விவாதித்தபோது அவர்கள் சட்டரீதியற்ற மின் பாவனை
அதிகரித்திருப்பதாகவும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடவடிக்கை
எடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் தனிப்பட்ட
முறையில் விசாரித்தபோது சில இடங்களில் இராணுவத்தினரே தமது
முகாம்களுக்குச் சட்டரீதியற்ற மின்னிணைப்புகளை மேற்கொண்டு மின்சாரம்
பெறுவதாகவும் வேறு சில இடங்களில் தனிப்பட்டவர்கள் சட்டரீதியற்ற மின்
பாவனையை மேற்கொண்டு வருவதையறிந்து அம்மின்னிணைப்புகளைத் துண்டித்து
நடவடிக்கை எடுக்க முயன்றபோது இராணுவத்தினர் வந்து மின்னிணைப்புகளைத்
துண்டித்தால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் வேறுசில
இடங்களில் விசாரித்துப் பார்த்தபோது அத்தனிப்பட்டவர்களின்
குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இராணுவத்தினருடன் பாலியல் தொடர்புகளை
வைத்திருப்பதாகவும் அறிய முடிந்ததெனத் தெரிவித்தனர்.

♥ " எங்களுடைய வீடுகளைத் தாருங்கள் "- --உயிர்மை கட்டுரை ♥

 
 
எனக்கு மனம் மிகவும் அந்தரமாகவும் கவலையாகவும் இருக்கிறது. பட்டினியால் சாப்பாடில்லாமல் ஆமிக்காரர் கொடுக்கும் சோற்றுப்பார்சலை இரண்டு கைகளாலும் பிச்சை எடுப்பது போல் கெஞ்சிவாங்கும் போது வயித்தைப் பத்தி எரிகிறது எனக்கு. வன்னி மக்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே.

வன்னி மண் முழுக்க ஓடித் திரிந்த காலம் எனக்கு மனம் முழுக்க வியாபித்து இருக்கிறது. நான் பிறந்த மண் அது. நான் அள்ளித்தின்ற மண் அது. நான் படித்த பூமி அது. எனது உறவினர்கள் வாழ்ந்து இறந்த பூமி அது.ஒட்டுசுட்டானுக்கு பாடசாலைக்குக் கால்நடையாகவே நடந்து ஒவ்வொரு நாளும் இரண்டு மைல்கள் எனது பாதம் பட்ட பூமி அது. பத்து வருடம் பாடசாலைக் காலங்களில் எப்பவுமே எனக்கு பஸ்ஸில் பள்ளிக்கூடம் போன ஞாபகமில்லை. நடைதான்.

உண்மையில் நாங்கள், மக்கள் எப்பொழுதுமே தமிழீழம் கேட்கவிலலை. நிம்மதியாக வாழ்ந்த மக்கள் நாங்கள். விவசாயிகள், அன்றாடம் உழைத்து வாழ்ந்த மக்கள் நாங்கள். யுத்தம் ஒவ்வொருவரையும் சின்னாபின்னப்படுத்தி சிதைத்து சிதிலமாகிப்போட்டு விட்டது. ஒருவேளை சோற்றுக்குக் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் யுத்தப் பேரினவாதிகள்.
வன்னியில் கமக்காரர் வீட்டில் நெல்லு மூட்டைகள் பன்னிரண்டு மாதமும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஊரில் பசியோடு இருந்தவர்கள் யாருமில்லை.
 

பிச்சைக்காரர்கள் இல்லை. எமது ஊரில் வெளியூர்களில் இருந்து பிச்சைக்காரர்கள் வந்தாலும் ஊரை விட்டுப் போகும்போது ஒரு மூட்டை நெல்லாவது அரிசியாவது கொண்டு போவார்கள்.

ஒரு வீட்டுக்கு வந்து சாப்பாட்டுக்கு அரிசி இல்லை என்று கேட்டால் குறைஞ்சது இரண்டு பால் சுண்டு அரிசியாவது கொடுப்பார்கள். என் அம்மா எத்தனையோமுறை அவ்வாறு கொடுத்திருப்பதனைப் பார்த்திருக்கிறேன். அந்த இரண்டு சுண்டு அரிசி அரைக் கொத்து அளவாகும்.

எங்களது புளியங்குளத்தில் ஆடுமாடுகளோடு பெரும் வயல் நில புலங்களோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களொ செத்துப் போனார்களோ தெரியாது. நான் எங்கு போய்த் தேடுவேன் எனது கிராமத்து மக்களை.

