Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, April 15, 2009

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

குமுதம்: பத்து ரூபாயில் 'பலான அனுபவம்' ஒரு ஆய்வு !

"குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?" என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?

ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது 'சைஸ்' பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.

"குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்".

"இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடரனும் உங்கள் ஆதரவுதான்.

- அன்புடன் ஆசிரியர்.

ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.

குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.

ஆசிரியர் குழு

ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.

செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர். நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். 'என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது' என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள்.

குமுதத்தின் ஆசிரியர் குழுவினர் வார இறுதியில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு மாலையில் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து  அடுத்த வார இதழின் செய்திகளை விவதிப்பார்களாம். கடந்த 53 ஆண்டுகளாக வெளிவந்த 2809 குமுதக் குட்டிகளைப் பெற்றெடுத்த பாவம் மெரினாக் கடற்கரையையே சாரும்! ஆயினும் இதே அரட்டையைத்தான் கிராமத்தின் பணக்காரப் பண்ணைப் பெரிசுகள், திண்ணையில் தொந்தி புரள, வாயில் குதப்பிய வெற்றிலையுடன், 'அடுத்தாத்து அம்புஜத்தை கவனிச்சேளா ஓய்' என்று பல நூற்றாண்டுகளாய்ச் செய்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இலாபமே துணை

வாரம் 5 லட்சம் பிரதிகள் என ஆண்டுக்கு 265 இலட்சம் குமுதங்கள் விற்பனையாகின்றன. குமுதத்தின் விலையான 5 ரூபாயில், அதன் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கிட்டால் அடக்க விலை அதிக பட்சமாக ரூ.3.50 வரும். எனில் ஒரு இதழின் லாபம் 1.50. ஆண்டுக்கு 3 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். குமுதத்தின் ஓரிதழில் 30 பக்கங்கள் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். அட்டை, வண்ணம், சிறப்பு என எல்லா விளம்பரங்களையும் கணக்கிட்டால் ஒரு பக்கத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரலாம். இவ்வகையில் வருடத்திற்கு 11 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என சிறப்பிதழ்களின் கூடுதல் வருமானத்தை சேர்த்தால் மொத்த ஆண்டு வருமானம் 20 கோடியைத் தாண்டும். ரிப்போர்ட்டர், மாலைமதி, பக்தி ஸ்பெஷல் போன்ற குமுதம் குடும்ப பத்திரிகைகளின் வருமானம் தனி.

குமுதத்தின் இட ஒதுக்கீடு

விளம்பரங்கள் போக உள்ள 130 பக்கங்களில் சராசரியான இட ஒதுக்கீடு தலைப்பு வாரியாக பின் வருமாறு. சமூகம் - 5, அரசியல் - 15, சினிமா - 19, தொலைக்காட்சி -5, இசை -1.5, விளையாட்டு - 2, மருத்துவம் - 5, வாசகர் கடிதம் - 2, உலகச் செய்தி - 2, ஜோக் - 3, சிறுகதைகள் - 9, ஒரு பக்க கதைகள் - 4, புதிர் போட்டி - 2, தொடர் கதைகள் - 15, உணவு - 2, சுற்றுலா - 4, பேஷன் - 4, வேலை, கல்வி - 3, கவிதை - 2, வியாபாரம் சுய முன்னேற்றம் - 5, நூல் அறிமுகம் - 1, பக்தி ஆன்மீகம் - 5, அரசு கேள்வி பதில் - 2, இதரவை - 12.5 என ஒதுக்கப்படுகிறது. குமுதல் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரின் மினுமினுப்பைக் கொண்டிருக்கும். இத்தனை சமாச்சாரங்கள் இருந்தாலும் அத்தனையிலும் குமுத்தின் லேகியம் கலந்திருக்கும்.

இட ஒதுக்கீட்டில் எழுத்து ஒதுக்கீடு

படங்கள் இல்லாமல் குமுதத்தின் ஒரு பக்கத்தில் 200 வார்த்தைகள் இடம் பெறும். குமுதத்தின் எல்லாக் கட்டுரைகளிலும் செய்தி போன்ற அரட்டை, ரசனை நடை, கிசுகிசு நடை, புகைப்படம், ஓவியம், வடிவமைப்பு இடம் ஆகியவை இடம் பெறும். குமுதத்தின் கதைகளுக்குரிய 30 பக்கங்களை கழித்து மீதியுள்ள 100 பக்கங்களைப் பிரித்துப் பார்ததால்,

செய்தி, அரட்டை = 40 பக்கங்கள், படங்கள் = 36 பக்கங்கள், கிசு கிசு நடை = 23 பக்கங்கள் என வரும். இதில் வாசகர்கள் ஓரளவிற்கேனும் துளியூண்டாவது செய்திகளைத் தெரிந்து கொள்வது 40 பக்கத்தில் மட்டும்தான். அதாவது 8000 வார்த்தைகள். இதைப் புதிய கலாச்சாரத்தின் வார்த்தை - பக்க அளவிற்கு மாற்றினால் 13 பக்கங்கள் வரும்.