அங்கிருந்து முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டபோது பக்கத்து வீட்டுத் தமிழர்களெல்லாம் மனம் வெடித்து அழுதது இன்னும் ஞாபகமாய் இருக்கிறது. மாங்குளம், கரிபட்டமுறிப்பு, மணவாளன் பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான், புளியங்குளம், மானுருவி, கருவேலன் கண்டல், முள்ளியவளை, தண்ணீர் ஊற்று, நீராவிப்பிட்டி என்று குட்டிக் குட்டி கிராமங்களில் அழகான குழந்தை குட்டிகளோடு நன்றாக வாழ்ந்த மக்கள்.

யுத்தம் என்ற சனியன் ஏன் வன்னிக்குள் புகுந்ததோ தெரியாது. சிவனே என்று கிடந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டிப் போட்டார்கள். எல்லாருமாக சேர்ந்து விரட்டிவிட்டார்கள். விரட்ட வைத்துவிட்டார்கள். இனி அந்தச் செல்வம் கொழித்த பூமியை எங்களுக்கு சிங்களவர்கள் தருவார்களா? எங்கள் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க விடுவார்களா?

எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த செல்லையா அண்ணர் செத்துப் போய்விட்டார் என்று இங்கு தனது அப்பாவின் செத்தவீட்டை இலண்டனில் அவரது மகன் தனது வீட்டில் நடத்துகிறான்.

பிரேதம் இல்லாமல் செத்த வீடு நடத்தும் சமூகமாக எமது சமூகம் அவலமாகிப் போய்விட்டது.

செல்லையாண்ணை நல்ல மனிதர். 28 வருடத்துக்கு முன்பு பார்த்த மனிதர் அவர். நான் ஊரை விட்டு வெளிக்கிட்ட போது சின்னப்பொடியன். சோலி சுறட்டுக்குப் போகாத நல்ல மனிதர் செல்லையா அண்ணர். குளக்கட்டோடு எட்டு ஏக்கர் வயல் காணி அவருக்கிருக்கிறது.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கண்கொண்டு பார்க்க முடியாது அவ்வளவு செழிப்பு, எங்களுக்கு 5 ஏக்கர் நெல்வயல். அந்த ஏரியா முழுவதும் றோட்டோரமாக நெல் செழித்து நிற்கும்.

இதற்கிடையில் செல்லையா அண்ணரின் வயலுக்குள் குளக்கட்டோடு சேர்த்து ஒரு வயல் பிள்ளையார் இருக்கும். அதில் ஒன்றுமில்லை ஒரு கல்தான். தமிழன் கல்லிலே தெய்வத்தைக் கண்டவனல்லவா.

அந்த வயல் பிள்ளையாருக்கு நிறமணிபோட்டு பொங்கல் வைப்பார்கள். அந்த எமது புளியங்குளம் கிராமத்திலேயே அந்தப் பிள்ளையாருக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஏனெனில், சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லோரும் அங்கு வந்து பொங்குவார்கள். நிறமணி போடுவார்கள். என்னையொத்த வயதுக்காரர் எல்லாம் அங்கு சங்கு ஊதுகிற சத்தம் கேட்டால் போதும் வெறும் மேலோடு கட்டிய சாரத்தை சண்டிக்கட்டை கட்டிக்கொண்டு அறக்கப் பறக்க ஓடிவந்துவிடுவோம்.

பிள்ளையாரைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. பொங்கலும் வாழைப்பழமும் மோதகமும் வடையும் வாழை இலையில் வைத்து நிறைய நிறைய எந்த வஞ்சகமும் இல்லாமல் தருவார் செல்லையா அண்ணர்.

பெரும் செல்வாக்கான மனிதர் இருந்தும் சேட் போடமாட்டார். நாலுமுழ வேட்டியும் சால்வையும்தான். அந்த நல்ல மனிதர் ஊர் பேர் தெரியாத புதுமாத்தளன் பகுதியில் போய் அந்த உப்புக்காத்தில் கிடந்து பசியால் பட்டினியால் வாடிக் கடைசியில் செல்லடிபட்டுச் செத்துப் போனார். என்ன கொடுமை இது. அந்த மனிதனை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. இப்படி இன்னும் எத்தனை பேர் செத்துப் போனார்களோ பசியால் பட்டினியால்?

எனது விவரணங்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அங்கிருந்து அகதிகளாக வருகின்ற இலட்சக்கணக்கான மக்களைக் தொலைக்காட்சியில் காட்டும்போது தொலைபேசியில் கூப்பிட்டு மக்கள் சொல்கிறார்கள், இங்கு தயவுசெய்து அந்தக் காட்சிகளை திருப்பித் திருப்பிப் போடுங்கள். ஏனெனில், எங்கடை சொந்தக்காரர்கள் யாராவது வருகினமோ என்று பார்ப்பதற்கு என மக்கள் சொல்லும் பொழுது எனக்கு நெஞ்சு வெடித்துப் போகிறது. இரவில் நித்திரை வருகுதில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சாரிசாரியாக எல்லோரும் அந்த மண்ணை விட்டுவிட்டு வந்து விட்டார்கள். எத்தனை ஆயிரம் பேரை காவு கொடுத்துவிட்டோம்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களைக் கொடுத்துவிட்டோமா? இப்பொழுது அடுத்தது என்ன? எத்தனை நாளைக்கு இந்த அகதி முகாம்கள். ஒரு பெண்மணி வவுனியா அகதி முகாமில் இருந்து தொலைபேசியில் இங்கு இலண்டனுக்கு உறவினர்களோடு பேசும் பொழுதும் பெண்கள் பெரும் கஷ்டப்படுவதாகச் சொல்லி அழுதிருக்கிறார்.

மாதவிடாய் காலங்களில் பெரும் அவஸ்த்தைப்படுவதாகவும் அந்தக் காலங்களில் பாவிக்கின்ற சுகாதார துவாய் போன்றவை அதிகமாகத் தேவைப்படுவதாகவும் பல நாட்களாக குளிக்கத் தண்ணியில்லையென்றும் சொல்லி கவலைப்பட்டிருக்கிறார். அகதி முகாம்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

யுத்த நேரங்களில் பிள்ளைகளைப் பெத்து காவு கொடுத்து, பின்னர் கணவனை இழந்து விதவையாகி, பிறகு அகதி முகாம்களில் அல்லல்பட்டு என்று தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சொல்லிமாளாதவை. இந்தக் கடும் இறுதி யுத்தத்தில் செத்துப்போன பெற்றோரின் பிள்ளைகள் எல்லாம் அனாதைகளாகிவிட்டனர். அவர்களை யார் காப்பாற்றப் போகிறார்கள். எந்த உத்தரவாதமும் தரமாட்டார்களாம் யாரும். வன்னி மக்களை அவர்களின் சொந்த பூமியில் இருந்து ஓட ஓட விரட்டியாகிவிட்டது. அடுத்தது என்ன?

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் குரலாக ஒட்டுமொத்த வேண்டுதலாக இருப்பது இதுதான். தயவுசெய்து பறித்தெடுத்த எங்கள் வீடுகளைத் திருப்பித் தாருங்கள். கஞ்சியோ கூழோ எங்கள் முற்றத்தில் இருந்து குடித்துவிட்டுப் போகிறோம்.


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=61:2009-06-19-05-39-55&catid=35:2009-06-18-16-00-57&Itemid=54


 
 

♥ "போராட அனுப்ப எனக்கு இன்னுமொரு பிள்ளை இல்லையே....." நக்கீரன் தொடர்...! ♥

விடுதலைப் போராளிகளுக்கு வீர வணக்கம்! -ஜெகத் கஸ்பர்

1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து மலைமகள் என்றொரு பெண் எனக்குக் கடிதம் எழுதினாள். அவள் ஒரு போராளி. இன்றும் நான் மறவாத பெயர், மலைமகள். கடிதத்தையும் ஆவணப்படுத்தி காலத்தின் பதிவாய் வைத்திருக்கிறேன்.

மலைமகள் எழுதிய கடிதத்தின் சில வரிகள் இவை: ""தந்தை வீரச்சாவு அடைய, தன் மகனை களத்துக்கு அனுப்பினாள் ஒரு தாய் என்று நான் வாசித்திருக்கிறேன். ஆனால் களத்திலே வீரச் சாவடைந்த தன் மகனுக்குப் போராளித் தந்தை மண் போட்டதை நான் கண்டிருக்கிறேன். மணநாள் நிச்சயிக்கப்பட்ட தன் போராளித் துணைவியின் உடல் களத்தில் சிதறிட அவளுக்காக நினைவுக்கல் நாட்டிய போராளிக் காதலனை நான் கண்டிருக் கிறேன்.

பிறந்து 45 நாட்கள் மட்டுமே ஆன தன் பெண் குழந்தையை பின்னால் ஒரு போராளி சுமந்து வர, முன்னே தன் போராளிக் கணவனின் வித்துடலை தன் தோளிலே சுமந்து நடந்து விதை குழியில் வைத்து மண் போட்டு மூடிய போராளி மனைவியின் அருகே நின்றிருக்கிறேன்.