இந்த 13 பக்க செய்திகளைத் தேர்வு செய்து, கண்டு, கேட்டு, படித்து, சுட்டு, மொழிமாற்றி, இன்னும் மூளையை கசக்கி எழுதினாலும் - ஒருமனித மூளை உழைக்க வேண்டியது அதிக பட்சம் 24 மணிநேரம் மட்டும்தான். இதையே கிசுகிசு - லேகியம் கலந்து ஊதிப்பெருக்கி எழுத கூடுதலாக ஒரு 24 மணிநேரம் வேண்டும். ஆனால் இதற்காகவே புரசைவாக்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, எல்லா நவீன வசதிகளையும் ஏற்படுத்தி, ஒரு பெரும்கூட்டமே வேலை செய்கிறது என்றால் தமிழன் செய்த பாவம்தான் என்ன?

புகைப்படங்கள்

குமுதத்தின் கதைகளில் இடம்பெறும் ஓவியங்களைக் கழித்துப் பார்த்தால் சுமார் 35 பக்கங்களை நிரப்பும் அளவுக்கு புகைப்படங்கள் வருகின்றன. இதில் சினிமா மனிதர்கள் - கவர்ச்சிப் படங்கள் 15 பக்கம், பிரபல அரசியல் தலைவர்களின் விதவிதமான கோணங்கள் 6 பக்கம், ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழக சமூகப் பிரபலங்கள் 6 பக்கம், இயற்கைக் காட்சிகள் 4 பக்கம், பொது மக்கள் 3 பக்கம் எனவும் இடம் பெறுகின்றனர். அதிலும் பொது மக்கள் ஸ்டாம்ப் சைசில் கறுப்பு-வெள்ளையில் தோன்றுவார்கள். சினிமாத்தோல் மட்டும் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் முழு- அரை- கால் பக்க அளவுகளில் இடம்பெறும்.

ஒரு கட்டுரையின் மையமான விசயத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும். ஆனால் குமுதத்தின் குறிப்பிட்ட கட்டுரைக்குள் நுழைவதற்கு ஆசை காட்டி அழைப்பதற்கே இவை பயன்படுகின்றன. இன்னும் பளிச்சென்று புரிய வேண்டுமானால் தரங்குறைந்த மேக்கப்புடன் தெருவோரத்தில் நிற்கும் விலைமாது 'வாரியா' என்றழைப்பதைத்தான் குமுதத்தின் புகைப்படங்களும் உணர்த்துகின்றன.

மேலும் சினிமா, பெண், மேட்டுக்குடி வாழ்க்கை, பேஷன் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அழகு பற்றிய படிமங்கள், குமுதத்திற்கு பிரியாணி போடும் விளம்பங்களுக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

விளம்பரங்கள்

'பெண்களின் கனவு! எல்லா வயதிலும் பெண்களின் கனவு! ஆரோக்கியம்! கட்டுடல்! அழகு! - மெடிமிக்சின் சுந்தரி கேப்சூல் விளம்பரத்தின் வாசகம். குமுதம் உருவாக்க விரும்பும் மனிதர்களின் சாரத்தை ஒரு கவிதை போல 30 பக்க விளம்பரங்களும் தெரிவிக்கின்றன. நுகர்பொருள் நடுத்தர வர்க்கத்தையும் குறிப்பாக பெண்களையும் குறி வைத்து ஏவப்படும் இந்த விளம்பரங்கள் குமுதத்தின் சாரத்தை எளிமையாக புரியவைக்கும். பற்பசை, சோப், தேநீர், ஊறுகாய், காஃபி, பட்டு, பாத்திரங்கள், ஆன்மீகம், அனாதை இல்லம், ஆணுறை, உடலுறவு மாத்திரைகள், பைனான்ஸ், எல்.ஐ.சி. பாலிசி, கம்ப்யூட்டர் கல்வி, கருவளையம், ப்ரா, கூந்தல் தைலம், உடல் மெலிவு மாத்திரைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கூப்பன் காட்டினால் தள்ளுபடி, மெகா பரிசுப் போட்டி என்று நிலைக்கண்ணாடி முன், தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்க்க, ரசிக்க, அடைய வாசகர்களை பெண்களைப் பயிற்றுவிக்கின்றன.

குமுதவியல்

குமுதம் முதலாளிகள் உருவாக்கியிருக்கும் குமுதவியல் என்ற இரசனைதான் அவர்கள் கட்டிக்காத்து வரும் ஓரே சொத்து. அரசியல், ஆன்மீகம் தொடங்கி, செக்ஸ், சினிமா வரை ஆட்சி செய்யும் அந்த இரசனை, மூளையின் சிந்தனை நரம்புகளை மக்கிப் போகவைக்கிறது.

குமுதத்தின் அட்டையில் 80 சதவீதம் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியுடன் இடம் பெறுவர். அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் அரசியல் - சமூகக் கட்டுரைகளின் தலைப்பு பளிச்சென்று தெரியும். வெள்ளை பனியன் அணிந்த சிம்ரனின் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டை சமீபத்தில் வெளிவந்தது. தீண்டாமைக் கட்டுரைக்கு தாழ்த்தப்பட்ட மக்களையோ, சேரிகளையோ போடுவதற்குப் பதில் சிம்ரனைப் போட்டிருப்பது ஆத்திரமாக அருவருப்பாக இல்லையா? அடுத்த வாரத்தின் வாசகர் கடிதத்தில் "சினிமாவில் கூட சிம்ரன் இத்தனை அழகாக இல்லை" என்று ஒருவர் எழுதுகிறார். இதுதான் குமுதவியலின் சாதனை.