தன் ஒரே மகனை களத்தில் இழந்த தாய், அவன் பாதையில் போன கடைசி மகளும் வீரமரணமடைந்து உடலமாய் வீடு வர, "உனக்குப் பின்னாலே போராட அனுப்ப எனக்கு இன்னுமொரு பிள்ளை இல்லாமல் போய்விட்டதே' என்று அழுததை நான் பார்த்திருக்கிறேன்.

ஒருவர் மற்றவருக்குச் சொல்லாமல் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து சண்டைக் களத்தில் தற்செயலாய் தொலை தொடர்பு கருவியில் குரல் கேட்ட பின்னரே தான் மட்டுமல்லாமல் தன் வாழ்க்கைத் துணை யும் களத்தில் நிற்பதை அறிந்து கொண்ட போராளித் தம்பதிகளை நான் அறிந் திருக்கிறேன். அடுத்த வேளை சமைக்க உணவு இல்லை என்று தெரிந்து கொண்டே, களைத்துப் போய் வந்து தன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருக்கும் போராளிப் பிள்ளைகளுக்கு உணவு சமைக்கும் ஏழைத் தாய்மாரை நான் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் உலகிற்குத் தெரியுமா? எத்தனையோ வேதனைகள் விம்மல்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுதான் இங்கே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்...'' -இவ்வாறாக மலைமகளின் கடிதம் தொடர்ந்தது.

மலைமகள், சிவசங்கரி, அங்கயற்கண்ணி என நெருப்பின் குழந்தைகள் களத்தில் இருந்து காவியங் களாய் அனுப்பிய நூற்றுக்கணக்கான கடிதங்களை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன். நக்கீரன் ஊடாகவே அவை நித்திய வரலாற்றுக்காய் பதிவுபெறும்.

ராஜீவ்காந்தி படுகொலை என்ற வரலாற்றுப் பிழை தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் என்ற குற்றச் சாயம் பெறுவதற்கும், இன்றைய நினைத்துப் பார்க்க முடியாத பேரழி விற்கும் காரணமாயிற்று. ஆயினும் இவ் வரலாற்றுப் பிழைக்கும் அப்பால் அவ்விடுதலைப் போராட் டத்திற்கு தார்மீகமும் புனிதத் தன்மையும் இருந்தது. அப்புனிதத்தை கொடையாக போராட்டத்திற்குத் தந்தவர்கள் துரும்பளவுதானும் சுயநலம் இன்றி, தன்முனைப்பு இல்லாதவர்களாய், தம் தலைமுறைகள் நலமுடன் வாழ தமிழ் ஈழ நிலமொன்று உரிமையுடன் வேண்டுமென்ற ஒரே நோக்கிற்காய் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள்.

இந்திரன் என்ற போராளி 1998-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் எத்தனையோ அதிகாலை வேளைகளில் என்னை தனியாக அழ வைத்த கடிதம். இப்போது அதனை எழுதும்போது கூட என் கண்கள் பனிக்கின்றன. அப்போது கிளிநொச்சி நகரை ராணுவப் பிடியிலிருந்து மீட்க விடுதலைப்புலிகள் ஆயத்தமாகிக் கொண்டி ருந்த காலகட்டம். இந்திரன் இவ்வாறு தன் கடிதத்தை தொடங் கியிருந்தான்: ""அண்ணா! நான் பல சமர்களில் பங்கு பற்றியிருக்கிறேன். ஆனால் இச் சமருக்குச் செல்லும் முன் எதையாவது எழுதிவிட்டுச் செல் என்று என் மனம் சொல்கிறது. எந்தச் சண்டைக்குப் போனா லும் இப்படி மனம் இருப்பதில்லை. அதனால் உங்களுக்கு இக்கடிதம் எழுதி என் தோழனிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். அவன் நான் இச்சமரில் வீரச்சாவு அடைந்தால் மட்டுமே இக்கடிதத்தை உங்களுக்கு அனுப்பி வைப்பான். (ஆக, கடிதம் என்னை வந்து சேர்கிறது... அந்தப் போராளி இந்திரன் உயிரோடு இல்லை).