எழுத்தில் குமுதம் செய்வதை காட்சியாக 24 மணிநேரமும் சன்.டி.வி செய்கிறது. அதனால் ஓரளவு முற்போக்கு - அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.

அரசியலையும், சமூகவியலையும் உருவிவிட்டு தலைவர்களது பழக்கவழக்கங்கள், உறவுகள், மோதல்கள் போன்றவற்றைத் தருவதுதான் குமுதத்தின் அரசியல் கட்டுரைகள். "வைரமுத்துவுடன் திடீரென்று மாமல்லபுரம் செல்கிறார் கலைஞர். ரஜினி, கமல், அண்ணா, பெரியார் பற்றி விவாதிக்கும் கலைஞர், பொறித்த மீனை வைரமுத்துவுக்குப் போடச் சொல்லும் கலைஞர், வீட்டு நாயை சமாதானப்படுத்துமாறு செல்போனில் அழைக்கும் தயாளு அம்மாளுடன் பேசும் கலைஞர் - இலையே கலைஞரின் மாமல்லபுரம் விசிட் பற்றிய 4 பக்கக் கட்டுரைச் செய்திகள்.

இப்படி தலைவர்களது சேட்டைகள், பேட்டிகள், சவுடால்கள், சந்தர்ப்பவாதங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து அவர்கள் பல் தேய்த்து - பழம் தின்ற கதைகளை ரசனையுடன் வெளியிடுவதில் குமுதம் ஒரு முன்னோடி.

காந்தி ஜயந்தியை நினைவு கூறும் குமுதம், பொள்ளாச்சி பூச்சி மருந்து வியாபாரி ஒருவர் காந்தி தபால் தலைகளைச் சேகரித்திருப்பதை தெரிவிக்கிறது. பொங்கல் சிறப்பிதழ் ஒன்றில், தமிழே தெரியாத பம்பாய் நடிகை பொங்கலிடுவதையும், கோலமிடுவதையும், பொங்கல் பற்றிய அவரது தத்துவங்களையும் வெளியிடுகிறது. காதல் சிறப்பிதழ் ஒன்றில், சேலம் அருகே உள்ள கிராமத்தினர், ஓடிப்போகும் காதலர்களை மீட்டு வந்து சுடுகாட்டில் தாலிகட்ட வைப்பதாக ஒரு செய்தி. இங்கே காந்தியும், காதலும், பொங்கலும் கீழான ரசனையில் ஜொலிப்பதுதான் குமுதவியலின் புதுமை.

முன்அட்டை முதல் பின் அட்டை வரை எல்லா பக்கங்களிலும் சினிமா விரவியிருக்கும். நடுத்தர வர்க்கத்து பெண்மணிகள் சமைத்து ஓய்ந்த நேரங்களில் பேசிக் கொள்ளும் ஒரே சமூக விசயம் குமுதத்தின் சினிமா செய்திகள்தான். அரசியல் தலைவர்களை விட சினிமா நாயகிகளின் பழக்க வழக்கங்கள் நுணுக்கமாகப் பதியப்படும். சினிமாக் குமுதம்தான் வாசகர்களின் ரசனை, படிப்பு, கண்ணோட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.

மோனிகா லிவின்ஸ்கி குண்டான செய்தியும், டென்னிஸ் நட்சத்திரங்கள் அகாஸி - ஸ்டெபிகிராப் காதல் படங்களும் அயல்நாட்டு செய்திகளாய் அணி வகுக்கும். 'குடும்ப விழாவில் உங்களை ரகசியமாக பெண் பார்க்கும் போதும்', விருந்திற்கு வந்த இளைஞர் கூட்டம் உங்கள் மார்பிலிருந்து கண்ணை அகற்றாமல் இருப்பதற்கும் போட வேண்டிய உடைகள், அழகுக் குறிப்புகள் 'பேஷன் வாட்ச் பகுதியில் இடம் பெறும். இவையெல்லாம் விபச்சாரத்திற்கான வழிமுறைகள் என்பது படிக்கும் பெண்களுக்கு தோன்றாது.

பக்திக் கட்டுரையில் தஞ்சாவூர்க் கோவில்களின் புராண புரட்டுக் கதைகள் குமுதவியலின் திரைக்கதை வடிவில் வெளிவரும். சென்று வரும் செலவு, பாவ - பரிகார பட்டியல், கதை சொல்லும் நீதி, குறிப்பிட்ட கடவுள் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று குறிப்பும் உண்டு. 'இந்து' உணர்வை எழுப்பப் போராடும் இந்து முன்னணி கூட இவ்விசயத்தில் குமுதத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.

பக்திக்குப் பிறகு வியாபாரம், சுய முன்னேற்றம், இரண்டரை லட்சம் முதல் போட்டு 73,000 கோடியில் நிற்கும் திருபாய் அம்பானியின் கதை ஆங்கிலப் படத்தின் டிரெய்லர் போல வரும். மோசடியால் முன்னேறிய இத்தகைய 'பிசினஸ் மகாராஜாக்கள்' குமுதத்தில் கைபட்டு உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக காட்சியளிப்பார்கள்.

பாலுறுவு இச்சையைத் தூண்டிவிட்டு வேறு ஒன்றில் முடியும் 1 பக்க கதைகள், கள்ள உறவு தத்துவப் புகழ் பாலகுமாரன் போன்றோரின் தொடர்கதைகள் போன்றவை குமுதவியலின் கதை இலாகாவில் தவறாமல் இடம் பெறும்.