இந்திரன் எழுதிய கடிதத்தில் என் உயிரைப் பிழிந்த வரிகள் இவை: ""அண்ணா! ஒரு மனிதனுக்குத் தான் சாகப் போகும் போது, மரணம் அருகில் வந்துவிட்டதென்ற உணர்வு மேலிடுகையில் பலவிதமான ஆசைகள் இறுதி ஆசையாக மனதிலே தோன்றும். அதேபோல் என் மனதிலும் சில இறுதி ஆசைகள். தமிழீழம் கெதியா (விரைவாக) கிடைக்கணும். எங்கட சனத் தின்றெ கஷ்டங்கள் தீரோணும்''. வானகமே, வையகமே, நேயமுள்ள மனுக்குலமே! மரணம் மௌனமாய் அருகில் வந்து அணைக்கக் காத்திருப்பது கண்ணுக்குத் தெரிகிறபோதும்கூட தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தவரைப் பற்றியோ தன் பிற நேசங்களைப் பற்றியோ எண்ணாமல், "கெதியா தமிழீழம் கிடைக்கணும் எங்கட சனத்தின்றெ கஷ்டங்கள் தீரணும்' என்று ஆசித்து உயிர் சமர்ப்பிக்கும் எங்கள் பிள்ளைகளையா பயங்கரவாதிகள் என்று சொல்கிறீர்கள்?

இந்திரன் இவ்வாறு தன் கடிதத்தை நிறைவு செய்திருந்தான்: ""அண்ணா! என்ன இருந்தாலும் இந்தச் சண்டையில் நான் கட்டாயம் வீரச்சாவு அடைவேன் என்று என் மனம் சொல்கிறது. நான் வீரச்சாவு அடைந்தாலும் என் உயிர் தமிழ் ஈழ வான் பரப்பிலே உலவிக் கொண்டிருக்கும். உயிர் பிரிந்தாலும் உங்கள் குரலை வான்பரப்பில் நான் தவறாது கேட்பேன். "தமிழீழம் மலர்ந்துவிட்டது' என ஒருநாள் நீங்கள் வானொலியில் அறிவித்து அதனைக் கேட்டு என் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென் பதும் என் இறுதி ஆசைகளில் ஒன்று. அண்ணா! உங்கள் முகத்தை எனக்குத் தெரியாது. ஆனால் தூரத்தில் இருந்து எம் விடுதலையை நேசிக்கும் எல்லோரது முகங்களையும் எம் தலைவரின் முகத்தில் பார்க்கிறேன்!'.

நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் என சுற்றித் திரிந்து விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மைகளைப் பதிவு செய்த அந்நாட்களில் நான் உணர்ந்து பதிவு செய்த உன்னதமான உண்மைகளில் ஒன்று, களத்தில் ஆயுதம் தாங்கும் அப்போராளிகள் மனதில் எத்துணை கனிவானவர்களாகவும், மென்மையான வர்களாயும், வருணிக்கவே முடியாத நேயம் கொண்டவர்களாயும் இருந்தார்களென்பது.

சந்தனம் எனக்குப் பிடிக்கும். சந்தனச் சிமிழ் எங்கிருந்தாலும் எடுத்து நெற்றியில் பொட்டிடும் பழக்கம் எனக்கு நீண்ட நாட்களாய் உண்டு. ஏதோ ஒரு தெய்வீக ரகசியம் சந்தனத்தில் இருக்கிறது. வயிரம் ஏற வாசம் கூடும் மரம் அது. அதனிலும் முக்கியமாக எரிந்து குளிர்தரும் அதிசயம் சந்தனம். போராளிகளையும் நான் அவ்வாறே கண்டேன். விடுதலைக்காய் நெருப்பாகிச் சுடர்விட்ட அதேவேளை நெஞ்சுக்குள் குளிர் தடாகங்களாய் நேசமாகிக் கிடந்த அபூர்வப் பிறவிகள். எனவே தான் மாவீரர்களாய் அவர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுகையில் பாடப்படும் பாடலும் நான் இதுவரை கேட்ட பாடல்களிலெல்லாம் மறக்க முடியாததாய் நிற்கிறது.

தாயக கனவுடன் சாவினை தழுவிய

சந்தனப் பேழைகளே! இங்கு

கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா

குழியினுள் வாழ்பவரே?

உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் -அன்று

செங்கழல் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே, எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

தாயக கனவுடன் சாவினை தழுவிய

சந்தனப் பேழைகளே!

வல்லமை தாரும் -முன்

உங்களின் வாசலில் வந்துமை வணங்குகின்றோம்.

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு

சத்தியம் செய்கின்றோம்.

வல்லமை தாரும் -முன்

உங்களின் வாசலில் வந்துமை வணங்குகின்றோம்.