இப்படித்தான் குமுதத்தின் ஒவ்வொரு பக்கமும் உழைத்து, இழைத்து , செதுக்கி உருவாக்கப்படுகிறது. சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம் போன்ற, சிறு பத்திரிகைகள் மண்டை பிளக்க விவாதிக்கும் இசங்களின் நடைமுறை உதாரணம் குமுதம் மட்டும்தான். வாழ்க்கையை விளையாட்டாக, வேடிக்கையாக, ரசனையாகப் பார்க்க வைக்கும் குமுதவியல், வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்க விடாமலும் வினையாற்றுகிறது. நினைவில் நிற்காத குமுதத்தின் பக்கங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய பிரச்சினைகளை மறப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது. குமுதத்தின் நொறுக்குத் தீனி ரசனை, வாழ்க்கை பற்றிய சமூக மதிப்பீடுகளை நொறுக்குகிறது.

தமிழ் சினிமாவிற்கு முன்பு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி குமுதத்திற்கு கிடையாது. குமுதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் தபால் இரயில் சலுகைக் கட்டணங்களின் மதிப்பு பல கோடியிருக்கும். பொதுத் துறைகள் நட்டமடைய குமுதமும் ஒரு காரணம் என்பதை தொழிலாளிகள் உணர வேண்டும். மரங்களை வெட்டிக் கூழாக்கித்தான் செய்திக்காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு வருட குமுதத்திற்கு தேவைப்படும் காகிதம் பல லட்சம் மெட்ரிக் டன்னாகும். குமுதத்திற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் ஆண்டு தோறும் அழிக்கப்படுகின்றன.

குமுதத்திடமிருந்து காட்டின் இயற்கை வளத்தையும், நாட்டின் சிந்தனை வளத்தையும் காப்பாற்றுங்கள் !


பின் குறிப்பு: இதே ஆய்வு பிற 'குடும்ப' பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும். டப்பா வேறு, லேகியம் ஒன்று.


http://www.vinavu.wordpress.com/2009/03/17/kumudam/


குறுகிய ஆயுள் கொண்ட மின்னஞ்சல் முகவரிகள்

குறுகிய ஆயுள் கொண்ட மின்னஞ்சல் முகவரிகள்






இணையம் என்னும் கடலில் தினமும் எதையாவது தேடுவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். குறிப்பிட்ட மென்பொருளைத் தரவிறக்கம் (download) செய்ய முற்படுவோம்.

அந்த மென்பொருளைத் (application) தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி(download link) வேண்டுமென்றாலும், அதைப் பயன்படுத்துவதற்கான குறிச்சொல்லைப்(activation code) பெற வேண்டும் என்றாலும் உங்கள் மின்னஞ்சலை அங்கே உள்ளீடு செய்ய வேண்டி வரும்.

உதாரணமாக Kapersky தளத்திலிருந்து, இணையப் பாதுகாப்பு மென்பொருளைத்(Internet Security) தரவிறக்கம் செய்ய முற்படுவதாகக் கொள்வோம். அங்கே நமது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டி வரும். ஆனால் ஒவ்வொரு முறை தரவிறக்கம் செய்யும்போதும் நாம் வேறு வேறு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதை உள்ளிட இயலுமா?

ஏதேனும் இணையக் குழுமங்களில் (Forums) திடீரென்று பார்வையிட உள் நுழைவீர்கள். நுழைவு வாயிலிலேயே உங்களுக்கான உறுப்பினர் பற்றிய தகவல்களைக் (login details) கேட்டு வழி மறிக்கும். அங்கே நமது மின்னஞ்சல் முகவரியைப் பதிந்து நமது ரகசியத் தன்மையை, பெயரை வெளியிட விரும்பாதவர்கள் அதிகம்.

இப்படி ஏதேனும் ஒரு பெயர் தெரியாத, அறிமுகம் இல்லாத தளத்தில் நமது மின்னஞ்சலைப் பதியலாமா? என சந்தேகம் வருவது மனித இயல்பு.

இணையத்தில் பாதுகாப்பான உலவலுக்காக குறுகிய ஆயுள் கொண்ட மின்னஞ்சல் முகவரிகளைப் (Use and Throw Emails) பயன்படுத்தலாம். எவ்வாறு?

அந்த நேரங்களில் எல்லாம் இந்த தற்காலிக மின்னஞ்சல் முகவரி - ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எறியும் வகையில் அமைந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

இச்சேவையைப் பயன்படுத்துவதால் உங்களது மெயில்பாக்ஸானது (Mail Box) தேவையற்ற குப்பை மெயில்களால் (Junk Mails) நிரப்பப்படுவதை தடுத்துவிடலாம்.

இந்த தற்காலிக மின்னஞ்சலில் ஆயுட்காலத்தை 3 முதல் 24 நேரம் வரை எவ்வளவு நேரம் என்பதை நீங்களே தெரிவு செய்யலாம்.

கீழ்க்கண்ட தளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

http://www.yopmail.com/en/

http://www.filzmail.com/

http://www.mintemail.com/

http://meltmail.com/

காட்டிக்கொடுக்கும் கருணா - ஒரு போராளி துரோகியான கதை

காட்டிக்கொடுக்கும் கருணா - ஒரு போராளி துரோகியான கதை

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.

1985 - 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் - தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.

இந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.

சிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள்? இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.

லெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ 'சதி' நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் 'அம்மான்' என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.

1994 - 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.

2002இல் ரனில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.

A9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் 'சரியான ஆளல்ல' என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.

வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.

இந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் 'பிரிக்கும்' பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் 'ரா'தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.

இந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.

கருணாவின் தம்பி 'றெஜி'யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.

இதன் பிறகு 'மக்கள் விடுதலைப் புலிகள்' என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்? கருணாவால் ரகு சுட்டுக்கொல்லப்பட்டார்.

காட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.

கருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் 'றெஜி' சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.

கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.

பிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.

பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் 'தாயாதி'ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.

கருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய 'ரா' உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள்? கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா? தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.

மறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.

தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்
தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.

-சை. பீர்முகம்மது

http://www.kalachuvadu.com/issue-112/page33.asp



இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!

என்னடா, வாரக் கடைசில குவார்ட்டர் அடிக்கப் போகாம விஜய் படம் பாத்துட்டு வந்த மாதிரி 'திரு' 'திரு' ன்னு முழிச்சிட்டிருக்க?

 

டேய், வவுத்தெரிச்சலை கிளப்பாத, ஏற்கனவே குவார்ட்டர் அடிச்சிட்டுதான் வந்தேன்!

 

அப்புறம் ஏண்டா இப்படி உக்காந்துட்டிருக்க?

 

இல்லடா, ரொம்ப நாளாச்சேன்னு கொஞ்சம் நியூஸ்லாம் படிச்சேன்னா, ஒரேடியா குழம்பிட்டேன், அதான்...

 

அப்படி என்னாத்தைடா படிச்சு குழம்பிட்ட?

 

இல்லடா, கொஞ்ச நாளைக்கு முன்னால கலைஞர், யாரோ தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதுனால, குட்டை மனப் பேராசை அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்லி ஒரு கவிதை படிச்சாரு ஞாபகமிருக்கா?

 

ஆமா, அவரு யாரை திட்டுனாருன்னு யோசிச்சு குழம்பிட்டியாக்கும்?

 

அது யாரோவோவா இருந்துட்டுப் போகட்டும், என் சந்தேகம் அதைப் பத்தி இல்லை, என் சந்தேகம் என்னன்னா, ஒரு தொண்டனா இருக்கறவன், கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப் படறது தப்பா என்ன? சரி அது அப்படியே தப்புன்னு வெச்சுகிட்டாலும், ஒரு முறை தலைவனாவனும்னு நினைக்கிறதே பேராசைன்னா, எப்பவும் தான் மட்டும் தலைவரா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை, இல்ல தனக்கப்புறம் தன் புள்ளைங்க மட்டும் தலைவனா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை?...... ஏண்டா எதுவும் பேசமாட்டேங்குற?

 

அடியேய் உனக்கு சனி பக்கத்துல டபுள் காட் பெட் போட்டு படுத்துட்டு இருக்குடியேய்!!! எலக்சன் டைம்ல மக்கள் யோசிக்கவே கூடாது, அதுவும் இந்த மாதிரில்லாம் யோசிக்க அரம்பிச்சா, வீட்டுக்கு ஆட்டோதாண்டி!!!

 

ஏண்டா சந்தேகம் கேக்கறது தப்பா என்ன? சரி, சட்டக் கல்லூரி பிரச்சனையில, ஏண்டா போலீஸ் வேடிக்கை பாத்துட்டு இருந்தது, உள்ள போயி தடுத்துருக்கலாமேன்னு கேட்டா, அனுமதி இல்லாம போகக் கூடாதுன்னு சொன்னாங்க, ஆனா அதே கோர்ட்டுல, அனுமதி இல்லாமயே, 4000 பேரு உள்ள பூந்து போட்டு தாக்குனாங்க. இதுல காமெடி என்னான்னா, மும்பைல, தாஜ் ஹோட்டல்ல எல்லாம் தீவிரவாதிகள் பூந்து அட்டூழியம் பண்ணப்ப கூட, துணை ராணுவப்படை வந்ததுக்கு 6 மணி நேரம் பண்ணாங்கன்னு பிரச்சனை ஆச்சு, ஆனா இங்க, ஒரு மணிநேரத்துக்குள்ளியே, 4000 பேரை கொண்டு வந்துருக்காங்க அப்படின்னுல்லாம் வக்கீல் சொல்றாங்களே அப்படீன்னா இது திட்டமிட்ட தாக்குதலா இருக்கும்னு சொல்றாங்களே அதுக்கு என்ன பதில்?

 

ம்ம்ம், டேய், நம்ம அரசாங்கம் அவ்ளோ விரைவா செயல்படுதுன்னு அர்த்தம்டா! இதை ஏன் நீ இந்த மாதிரி பாக்க கூடாது. டேய், உன்பேரை பேரை பேசாம செந்தில்னு மாத்திக்கோ, செந்தில்தான் கவுண்டமணிகிட்ட இப்படில்லாம் சந்தேகம் கேட்டுகிட்டே இருப்பாரு......................டேய் திடிர்னு ஏண்டா இப்படி யோசிக்கிற?