சா வரும் போதிலும் தணலிடை மீதிலும்

சந்ததி தூங்காது.

எங்கள் தாயகம் வரும்வரை

தாவிடும் புலிகளின் பாதங்கள் தீராது.

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்,

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

உயிர்விடும் வேளையில் உங்களின் நாவுகள்

உரைத்தது தமிழீழம்.

அதைவிட யாதொரு குன்றில் விரைவினில்

நிச்சயம் எடுத்தாளும்.

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனி அரசு வென்றிடுவோம் -எந்த

நிலை வரும் போதிலும் இனி உளோம்

உங்களின் நினைவுடன் ஒன்றிடுவோம்.

எங்கே, எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்,

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள்!


-நண்பர்களே! தமிழர்களே! பயங்கர வாதம், தவறுகள் குற்றங்கள் அனைத்திற்கும் அப்பால் தமிழீழ விடுதலை என்ற கனவு தூய்மையானது. அவர்களது மரணம் வீர மரணம். வணக்கம் பெறுவார்கள், தமிழ் இனம் இப்பூமிப் பரப்பில் உள்ளவரை!

(நினைவுகள் சுழலும்)



Arogan Rajapakse.jpg   






♥ " உண்மை ஒருநாள் உலகத்தின் முன் நிற்கும் "- நக்கீரன் கட்டுரை ♥



பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட்டதாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கை பல்வேறு தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில், இந்த அமைப்பின் அறிக்கையை மறுத்துள்ளது இலங்கை அரசு. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும், பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜ பக்சேவும் ""பிரபாகரன் சித்ரவதை செய்யப்படவில்லை. அவர் தப்பித்துச் செல்ல முயன்றபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்'' என்று ஓங்கி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதே பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மனித உரிமை அமைப்பு, பிரபாகரன் குறித்து முன்னுக்குப் பின் முரணாகவும் மாற்றி மாற்றி பொய்யான தகவல்களை இலங்கை அரசு பரப்புவதாக தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபற்றி யாழ் பல்கலைக்கழக வட்டாரங் களைத் தொடர்புகொண்டபோது... ""புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிச் செல்ல முயற்சித்தார், அப்போது ராணுவத்தினர் சுற்றி வளைத்துச் சுட்டதில் பிரபா கரன் இறந்தார் என்று முதல் முதலாக அறிவித்தது இலங்கை ராணுவம்.

ஆனால், சிலமணி நேரங் களிலேயே இதனை மாற்றிக் கொண்ட ராணுவத்தினர், பிரபாகரனின் கைத்துப் பாக்கியை கொண்டுவந்து தங்கள் படைத்தலைமையிடம் ராணுவ வீரர் ஒருவர் காட்டியதாகவும், கைத்துப்பாக்கியின் உறையில் இருந்த எழுத்தை வைத்தே பிரபாகரன் இறந்திருப்பதை அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தனர் ராணுவத்தினர்.

இந்தத் தகவலை தெரிவித்ததற்கு மறுநாளே, பிரபாகரன் உடலை நந்திக்கடல் பிரதேசத்தில் கைப்பற்றியதாகவும் அவரது உடலில் அவரது அடையாள அட்டை இருந்ததாகவும் கூறியது ராணுவம்.

இப்படி நேரத்துக்கு நேரம் முரண்பட்ட தகவலைத் தெரிவித்தது. ராணுவம் கூறிய இவையெல்லாம் நம்பும்படியாக இல்லை. காரணம் ராணுவம் கூறிய எந்த ஒரு தகவலிலும் நிலையாக நின்று தொடர்ந்து கூறிக்கொண்டி ருக்கவில்லை. மாற்றி மாற்றி முரண்பட்ட பொய்யான தகவல்களையே ராணுவத்தினர் கூறி வந்ததிலிருந்தே இவையெல்லாம் இட்டுக்கட்டி கூறப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ரீதியில்தான் எங்கள் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது'' என்கின்றனர்.

ஆக... பிரபாகரன் பற்றி இலங்கை அரசும் ராணுவமும் இட்டுக்கட்டிய பொய்களையே அவிழ்த்துவிட்டுள்ளன என்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மனித உரிமை அமைப்பு தனது அறிக்கையில் சாடியிருக்கிறது. அதாவது, ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய்யை இலங்கை அரசு அறிவித்துக் கொண்டேயிருக்கிறது.