இல்ல மச்சி, நீ பேர்னு சொன்னவுடனே திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம்!,
……. காந்தி யாரு?

 

என்னடா, டீக்கடையில பழைய பேப்பர் படிச்சவனாட்டம் கேக்கற?

 

டேய் கிண்டல் பண்ணாம சொல்டா?

 

காந்தி வந்து, நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு, அஹிம்சை போராட்டத்தை எடுத்துச் சென்றதுல முக்கிய காரணமானவர். இதுல உனக்கு என்ன சந்தேகம்?

 

எனக்கு அவர் மேல எந்த சந்தேகமும் இல்ல, காந்தி சுதந்திரத்திற்காக பாடு பட்டது எனக்கும் தெரியும், ஆனா அதுக்காக ஒரு சிலர் அவரு பேரை பின்னாடி சேத்துகிட்டு பண்ற அழிச்சாட்டியம், பேசுற பேச்சு தாங்க முடியலைடா!

 

ஏண்டா, சந்திராசாமிக்கும், அரவிந்த்சாமிக்கும் சாமின்னு முடியுது. அதுக்காக ரெண்டு பேருக்கும் ஒரே கொள்கைன்னு அர்த்தமா? இதுல எல்லாம் இவ்ளோ டீப்பா யோசிக்க கூடாதுடா!

 

இல்லா மச்சான், இவங்க, பண்ணாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணிட்டு, ஒவ்வொரு முறையும் பேரு பின்னாடி காந்தின்னு வர்றப்ப சங்கடமா இருக்குடா, இவங்க எல்லா தப்பும் பண்ணட்டும், தயவு செஞ்சு அந்த பேருல இருந்து காந்தியை தூக்கிருங்கன்னு மனு கொடுக்கலாம்னு யோசிக்கிறேன். சரி இதுலதான் இந்தப் பிரச்சனைன்னா, ராஜீவை தப்பா பேசுனாவோ, சோனியாவை விமரிசனம் பண்ணாவோ, மன்மோகன் சிங்கை விமரிசனம் பண்ணாவோ தேசிய பாதுகப்பு சட்டதுல கலைஞர் உள்ள தூக்கி போட்டுறாரே, அதுக்கு பேசாம "கூட்டணி பாதுகாப்பு சட்டம்னு" பேரு வைக்கலாம்ல, அதை ஏன் "தேசிய பாதுகாப்பு சட்டம்"னு சொல்லனும். தயவு செஞ்சு இது ரெண்டுக்கும் பேரு மாத்த சொல்லனும்டா!!!

 

நீ ரொம்ப ஓவரா பேசுற! இவ்ளோ பேசுறியே நீ ஏன் எலக்சன்ல நிக்கக் கூடாது?

 

இது கூட நல்ல ஐடியாதான், அதுக்கு என்னடா தகுதி வேணும்?

 

ஐய்யோ, அந்த கருமத்துக்கு தகுதியே வேணாண்டா! ரவுடி, கொலைகாரன், ரெண்டு பொண்டாட்டி கட்டுனவன், ஜெயிலுக்குப் போனவன், யாரு வேணா நிக்கலாம், சொல்லப் போனா அவங்கதான் நிக்கறாங்க!

 

டேய் சீரியசா சொல்லுடா...

 

டேய், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதிடா. இப்ப திமுகன்னா, உன் நெருங்கிய சொந்தக்காராங்கள்ல யாருக்காவது பேரு, அழகிரி, கனிமொழி, ஸ்டாலின்னு இருக்கனும். அதிமுகன்னா, நவகிரகத்தை சுத்தி வர்ற மாதிரி சுத்தி வந்து அம்மா கால்ல உழுவணும், இப்படி பல இருக்குடா!!!

 

சரி காங்கிரஸ் சார்பா நிக்கனும்னா?

 

ம்க்கும்ம், அதுக்கு நீ நிக்காமயே இருக்கலாம்!

 

இல்லடா, திமுக பாட்டுக்கு, 16 தொகுதின்னு அள்ளி வழங்கிடுச்சி, தொகுதிக்கு ஒரு வேட்பாளர்னு வெச்சுகிட்டா கூட, மொத்தம் 16 பேரு வேணுமே, அவ்ளோ பேரு அந்தக் கட்சில இருக்காங்களா என்ன?----------------என்னடா பதில் சொல்லாம அப்படி பாக்கற?

 

டேய் என் வாழ்க்கைல நான் தண்ணியே அடிச்சதில்லை, இன்னும் கொஞ்சம் நேரம் உன்கிட்ட பேசுனா, என்னையே தண்ணி அடிக்க வெச்சிருவ போலிருக்கு! என்னை உட்டுடு!

 

சரி கடைசியா ஒரு கேள்வி இருக்கு பதில் சொல்லு, எலக்சன்ல யாருக்கு ஓட்டுப் போடறது?

 

ம்ம்ம்ம், முதல்ல குருவி படம் நல்லாயிருந்துதா இல்லை வில்லு படம் நல்லாயிருந்துதான்னு சொல்லு, அப்புறம் அதுக்கு பதில் சொல்லுறேன்!!!



--
நரேஷ்
www.nareshin.wordpress.com

‘டிப்ஸ்’ கொடுத்திட கலைஞர் தரும் ‘டிப்ஸ்

(திருமங்கலம். இந்தப் பெயரை மறக்க முடியுமா? விருந்து பரிமாறி இலை யின் அடியில் ரூபாய் நோட்டுக்களை வைத்து வாக்காளர்களை கவர்ந்த 'அழகு' பாணியை மறக்க முடியுமா? அழகிரி வாக்கு சேகரிக்கப் போகும் இட மெல்லாம் 'திருமங்கலம் பாணியில்' மக்கள் எதிர் பார்ப்பதாக நக்கீரன் ஒரு செய்தி வெளியிட்டுள் ளது. அதெல்லாம் பழைய செய்திகள். பூடகமாகவும் இருபொருள்படவும் பேசு வதில், எழுதுவதில், கலை ஞர் வல்லவர் என்பதை நாடறியும். திருமங்கலம் மாதிரி இலைக்கு அடியில் பணம் என்று எழுத முடி யாது அல்லவா, ஆகவே ...'டிப்ஸ்' தருக... என கலை ஞர் 'டிப்ஸ்' தந்துள்ளார் முரசொலியில் படியுங்கள்.)

"ஒரு நாள் ஒரு பத்து வயது சிறுவன் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான் . ஒரு இருக்கையில் உட்கார்ந் தான். ஐஸ் க்ரீம் கோன் எவ்வளவு? என்று கடை பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள், எழுபத்து ஐந்து செண்ட்டுகள் என்றாள். அந் தச் சிறுவன் தனது கையில் இருந்த சில்லறைகளை எண் ணத் தொடங்கினான். பிறகு அவன், ஒரு சிறிய அளவு ஐஸ்க்ரீம் எவ்வளவு? என்று கேட்டான். பணிப்பெண் பொறு மையிழந்து 65 செண்ட்டுகள் என்று பதில் அளித்தாள். அந்த சிறுவன், எனக்கு சிறிய ஐஸ் க்ரீம் கப் வேண் டும் என்றான். அவனுக்கு ஐஸ் க்ரீம் கிடைத்தது. பில் பணம் கொடுத்து விட்டு வெளி யேறினான். அந்த வெற்றுக் கப்பை எடுக்க வந்த பணிப் பெண், மனமுருகிப் போனாள். அந்த கப்புக்கு அடியில் பத்து ஒரு செண்ட் சில்லறை கள் டிப்ஸாக வைக்கப்பட்டி ருந்தது. அந்தச் சிறுவன் ஐஸ் க்ரீமை வாங்குவதற்கு முன்னால் அந்த பெண் ணுக்கு ஏதாவது தர எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும் , அக் கறையையும் காட்டிவிட்டான். அவன் தன்னைப் பற்றி எண் ணுவதற்கு முன்னால் பிறரைப் பற்றி எண்ணியிருக் கிறான். 

உடன்பிறப்பே, இந்தக் கதையை எதற்காக மேற்கோள் காட்டியிருக்கி றேன் என்பதையும் நீயே புரிந்து கொள்ள முயற்சி செய் . புரியும்"

(குறிப்பு: கடைசி பத் தியை அடிக்கோடிட்டு நாம் காட்டியுள்ளது கலை ஞர் எதை உடன் பிறப்புகளுக்கு கூறியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளத்தான்.)




ராவணனைக் காதலிக்கும் மணிரத்னத்தின் சீதை!

'அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாக… ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்டாக…!'


முன்குறிப்பு: இந்தச் செய்தி முழுக்க முழுக்க 100 சதவிகிதம் உண்மை. சும்மா தாமாஷாக இங்கே போட்டிருப்பதாக நினைக்க வேண்டாம். நற்பணிகள் செய்வதில் ஒரு தலைவராகத் திகழ்கிறார் விஜய் என்ற மிகப்பெரிய விஷயத்தை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் நேற்று மும்பையில் வைத்து அறிவித்துள்ளார்.

உள்ளூரில் சொல்லியிருந்தால், 'ஏய் சைலன்ஸ்… பேசிக்கிட்டிருக்கோம்ல' என்று மற்ற தலைவர்கள் சவுண்டு விடக் கூடும் என்பது புரிந்து மும்பையில் இதைப் பேசியிருப்பார் போலிருக்கிறது.

இந்தத் தேர்தலில் தன் மகனது ஆதரவு யாருக்கும் கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.  யாரெல்லாம் அவரது ஆதரவை இந்தத் தேர்தலில் கேட்டார்கள் என்ற உண்மை நமது சிற்றறிவுக்கு எட்டவில்லை. அதேபோல புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரசிகர்களுக்குப் பிறகு விஜய் ரசிகர்கள் மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள் என்ற உலக மகா உண்மையையும் அங்கே வெளிப்படுத்தியிருக்கிறார்.

சென்னைக்கு வந்தபிறகு யாராவது கேட்டால், 'அதுவா… இந்தப் பத்திரிகைக்காரனுங்க தப்புத் தப்பா எழுதிட்டாங்க!' என்றும் கூட மறுத்துவிட வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் ரகசிய வீடியோ எடுத்து யு ட்யூபில் ஏற்றிக் கொண்டே இருக்கவா முடியும்!

சரி.. சந்திரசேகரனின் முழுப் பேச்சையும் படியுங்கள்.