இலங்கை அரசின் பொய் முகங்களை வெளிப் படுத்தியுள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மனித உரிமை அமைப்பு, பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட் டார் என்று கூறிய விவகாரம் குறித்து சர்வதேச அளவில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்பினர் அலசிக் கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச தொடர்பு களில் இதுபற்றி நாம் விசாரித்தபோது... ""பிரபாகரன் குறித்து இலங்கை அரசு வெளியிட்டுவரும் செய்திகள் அண்டப்புளுகு என்று உலகத்துக்குத் தெரியும். இதே கருத்தைத்தான் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இதே சங்கம்தான் இலங்கை ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி, "பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட்டார்' என்று அறிக்கையில் கூறியுள்ளது.

முரண்பட்ட தகவல்களைக்கூறும் ராணுவத்தின் கூற்றுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறுகிற இந்த அமைப்பு, பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட்டார் என்று ராணுவத்தினர் கூறியதை மட்டும் எப்படி உண்மையாக இருக்கும் என்று நம்பியது? அதனை நம்பி எப்படி அறிக்கை வெளியிட்டது. ஆக, பிரபாகரன் குறித்து பொய்யான தகவல்களை மாற்றி மாற்றி இலங்கை ராணுவம் கூறியது போலத்தான், அவர் சித்ர வதை செய்யப்பட்டார் என்கிற தக வல்களும்'' என்று விவரிக்கின்றனர்.

உண்மை ஒருநாள் உலகத்தின் முன் நிற்கத் தானே போகிறது.


செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்: எம் தலைவர் சாகவில்லை..

பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்:

http://www.nerudal.com/mp3/Em Thalaivar.mp3


http://www.nerudal.com/nerudal.8447.html




♥ பொய்யைப் புளுகும் புதினம் ♥

வழுதி <---> புதினம் -மறுபக்கம்

http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/4664_1136244736126_1527581102_30330389_773788_n.jpg



உண்மையான பெயர்: பரந்தாமன்

தற்போதைய வசிப்பிடம்: அமெரிக்கா

எதிரிகள்: தலைவர் பிரபாகரன், தமிழ்செல்வன், அதியமான்

முழுநேரப்பணி: மேற்கண்டவர்களை தூற்றுவது

காரணம்: தனது காம இச்சைகைளையும், பணத் தில்லுமுல்லுகளையும்கண்டு பிடித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றியமை.

 

புதினம் இணையத்தளத்தில் வழுதி என்பவர் 'முன்னாலே சென்றோரின்..." என்ற தலைப்பில் ஒரு கருத்தாய்வு கட்டுரை என்ற தலைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்களை கடுமையாக விமர்;சித்து இருந்தார்.
பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கு ஆதரவு நிலை போல காட்டி வந்த புதினம் இணையத் தளத்தின் புலிச்சாயமும்  இந்த கட்டுரையையுடன் வெளித்துப்போனது.

வழுதி என்பவர் யார்?

 இவர் இவ்வாறான கட்டுரை எழுதவேண்டிய காரணம் என்ன?
 என்ற கேள்விக்கு விடை காண்பதே இந்த கட்டுரை.

வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வநோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மேசடி செய்தமை போன்ற காரணங்களினால் தமிழ்ச்செல்வன் இவரை தன்னுடன் பணிக்கு வைத்திருக்க முடியாது என வி.பு தலைமைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைப்பீடம் புலனாய்வுத்துறையிடம் பரந்தாமன் (வழுதி) பற்றி விளக்கம் கேட்டது. பரந்தாமன் (வழுதி) பற்றி முழுமையான விசாரித்தும் பின்தொடரும் பணியிலும் இருந்தவர், புலனாய்வுத்துறை சார்ந்த
அதியமான்.

இவர் தனது அறிக்கையில் தமிழ்ச்செல்வன் கூறியவையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது தமிழ்ச்செல்வன் குறிப்பிடாத பல செய்திகளையும் தலைமைக்கு தெரிவித்தார்.
அத்தோடு இவரை மேலும் இயக்கத்தில் அனுமதிக்க முடியமைக்கு உரிய காரணங்களையும் குறிப்பிட்டார். இவருக்கான தண்டனை பற்றி தலைமைபீடம் யோசித்து வந்தபோது.

தலைவர் குறுக்கிட்டு இவர் நீட்ட காலம் பணியாற்றியமையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையுடன் இவரை இயக்கத்தில் இருந்து நீக்கி செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். ஆனால் சிறீலங்கா தவிர்ந்த ஏனைய நாட்டில்தாலன் பரந்தாமன் ஐந்து ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வழுதியின் வேட்டுதலுக்கு இணங்க இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் தலைவர்.