மும்பையில் விஜய் நற்பணி மன்றம் சார்பில் ஏழை மாணவர்கள் 2 பேருக்கு கம்ப்யூட்டரும், ஏழைகள் 10 பேருக்கு தையல் மிஷின்களை இலவசமாக வழங்கிய பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது:

"எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் ரசிகர்கள்தான் பொது நோக்கோடு ஏழை மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், தையல் மிஷின் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா மற்றும் மும்பை என பல்வேறு இடங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பது பெருமையாக உள்ளது. விஜய்யை நான் மகனாக பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு நற்பணிகள் செய்வதில் ஒரு தலைவராக செயல்பட்டு வருகிறார் விஜய். இப்போது எங்கு போனாலும் என்னை விஜய்யின் தந்தை என்றே சொல்கிறார்கள். அது எனக்குப் பெருமையாக உள்ளது.

ஆனால் வருங்காலத்தில் விஜய் தேர்தலில் நிற்பாரா என்று சொல்ல முடியாது. இந்தத் தேர்தலிலேயே நிறைய பேர் விஜய்யின் ஆதரவைக் கேட்டார்கள். ஆனால் இப்போதைக்கு எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்", என்றார்.
 
http://www.envazhi.com/?p=6471#comment-5152 இங்கனதான் இத சுட்டேன்.



ராவணனைக் காதலிக்கும் மணிரத்னத்தின் சீதை!

ர்ச்சை உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே மணிரத்னம் தனது படக் கதைகளை தேர்வு செய்கிறாரா அல்லது யாராவது திட்டமிட்டு அவர் படத்துக்கு எதிராக பிரச்சினை கிளப்புகிறார்களா தெரியவில்லை.

இதோ, அவரது அடுத்த படமான 'ராவண்' (தமிழில் அசோகவனம்) படமும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.

ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ராமாயணத்தை உல்டா செய்தது போல கதையை உருவாக்கியிருக்கிறாராம் மணிரத்னம்.

படத்தின் கதையும், பாத்திரப் படைப்பும் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பை ரகசியமாக நடத்தி வருகிறார் மணிரத்னம். ஆனாலும் அதையும் மீறி ராவண் கதை வெளியே கசிந்து விட்டது.

படத்தில் ராவணன் பாத்திரத்தில் விக்ரம் வருகிறாராம். சீதையாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம். ராமனாக பிருதிவிராஜும், ராவணன் தங்கை சூர்ப்பனகையாக பிரியாமணியும் தோன்றுவதாகக் கூறுகிறார்கள். இதனை பிரியாமணியும் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

நவீன காலத்துக்கு தக்கபடி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

விக்ரம் தங்கை பிரியாமணியை இம்சைப்படுத்தி அவர் சாவுக்கு காரணமாகிறார் போலீஸ் அதிகாரி பிருதிவிராஜ், அவரை பழி வாங்க அண்ணன் விக்ரம் சபதம் எடுக்கிறார். பிருதிவி ராஜுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடக்கிறது.

விக்ரம் உள்ளே புகுந்து ஐஸ்வர்யா ராயை முதலிரவுக்கு முன்பே கடத்திச் செல்கிறார். காட்டுக்குள் கொண்டு போய் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கிறார். ஆனாலும் ஐஸ்வர்யாராயிடம் அவர் தப்பாக நடக்கவில்லை. முதலில் விக்ரமை வெறுத்து அவரிடம் இருந்து தப்பிக்கப் போராடும் ஐஸ்வர்யா பிறகு அவர் தங்கை தனது கணவனால் பாதிக்கப்பட்ட விவரம் அறிந்து அமைதியாகிறார்.

அடர்ந்த காட்டுக்குள் தன் மேல் சிறு துரும்பு கூட படாமல் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கும் அவரது பண்பும் பிடிக்கிறது. கிளைமாக்சில் விக்ரம் மனம் திருந்தி ஐஸ்வர்யா ராயை கணவனிடம் ஒப்படைக்கிறார். ஆனால் பிருத்விராஜ் மனைவியை சந்தேகப்படுகிறார். இத்தனை நாள் காட்டுக்குள் ஒன்றாக இருந்திருக்கிறீர்களே? என்று சந்தேக வார்த்தைகளை கக்குகிறார். இதனால் கணவன் மேல் வெறுப்பாகும் ஐஸ்வர்யாராய்க்கு விக்ரம் மீது காதல் வருவது போல் முடிகிறதாம் கதை!

இந்த விவரங்கள் தெரிய வந்ததும், கொதித்துப் போய் உள்ளனவாம் இந்து அமைப்புகள். தேர்தல் முடிந்த கையோடு, அடுத்த டார்கெட் மணிரத்னத்தின் ராவணன்தான் என தோள்தட்ட ஆரம்பித்துள்ளதாம் பாஜக. 'அது ஏன் தேர்தல் முடியும் வரை… இப்போதே கிளம்பிட்டோம்ல!' என்று மணிரத்னத்துக்கு பிபியை எகிற வைத்துள்ளது ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள்.

இதைப் பற்றி என்ன நினைக்கத் தோன்றுகிறதென்றால், தேர்தல் காலத்தில் மக்களுக்கு வேண்டிய நன்மைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை!!
 
ஒன்றுக்கும் உதவாத (கவைக்கு உதவாத காரியம்) கருத்துகளைப் பற்றியே சிந்திக்க வேண்டும்! என்பதை உறுதி படுத்துவது போலிருக்கிறது.

http://www.envazhi.com/?p=6505





smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!