நாட்டை விட்டுவெளியேறியதும் பரந்தாமன் என்ற வழுதி மேற்கண்டவர்கள் மேல் வக்கிரம் கொள்ள ஆரம்பித்தார்.


இவ்வளவு சம்பவங்களும்தான் வழுதி (பரந்தாமன்) புதினம் இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை விமர்சிக்க காரணமாக இருந்தது.

 

புதினம் இணையத்தளம் இக்கட்டுரையை ஏன் வெளியிட்டது....

 

புதினம் இணையத்தளம் அவுஸ்திரேலியாவில் இருந்து கரன் என்பவரினால் இயக்கப்பட்டுவருகின்றது. இவர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் கிடையாது. இவர் சாந்திருக்கும் நபர்களில் பெரும்பாலனவர்கள்

புலி எதிர்ப்பாளர்கள். அவரின் முக்கிய நண்பவர்கள் சிலர் விவரம்:

ஜெப்றி உதுமான் லெப்பை
தென்புலோலிய+ர் கிருஸ்ணலிங்கம்
பரபரப்பு ரிசி

 ஜெப்றி உதுமான் லெப்பை என்பவர் ஒரு கருணாவுடன் தொடர்புடைய கிழக்குமாகாண இஸ்லாமியத் தமிழர்.கொம்பியுற்றரர் பள்ளி வைத்திருக்கும் இவர் பரம புலிஎதிர்ப்பாளர். தென்புலோலிய+ர் கிருஸ்ணலிங்கம் என்பவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எனற வானொலியில் செய்தி படிக்கும் புலி எதிர்பாளர். இவர் இலங்கை போக்குவரத்து சபையில் இருந்தபோது மதுபோதையில் பெண்களுடன் தீய நடத்தையில் ஈடுபட்ட காரணத்தால் புலிகளால் தண்டிக்கப்பட்டவர். பரபரப்பு பத்திரிகை பதிப்பாளர் ரிசி இவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் பணியாற்றும்போது கரனுக்கு பழக்கம் ஏற்பட்டு இன்றுவரை தொடர்கிறது. இவர் புலி ஆதரவு போல் வேடம்போடும் புலி எதிர்பாளர். கனடியத் தமிழ்; மக்களிடம் விசாரித்தால் இவர் பற்றி புரியும். எயார் கனடா நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றுடன் பணியாற்றிவருபவர்.
தன்னை புலிகள் வன்னிக்கு அழைத்தாகவும் தான் அங்கு சென்று அவர்களுக்கு புலனாய்வு குறித்து பாடம் எடுத்ததாகவும் கூறிவருகிறார்.

ஆனால் கனடாவில் இவருடைய பத்திரிகையில் வந்த புலி எதிர்ப்பு கட்டுரைகளால்.... பல கடைகளில் இப் பத்திரிகை தற்போது விற்பனையில் இல்லை என அறியமுடிகிறது.

கரன் நடத்திவரும் மற்றய இணையத்தளமான 'தமிழ்நாதம்" என்ற இணையத்தளத்தை பார்த்தால் புரியும் பரபரப்பு பத்திரிகை ரிசிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு.

கரன் இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.

கரன் ஆரம்பித்து நடத்தி வந்த புதினம் இணையத்தளம் விடுதலைப் புலிகளின் இணையத்தளம் போன்று மக்களுக்கு தோற்று வததால் அந்த இணையத்தளத்தை

தமக்கு தருமாறு விடுதலைப் புலிகள் கேட்டனர் ஆனால் கரன், இதுதான் தனது வாழ்வு ஆதராம் தான்  பிழைப்பும் இல்லாமல் இதனை நம்பியே பிழைப்பு நடத்துவதாகவும் புலிகளுக்கு
தெரிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சினையால் இவருக்கு செய்திகொடுப்பதை புலிகள் குறைத்துக் கொண்டு.
ஜேர்மனியிலும் கனடாவிலும் இருந்து இயங்கும் இரு இணையத்தளங்களை அமைந்து திறம்பட தற்போதும் நடத்தி வருகின்றனர்.

இவைதான் முற்றிலும் வழுதிய தலைவர் பிரபாரகன் அவர்களை தூற்றியமைக்கும் புதினம் இணையத்தளம் அதனை வெளியிடுவதற்குமான காரணங்கள்.


ஆய்வு:
செல்வக்குமரன்  சிற்றப்பலம் (கனடா)

http://eeladhesam.com/



http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/n1527581102_30330410_3192031.jpg


smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!